சிறப்புத்தனியன் தேனேறு தாமரையா டிருமார் பன்றன் றிண்ணருளா லவனடியில் விவேகம் பெற்றிங் கூனேறு பவக்குழியை வெறுத்த தற்பி னூர்விரத்தி யுடன்வினையின் றிரளுக் கஞ்சிக் கூனேறு பிறையிறையோன் சாபந் தீர்த்தான் குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு வானேறும் வழிப்படிக ளடைவே கண்ட வண்புகழ்த்தூப் புல்வள்ள லருள்பெற் றோமே.
4.1: அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக் கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா னிடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.
4.2: கள்ள மனத்துடன் கண்டு முயன்ற கடுவினையா னள்ளிரு ளாழியி னற்சுவை யைந்தென நாடியவோ ரள்ளலி னாளும் விழுந்தழி யாவகை யாரணநூல் வள்ளல் வழங்கிய வான்படி யான வழியிதுவே.
4.3: அருவுருவானவையனைத் துமறிவாரேனும் அருங்கலைகள் கற்றுரைக்க வல்லாரேனுந் தரும வழியழியாமற் காப்பாரேனுந் தனிமறையின் தாற்பரியந்தருவாரேனும் இருவினையினொழுக்கத் தாலேவலோராது இங்கேநாஞ்சிறையிருந்த வீனந்தீர்க்குந் திருமகளார் பிரியாத தேவன் றிண்ணந் தேறாதார் திண்படியிலேறதாரே.
4.4: மறுத்தார் திருவுடன் மார்பிற்றதரித்வன் வாசகத்தை மறுத்தார் மயக்கமும் மற்றதனால் வந்தமாநரகு நிறுத்தார் பவத்தில் நெடுநாளுழன்றமை கண்டதனால் வெறுத்து, ஆரண நெறியே வெள்கியோடவிரைவர்களே.
4.5: வான்பட்ட மன்னிருளில் மயங்குமாறு மறித்தொரு காலெனை யூழி சென்றால் அன்றோர் ஊன்பட்ட வுடலாழி வினை யொழுக்கில் ஒருகரையுங் காணாதே யொழுகு மாறுந் தேன்பட்ட விடம்போலத்தித்திக்கின்ற சிறுபயனே யுறுபயனென்ற ருந்துமாறுந் தான்பட்ட படியிந் நேர்தானே கண்டு தளர்ந்திடு மேல்வளர்ந்திடுமே தக்கவாறே.
4.6: உலகத்துயர்ந்தவர் ஒன்றும்பயனிலு றுந்துயரும் அலகிற்படாத அப்போகங்கவர்ந்தெழுமம் புயத்தோன் கலகத் தொழில் மதுகைடபராற் படுங்கட்ட மெண்ணிற் பலகற்ற மெய்யடியார் படியாரிக்கடும்பவத்தே.
4.7: தந்திரங்கள ளவிலராய்த் தனத்தால் மிக்கதார் வேந்தர் தொழவைய மாண்டார் மாண்டார் சந்திரனுஞ்சூரியனும் வீயுங்காலந் தாரகையின் வடமுற்றுத், தனிவானாளும் இந்திரனுமேறுயர்த்த வீசன்றானும் ஈரிரண்டு முகத்தானுமில்லா வந்நா ணந்திருமால் நிலைகண்டார் நாகமெல்லா நரகென்று நற்பதமே நாடுவாரே.
4.8: துறவறமே துணிவார் துணுக்கற்ற விளந்துணிவோர் உறவிலராதலின் நாமுயர்ந்தாரு டனொன்றி நின்றோ மறவழி மாற்றி எம்மையலைத் தீர்த்தவர் மன்னருளாற் கறவையுகந்த பிரான் கழல் சூடுங்கருத்தினமே.
4.9: வந்தனபோல் வருவனவு மனந்தமாகி மாளாத துயர்தருவல் வினை நெருப்புக்கு இந்தனமாயெண்ணிறந்த காலமெல்லாம் இன்னமும் மிப்பவக்குழிக்கே யிழியா வண்ணம் வெந்ததொரு குழவியை நற்குமரனாக்கும் வெறித்துள வவித்தகனார் விதியே கொண்டார் பந்தனமா மவையனைத்தும் பாறுகைக்குப் பழ மறையின் பரம நெறி பயிலுவாரே.
4.10: கருமாலையில் வருங் கட்டங்கழிக் குங்கருத் துடையார் ஒருமால்பெருகும் யோகின் முயன்றும் அதன்றியு நந் திருமாலடியிணை திண் சரணாகுமெனவரித்துந் தருமாலினியவை தானேயெனத் தக வெண்ணுவரே.
4.11: முஞ்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்றன் செய்ய திருவருளா லிசைவு பார்த்துத் தழல்சேர்ந்த தூலமெனத் தானே தீர்த்துப் பின்செய்த வினையினினை வொன்றா தொன்றும் பிழைபொறுத்து வேறுளது விரகான் மாற்று மெஞ்செய்ய தாமரைக்கட் பெருமா னெண்ண மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே.
