கேபிள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் சுயம்புலிங்கம் என்னும் கமல். இவருடைய முழு பொழுதுபோக்கு என்பது படம் பார்ப்பது மட்டுமே.
இதனால், அனைத்து மொழிகளும் இவருக்கு அத்துப்படி. படிப்பறிவு இல்லாதவர் என்றாலும், நிறைய சினிமா படங்களை பார்த்து தனது பொது அறிவை வளர்த்துக் கொள்வார்.
கமலுக்கு இரண்டு கண்களாக விளங்குவது தன் குடும்பம் மற்றும் தொழில். இவருக்கு அழகான மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி கௌதமியுடனும்(ராணி), குழந்தைகள் நிவேதா தாமஸ்(செல்வி), மற்றும் எஸ்தர்(மீனா) மீது பாசத்தை பொழிந்து வரும் கமல், பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஒருநாள் கமலின் மூத்த மகளான நிவேதா தாமஸ், பள்ளியில் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கு செல்கிறாள். அந்த சுற்றுலாவில் அருண் என்ற இளைஞன், நிவேதா தாமஸுக்கு தெரியாமல் அவளை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்கும்படி அவளை மிரட்டுகிறான். இல்லாவிட்டால், அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறுகிறான்.
கமல் வீட்டில் இல்லாதபோது ஒருநாள் இரவு கமலின் வீட்டுக்கு அந்த இளைஞன் வருகிறான். நிவேதா தாமஸிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். ஆனால், நிவேதா தாமஸோ இதில் துளியும் சம்மதமில்லாமல் அவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அப்போது, கௌதமி அங்கு வருகிறார். விஷயம் அறிந்ததும், அவளும் இளைஞனிடம் தன்னுடைய பெண்ணை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அப்போது அந்த இளைஞன், உனது மகளை விட்டுவிடுகிறேன். அதற்கு பதிலாக, நீ எனது ஆசைக்கு இணங்கு என்று கௌதமியிடம் கூறுகிறான்.
தனது அம்மாவை இழிவுபடுத்தியதால் கோபமடைந்த நிவேதா தாமஸ், அவனை ஒரு இரும்பு கம்பியால் தாக்க, அவன் அந்த இடத்திலேயே பிணமாகிறான். பின்பு, அவனுடைய பிணத்தை அந்த தோட்டத்திலேயே புதைக்கிறார்கள். அப்போது, கமலை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
மறுநாள் வீட்டுக்கு வரும் கமலிடம், இரவு நடந்த விஷயத்தை கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்கான முயற்சியில் களமிறங்குகிறார் கமல். அப்போது, இவர்கள் கொலை செய்தது ஐஜி, ஆஷா சரத்தின் மகன் என்பது கமலுக்கு தெரியவருகிறது. அப்போதுதான், இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பது கமல் குடும்பத்துக்கு புரிய ஆரம்பிக்கிறது.
தொலைந்துபோன தனது மகனை தேடும் முயற்சியில் ஆஷா, தனது போலீஸ் படையை களமிறக்குகிறார். அவர்கள் விசாரணையை பல கட்டங்களில் நடத்துகின்றனர். இறுதியில், இந்த பிரச்சினையில் இருந்து கமல் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே பாப்பநாசம் படத்தின் மீதிக்கதை.
ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகவும் விறுவிறுப்பாக மலையாள மூலம் த்ரிஷ்யம் படத்திற்கு நிகராக சில சமயங்களில் அதைவிடவும் நேர்த்தியாக படம் எடுத்துள்ளார்கள்.
கஞ்சத்தனமும், கறார்த்தனமுமாக ஒரு நடுத்தர அப்பாவி கிராமத்தானாக கமல் முதல் பாதியில் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இடைவேளைக்குப் பின் குடும்பத்துக்காக போராடும் ஒருவனாக, தான் பார்த்தப் படங்களிலிருந்து சூழலுக்குத் தேவையான விஷயங்களை கிரகித்து, தன் மூளையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் புத்திசாலியாக, உணர்வுரீதியாக திரையில் ஜொலித்திருக்கிறார் கமல்.
ஐஜியாக வரும் ஆஷா சரத், அந்த கதாபாத்திரத்திற்குண்டான மிடுக்குடன் வலம் வந்திருக்கிறார். கலாபவன் மணி கமலின் இளைய மகளை அடித்து மிதித்து உண்மையை வரவழைக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்ந்து கலங்கும் அளவிற்கு நடிப்பில் மிரட்டிவிட்டார். இளவரசு, அருள்தாஸ், டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ் போன்ற துணைப்பாத்திரங்கள் கதைக்கும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஜிப்ரான் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் பாபநாசம் பாசத்தின் சுவாசம்
|