அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க காந்தளம் கடுக்கை கனல்தனம் மலர கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப வான்புறம் பூத்த மீன்பூ மறைய (5)
கோபம் ஊர்தர மணிநிரை கிடப்ப தென்கால் திகைப்ப வடகால் வளர பொறிவிழிப் பாந்தள் புற்றளை வதிய வரிஉடல் ஈயல் வாய்தொறும் எதிர்ப்ப இடிக்குரல் ஆனேற் றினம்எதிர் செறுப்ப (10)
பொறிக்குறி மடமான் சுழித்தலைக் கவிழ முடையுடல் அண்டர் படலிடம் புகுத கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப காயாக் கண்கொள முல்லை எயிறுற முசுக்கலை பினவுடன் முழையுறை அடங்கக் (15)
கணமயில் நடன்எழ காளி கூத்தொடுங்க சாதகம் முரல்குரல் வாய்மடை திறப்ப மாக்குயில் மாழ்கிக் கூக்குரல் அடைப்ப பனிக்கதிர் உண்ணச் சகோரம் பசிப்ப உடைநறவு உண்டு வருடை வெறுப்ப (20)
அகில்சுடு பெரும்புனம் உழுபதன் காட்ட வெறிவிழிச் சவரர் மாஅடி ஒற்ற மணந்துடன் போக்கினர்க்கு உயங்குவழி மறுப்ப புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப குழவிஅம் கதிர்பெறத் திருமலர் அணங்க (25)
இனத்தொடு கயிரவம் எதிர்எதிர் மலர குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற நிலமகள் உடலமும் திசைகளும் குளிர ஒலிகடல் இப்பி தரளம் சூல்கொள இவைமுதல் மணக்க எழுந்தகார் கண்டை (30)
வறுநீர்மலர் என மாழ்கலை விடுமதி மறைஅடி வருத்திய மறைவனத்து ஒருநாள் மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக்கு இருவகை ஏழ்எனும் திருஉலகு அனைத்தும் கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல (35)
இருபுறம் போற்ற ஒருதேர் வரத்தினர்க்கு ஒன்னலர் முற்றி ஒருங்குபு படர பாசறை சென்ற நாள்நிலம் குழிய எண்ணி விரல்தேய்ந்த செங்கரம் கூப்புக கொய்தளிர் அன்ன மேனி மொய்இழை பூத்த கவின்மலர்க் கொடியே! (41)
|