|
||||||||
பரிபாடல்-5 |
||||||||
12. வையை
(கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, 'இல் வகைப்பட்ட
இன்பத்தை உடைய நின்னையும் நினைத்திலர்' என, வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, தோழி
இயற்பழித்தது.)
பாடியவர் :: நல்வழுதியார்
இசையமைத்தவர் :: நன்னாகனார்
பண் :: பாலையாழ்
வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,
விளிவு இன்று, கிளையொடு மெல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய 5
தகரமும், ஞாழ்லும், தாரமும், தாங்கி,
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு.
புனல் வரவு காண மகளிர் சென்ற வகை
'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு, 10
மின் அவிர் ஒளி இழை வேயு மோரும்,
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்
புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும், 15
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;
வாச நறு நெய் ஆடி, வான் துகள்
மாசு அறக் கண்ணாடி வயக்கி, வண்ணமும் 20
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையார்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
ஓசனை கமழும் வாச மேனியர், 25
மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்______
நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்
கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி, 30
ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;
நிவந்தது, நீத்தம் கரைமேலா: நீத்தம்
கவர்ந்தது போலும், காண்பவர் காதல். 35
கண்டவர் காணவருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்
முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை
கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் 40
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அத் தக அரிவையார் அளத்தல் காண்மின்.
கேட்டன கூறல்
'நாணாள்கொல்______தோழி! "நயன் இல் பரத்தையின் 45
தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும்,
'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50
ஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும்,
'சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின்: நிறை
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும்,
'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்; 55
நாணாள் அவனை, இந் நாரிகை என்மரும்_____
கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
'பிழையினை என்ன, பிழை ஒன்றும் காணான், 60
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.
'பார்த்தாள், ஒருத்தி நினை என, 'பார்த்தவளைப்
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து,
மெய்ச் சூள் உறுவானை, மெலியல், ' பொய்ச் சூள்' என்று,
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல; 65
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர, 70
நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல், எஞ்ஞான்றும்
வல்லதால், வையைப் புனல். 75
என ஆங்கு______
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை, 80
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே____ 85
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக் 90
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.
நீர்விழவின் சிறப்பு
துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று ;
'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை ;
உரையின் உயர்ந்தன்று, கவின் 95
போர் ஏற்றன்று, நவின்று ; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று ;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.
வையையை வாழ்த்துதல்
இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,
நன்பல நன்பல நன்பல--வையை!--
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே. 100
13. திருமால்
பாடியவர் :: நல்லெழுதியார்
இசையமைத்தவர் :: பெயர் அறியப்படவில்லை
பண் :: நோதிறம்
கடவுள் வாழ்த்து
திருமாலைத் தொழுவார் பெறும் பேறு
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்--
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் --தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.
எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20
நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25
பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்--
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!
புகழ்ந்து போற்றுதல்
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி; 45
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை-- 50
அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!-- 60
அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64
14. செவ்வேள்
(பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இம் பருவத்தே தலைமகன்
வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
பாடியவர் :: கேசவனார்
இசையமைத்தவர் :: கேசவனார்
பண் :: நோதிறம்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே, 5
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; 10
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15
பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! 20
அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் 25
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!--
விண்ணப்பம்
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக--
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! 32
15. திருமால்
பாடியவர் :: இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்
கடவுள் வாழ்த்து
திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10
சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.
திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துகா எனல்
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--
நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!
மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.
சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.
குன்றத்தில் பிறக்கும் ஓசைகள்
மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45
குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்
தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.
பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66
|
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|