பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர். இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பது படச் சொல்லியது.) துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா- எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம். அவர் நம்மைக் கூடாவாறு பிரிந்து போனமையாலும், நாம் அவரை மறக்க முடியாமையாலும், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம். ