LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- தியாக பூமி

முதல் பாகம் - கோடை-சீட்டுக் கச்சேரி

                                            சீட்டுக் கச்சேரி

 தஞ்சாவூர் ஜில்லாவில் குடமுருட்டிப் பாசனத்தில் உள்ளது நெடுங்கரைக் கிராமம்.

     வருஷம் 1918; மாதம் சித்திரை; தேதி ஞாபகமில்லை. அன்று வெயில் கொளுத்தும் உச்சி வேளையில், நெடுங்கரை அக்கிரகாரம் வழக்கம்போல் அமைதி குடிகொண்டு விளங்கிற்று.

     அக்கிரகாரத்தில் பெரிய தெரு என்றும், சின்னத் தெரு என்றும் இரண்டு தெருக்கள் உண்டு. பெரிய தெருவில் சுமார் இருபது வீடுகள் இருக்கும். தெருவின் நடுமத்தியிலுள்ள ஒரு வீட்டின் வாசல் திண்ணையில் வெயிலுக்கு அடக்கமாகத் தட்டி கட்டியிருந்தது. அந்தத் தட்டி மறைவில் சிலர் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

     ஒருவர் இஸ்பேட் ஆஸ் சீட்டை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்துவிட்டு, "ஏண்டா, வெங்கிட்டு! சம்பு சாஸ்திரி ஏண்டா இன்னும் வர்றலை? இந்த வருஷமும் கல்யாணம் நடக்காது போலிருக்கே?" என்றார்.

     "இன்னிக்கு வர்றார் என்று கேள்வி, சாமா! ரயிலடிக்குக் கூட வண்டி போயிருக்கே!" என்று வெங்கிட்டு என்கிற வெங்கட்ராமய்யர் சொல்லிவிட்டு, கீழே கிடந்த சீட்டுக்களையெல்லாம் எடுத்துக் கலைக்க ஆரம்பித்தார்.

     "இந்த வருஷங்கூடக் கல்யாணம் பண்ணாமற் போனா, அப்புறம் பெண்ணை ஆத்திலேயே வைச்சுக்க வேண்டியது தான்; ஏற்கனவே அது குதிரையாட்டமா வளர்ந்திருக்கு!" என்றார் சாமாவய்யர்.

     வெங்கட்ராமய்யர் சீட்டைக் கலைத்துப் படார் படார் என்று அடித்துவிட்டு, நாலு நாலு சீட்டாக போட்டார். பிறகு, "ரமணி! கேளேண்டா!" என்றார்.

     ரமணி ஐயர், "பிரயோஜனமில்லை, மேலே" என்றார்.

     அடுத்தவர், "கேள்வி" என்றார்.

     "மேலே பத்து" என்றார் அதற்கு அடுத்தவர்.

     "இன்னொரு பத்து" என்றார் வெங்கட்ராமய்யர்.

     "துருப்பு!" என்று கேட்டார் நாலாவது ஆசாமி. கொஞ்ச நேரம் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

     "நரசிங்கபுரம் வரனைத்தான் கடைசியிலே நிச்சயம் பண்ணிண்டு வருவா போலிருக்கு" என்றார் வெங்கட்ராமய்யர்.

     "ரமணி! மெதுவாய் அந்தச் சம்பந்தியின் விலாசத்தை மட்டும் நீ கொஞ்சம் தெரிஞ்சுண்டு வர்றணுண்டா!" என்றார் சாமா அய்யர்.

     "உனக்கு என்னத்துக்கடா அப்பா அந்த விலாசம்?"

     "என்னத்துக்கா? ஒரு மொட்டைக் கடுதாசி எழுதிப் போடலாம்னுதான்."

     "அந்தப் பாச்சாவெல்லாம் கல்கத்தாக்காரன் கிட்டப் பலிக்காது. மலை முழுங்கி மகாதேவனுக்குக் கதவு ஓர் அப்பளாம். அவன்கள் எல்லாம் சாதி ஆசாரத்தைவிட்டு எத்தனை நாள் ஆச்சோ!... இறங்கித் தொலையேண்டா, பஞ்சு! கிளாவர் ராணியைக் கையில் வச்சுண்டு ஏன் முழிச்சிண்டிருக்கே?"

     "அதுக்காக இல்லேடா! ஒரு கடுதாசி எழுதிப் போட்டுவச்சா, இன்னும் ஆயிரம் இரண்டாயிரம் பணமாவது கறக்கட்டுமேன்னு தான்! நான் சொல்றேன். கேளு, ரமணி! இந்தக் கல்யாண சமயத்திலே ஏதாவது ஒரு கலகம் பண்ணினால் ஒழிய, சம்பு சாஸ்திரிக்கும் புத்தி வராது. வர வர மனுஷன் பண்ணற அக்கிரமம் அதிகமாகப் போச்சு. குடியானத் தெருவிலே யாராவது இப்போ நாம் சொல்றபடி கேக்கறானா? எல்லாரும் இரண்டு படி கூலி கொடுத்தா, இவன் இரண்டரைப் படி கொடுக்கிறது. எல்லாரும் அஞ்சிலே ஒரு வாரம் கொடுத்தா இவன் நாலிலே ஒன்று கொடுக்கிறது. இப்படிப் பண்ணிப் பண்ணி ஊரைக் குட்டிச் சுவராய் அடிச்சிட்டான்..."

