பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல். இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதைமை என்பது ஒன்று யாது எனின் - பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல் - தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல். கேடுதருவன வறுமை, நோய் , அறங்கடை (பாவம்) பழி, அறியாமை , பகை முதலியன. ஆக்கந் தருவன செல்வம் , உடல் நலம் , அறம் , புகழ் , அறிவு , நட்பு முதலியன. ஆகவே , பேதைமை யென்பது தானே இருமையின்பமும் புறக்கணித்தல் என்பதாம்.
கலைஞர் உரை:
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
Translation
Familiarity What one thing merits folly's special name.
Letting gain go, loss for one's own to claim!.
Explanation
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.