திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை
பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது. இது கல்வியால் அறிதல் அரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பல நல்ல கற்றல் கடைத்தும் - பல நல்லநூல்களைக் கற்றபோதிலும்; மாணார்க்கு - சிறவாத பகைவர்க்கு; மனம் நல்லர் ஆகுதல் அரிது - மனந்திருந்தி உண்மை நண்பராகும் தன்மையில்லை. நல்ல நூல்கள் அறிவைப் பெருக்கி மனக்கோட்டந் தீர்க்கும் இலங்கு நூல்கள். "உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூல் மாண்பு" (நன். பொதுப்பா. 25). கற்றபின்பும் என்று பொருள்படுதலால் எச்சவும்மை. 'மன நல்லர்' எனச் சினைவினை முதல்வினைமேல் நின்றது. நல்லராகுதல் பகைமை நீங்குதல். இனநலமும் கல்விநலமும் மிகப் பெற்றவிடத்தும் தீய பிறவிக்குணம் நீங்காதவர் உலகிலிருத்தலால், 'மன நல்லராகுதல் மாணார்க் கரிது' என்றார்.
கலைஞர் உரை:
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
Translation
To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.
Explanation
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.