திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
தேவநேயப் பாவாணர் உரை:
காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்-காமத்தேவன் காமவின்பம் நுகர்தற்குரிய இருபாலாரிடத்தும் ஒப்பநில்லாது, பெண்பாலாரிடத்து மட்டும் நின்று காதலை யுண்டுபண்ணுவான்; பருவரலும் பைதலும் காணான் கொல்-அவர் பசலையுற்றும் படர்மிகுந்தும் துன்புறுதலையும் மனம் நோதலையும் கண்டறியானோ? எல்லாரிடத்தும் ஒப்பநின்று ஒழுகவேண்டியவன் நடுநிலை திறம்பியும், காம வினைக்குத் தலைமை பூண்டவன் காம நுகர்ச்சிக்குரிய இருவரிடத்து மன்றி ஒருவரிடத்து மட்டும் காதலையுண்டுபண்ணிக் கடமை தவறியும் வினையறியாதும், ஆடவரை விட்டுவிட்டு மெல்லியலாரையே இரக்கமின்றி வருத்தியும், கொடுமை செய்து திரிபவனும் ஒரு தெய்வமோ? மாந்தரும் தெய்வமும் ஒரு சேரக் கைவிட்டபின் நான் உய்யுமாறென்னை யென்பதாம்.
கலைஞர் உரை:
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?.
Translation
While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown? .
Explanation
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?.
Transliteration
Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman
Oruvarkan Nindrozhuku Vaan
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்