LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- தியாக பூமி

இரண்டாம் பாகம் - மழை-வண்டி வந்தது!

                                        வண்டி வந்தது!

சமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி - புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி - புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

     சொர்ணம்மாள், "நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ! பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு! உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா? நீயும் பேசாம இருக்கயே?" என்றாள்.

     அதற்கு மங்களம், எரிச்சலாக, "என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே! அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே? இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே?" என்றாள்.

     "நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு? சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா? உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா? நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ?"

     "அதோடே போனாத் தேவலையே? இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்!"

     "ஐயையோ! நெஜந்தானாடி? இதென்ன அநியாயம்? இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே? இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே?"

     "கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்"

     "நான் சொல்றேன் கேளு, மங்களம்! இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்"

     இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், "அக்கா! இது யாருக்கு? இது உனக்கா? இதுதான் மாப்பிள்ளைக்கா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.

     இந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். "ஏன், சித்தி! வண்டி வரலாச்சே..." என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, "சீ" என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.

     இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. "ஏண்டி சாவித்திரி! உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி! அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும்? இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா? அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா?" என்றாள்.

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.