     "அதெல்லாம் சரிதானப்பா, அவன் செய்றது ரொம்ப அக்கிரமந்தான். ஆனால், நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ! கல்யாணத்தை மாத்திரம் நிறுத்தி விடாதே! அஞ்சாறு நாளைக்கு ஆத்திலே அடுப்பு மூட்டாமல் சௌக்கியமாய்ச் சாப்பிடுகிறதைக் கெடுத்துவிடாதே!"

     "ரமணி! பஞ்சு ஏன் இப்படிச் சொல்றான் தெரியுமோல்லியோ? அவன் ஆம்படையாள் மூணு மாதமாய் நலங்குப் பாட்டெல்லாம் நெட்டுருப் பண்ணிண்டிருக்கா. அதையெல்லாம் பாடித் தீர்த்துடணுமாம்."

     "கல்யாணம் நின்று போனால், பஞ்சுவுக்குக் கஷ்டம்; அடுத்தபடி ராமய்யா வாத்தியாருக்கு வருத்தம். ராமய்யா வாத்தியார் அவர் அம்மா வருஷாப்திகத்துக்கு இந்தக் கல்யாணத்தைத்தான் நம்பியிருக்கார்; தெரியுமோ இல்லையோ?" 

     "என்னை ஏண்டா இழுக்கறயள் உங்க வம்பிலே? நான் சிவ சிவான்னு இருக்கேன்" என்றார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராமய்யா வாத்தியார்.

     அப்போது ரமணி ஐயர், "சாமா! நீ இந்த விஷயத்திலே கொஞ்சங்கூடச் சிரத்தை எடுத்துக்க வேண்டாம். நம்ப தீக்ஷிதன் இருக்கான். எல்லாம் பார்த்துக்குவன். அவனுக்கு ஏற்கனவே சம்பு சாஸ்திரி மேலே கோபம், அவன் 'ஸெட்டில்' பண்ணிண்டு வந்து கிழவனுக்குப் பொண்ணைக் கொடுக்கலேன்னு" என்றார்.

     "தீக்ஷிதன் கூட இன்னிக்கு எங்கேயோ கிளம்பிப் போயிருக்கான். ஏதாவது வத்தி வைக்கத்தான் போயிருக்கானோ, என்னமோ?" என்றார் ராமய்யா வாத்தியார்.

     "என்னவெல்லாமோ சொல்லப் போயிட்டீர்களே தவிர, அந்தப் பெண் சாவித்திரி படற கஷ்டத்தைக் கவனிக்க மாட்டேங்கறயளே! எப்படியாவது அவளுக்கு ஒரு வழி பிறந்தாப் போதும் என்று எனக்கு இருக்கு. பாரு! மங்களம் அவளை என்ன பாடு படுத்தி வைக்கறா, பாரு!" என்றார் வெங்கட்ராமய்யர்.

     அப்போது, அந்த வீட்டுக்கு எதிர்ச்சாரியில், இரண்டு வீட்டுக்கு அடுத்த விட்டிலிருந்து, ஒரு ஸ்திரீயின் குரல், "அடியே சாவித்திரி! உன்னைக் கட்டையிலே வைக்க! இங்கே உடனே வர்றயா இல்லையா?" என்ற கூச்சலிடும் சப்தம் கேட்டது.

     சாமா அய்யர், "சாவித்திரி மாத்திரம் ஏதோ பரம சாது என்று எண்ணாதேடா, வெங்கிட்டு! அது பொல்லாத வாய்த் துடுக்கு!" என்றார்.

     "போகிறது; மங்களத்துக்குப் பரிந்து பேச நீ ஒருவனாவது இருக்கியே?" என்றார் ரமணி ஐயர்.

     "போடா! இது என்ன ஆட்டண்டா! சீட்டை நேரப் பிடிக்கிறதா தலை கீழாப் பிடிக்கிறதா என்று தெரியாதவனோடெல்லாம் ஆட வேண்டியிருக்கு!" என்று சொல்லி, சாமாவய்யர் கையில் இருந்த சீட்டுகளைக் கீழே விட்டெறிந்தார். எல்லாரும் அவரவர்கள் சீட்டுகளைத் தரையில் தொப்பு தொப்பென்று போட்டார்கள்.

     "பட்டாபிஷேகத்துக்குப் பயந்துண்டு போட்டுட்டயாக்கும். சரி, சரி, ஆட்டம் போறும்; அவாவாள் ஆத்துக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கோ!" என்று வெங்கட்ராமய்யர் சொல்லிச் சீட்டுகளை எடுத்துச் சேர்த்தார். கச்சேரி முடிந்தது! ஒவ்வொருவராய் எழுந்து சென்றார்கள். 

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.