4.12: உறையிட்ட வாளென வூனு ளுறையு முயோகியரை நறைமட் டொழிவற்ற நற்றுள வேந்திய நாயகன்றா னிறைமட் டிலாத நெடும்பயன் காட்ட நினைந்துடலச் சிறைவெட்டி விட்டு வழிப்படுத் தும்வகை செய்திடுமே.
4.13: முங்கருவியீரைந்தும் மனத்திற்கூட்டி முக்கியமாமருத்திலவை சேர்த்து, அதெல்லாம் நன்குணருமுயிரினிற்சேர்த்து ஐம்பூத்ததை நண்ணுவித்துத் தான் றன் பால்வைக்கு நாதன் ஒன்பதுடன் வாசலி ரண்டுடைத் தாயுள்ளே ஒரு கோடிதுயர் விளைக்கு முடம்பா யொன்றும் வன் சிறையின் றலைவாசல் திறந்து நம்மை வானேற வழிபடுத்த மனமுற்றானே.
4.14: தெருளார் பிரமபுரத் திறைசேர்ந்து இடந்தீர்ந்தவர் தா மருளார் பிரமபுரச் சிறைதீர்ந்தபின் வந்தெதிர்கொண்டு அருளாலமரர் நடத்த இம்மாயயை கடந்த தற்பின் சுருளார் பவநரகச் சுழலாற்றின் சுழ்ற்சியிலே.
4.15: விழியல்லால் வேலில்லை விண்ணின் மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவற்கு மொழியல்லால முதில்லையென்றுமுன்னாண் முத்திவழி முனிந்தடைந்த மோகந்தீர்ந்தோங் கழியல்லாற் கடலில்லை யென்பார்போலக் காரியமே காரணமென்றுரைப்பார் காட்டும் வழியல்லா வழியெல்லங்கடந்தோம் மற்றும் வானேறும் வழிகண்டோ மகிழ்ந்திட்டோ மே.
4.16: வன்பற்றுடன் மயல் பூண்டு மற்றோர்கதியால், இனநாள் என்பற்றது பெறுந்தானமுமெத்தனை போதுளதாந் துன்பற்ற தன்றுணிவாற் றுயர்தீர்க்குந்துழாய் முடியான் இன்புற்ற நல்வழியால் ஏற்றுநற்பதமெண்ணுவமே.
4.17: பண்டையிருவினையாற்றிற் படிந்து பாரங் காணாதே யொழுகிய நாம் பாக்கியத்தால் வண்டமருமலர் மாதர் மின்னாய் மன்ன வைசயந்தி மணிவில்லாய் விளங்க, வான்சேர் கொண்டலருண் மழை பொழியவந்த தொப்பாங் குளிர்ந்து தெளிந்தமுதாய விரசை யாற்றைக் கண்டணுகிக் கருத்தாலே கடந்து மீளாக் கரைகண்டோ ர் கதியெல்லாங்கதித் திட்டோ மே.
4.18: பூவளருந்தி ருமாது புணர்ந்த நம்புண்ணியனார் தாவளமான தனித்திவஞ்சேர்ந்து தமருடனே நாவளரும் பெருநான் மறையோதிய கீதமெல்லாம் பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசையுடன்பாடுவமே.
4.19: அடலுரகமுண்டு மிழ்ந்தவருக்கன் போல வழுக்கடைந்து கழுவிய நற்றரளம் போலக் கடலொழுகிக் கரைசேர்ந்த கலமே போலக் காட்டுதீக் கலந்தொழிந்த களிறேபோல மடல்கவரு மயல்கழிந்த மாந்தர்போல வஞ்சிறைபோய் மன்னர்பதம் பெற்றார்போல உடன்முதலா வுயிர்மறைக்கு மாயைநீங்கி யுயர்ந்த பதமே றியுணர்ந்தொன்றினோமே.
4.20: மண்ணுலகில் மயல்தீர்ந்து மனந்ததும்பி மன்னாத பயனிகந்து, மாலேயன்றிக் கண்ணிலதென்றஞ்சியவன் கழலே பூண்டு கடுஞ்சிறை போய்க்கரையே றுங்கதியேசென்று விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக் கண்டு விண்ணவர்தங்குழாங்களுடன் வேதம்பாடிப் பண்ணுலகிற் படியாத விசையாற்பாடும் பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே
4.21: மாளாத வினையனைத்தும் மாளநாம் போய் வானேறி மலர்மகளாரன்பூணுந் தோளாத மாமணிக்குத் தொண்டுபூண்டு தொழுதுகந்து தோத்திரங்கள் பாடியாடிக் கேளாத பழமறையின் கீதங்கேட்டுக் கிடையாத பேரின்பம் பெருகநாளு மீளாத பேரடிமைக்கன்பு பெற்றோ மேதினியிலி ருக்கின்றோம் விதியினாலே.
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு : அடற்புள், கள்ளமன, அருவுரு-அனைத்தும், மறுத்தார், வான்பட்ட, உலகத்து, தந்திரங்களளவிலர், துறவறமே, வந்தன, கருமாலை, முஞ்செய்த, உறையிட்ட, முன்கருவி, தெருளார், விழியல்லால் வன்பற்றுடன், பண்டையிரு, பூவளரும், அடலுரகம், மண்ணுலகின், மாளாத, எண்டள.
|