"பாகிஸ்தான் பிரதமராவதே எனது லட்சியம்" என தாலிபான்களால் தாக்கப்பட்ட சிறுமி மலாலா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதால், தாலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளான மலாலா. குணமடைந்து தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ள மலாலா கூறியிருப்பதாவது, நான் தாலிபான்களின் மிரட்டல்களுக்கு அஞ்சிய காலம் கடந்து விட்டது. முதன் முதலில் தாலிபான்களின் குண்டுகள் என் உடலை துளைத்த போது, நான் சாவை கண்டு அஞ்சினேன். தற்போது அந்த பயம் இல்லை. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாகிஸ்தானின் பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன். நான் முதலில், மருத்துவர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, பாகிஸ்தானில் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர் என மலாலா கூறியுள்ளார்.
|