இது இயல்பான ஒரு படம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பாபநாசம் பார்க்கும் பொழுது த்ரிஷ்யம் படம் வந்து போக வில்லை , பாபநாசமாகவே வந்து போகிறது என்பதால் கமலையும் , இயக்குனரையும் பாராட்டலாம்.
நெல்லை வாழ்க்கையை திரைக்குக் கொண்டுவர உதவி இருக்கும் சுகா மற்றும் வட்டார வழக்கு மொழிக்கு ஏற்றவாறு வசனம் எழுதி இருக்கும் ஜெயமோகன் இவர்களின் பங்கு இந்தப் படத்தில் முக்கியமானது.பாடல்கள் கேட்கும் படி இல்லை என்றாலும் பின்னனி இசை கதைக்கு ஏற்றவாறு கொடுத்து தப்பித்துள்ளார் ஜிப்ரான்.
பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் அவர் மனைவி கவுதமி, தன் இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை என நகர்கிறது முற்பாதிக் கதை.மகள் பள்ளிக் கூடம் மூலம் சுற்றுலா செல்கிறார். அப்போது அவரைஅறியாமல் ஒரு சிக்கலில் மாட்டுகிறார்.அந்த சிக்கல் என்ன? பிறகு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது பிற்பாதிக் கதை.
4வது வரை மட்டுமே படித்த கமல் இதில் இருந்து எப்படி அவரது குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பது விறுவிறுப்பு .அதற்க்கு சினிமா படங்களில் இருந்தே வழி கண்டு பிடிப்பது என்ற உத்தி திரைக்கதையிலும் வெற்றி பெற்றுள்ளது.
கமலின் நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை,இந்தப் படத்தில் சுயம்புவாகவே வாழ்ந்திருக்கிறார். கமலைத் தவிர இந்தப் படத்தை வேறு யாரும் தமிழில் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்காது என்றே சொல்லலாம். கௌதமி,நிஜத்திலும் நிழலிலும் கமலுக்கு ஏற்ற ஜோடியே ஆனால் டயலாக்கில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது.
காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளாக வரும் அத்தனை பேரும் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம்.
டிஐஜியாக வரும் ஆஷா சரத்தும், அவர் கணவராக வரும் ஆனந்த் மகாதேவன் இருவரும் கமல் , கௌதமிக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்கள்.கலாபவன் மணி ,இளவரசு, எம்எஸ் பாஸ்கர், மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அத்தனை பேருமே தனக்கு கொடுத்த கதாப் பாத்திரத்தைச் சரியாக செய்துள்ளார்கள். அந்த விதத்தில் இயக்குனரோடு இவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
முதல் பாதி ஆமை வேகம் என்றாலும் , பிற்பாதி ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது படம்.கதை சொன்ன நேர்த்தியும் அருமை. ஒவ்வொரு சாதாரண மனிதனின் உள்ளேயும் இப்படி ஒரு போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் பாபநாசம் கொண்டாடப் பட வேண்டியது மட்டுமல்ல, இளைஞர்கள் எப்படி எல்லாம் கெட்டுப் போகக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்வதால் இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
பெரிய கட் அவுட் இல்லை , பால் அபிஷேகம் இல்லை , விசில் சத்தம் இல்லை , அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க வில்லை,பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டா எனத் தெரியவில்லை!! ஆனாலும் படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் இன்னும் குறைய வில்லை. இப்பொழுதான் தெரிகிறது என் அப்பா ஏன் கமல் ரசிகன் என்று!!
மொத்தத்தில் பாபநாசம் அனைவரும் மறக்காமல் பார்க்க வேண்டிய படம்.
விமர்சனத்தில் உதவி & நன்றி: மகேஷ் ( பிரின்ஸ் )
|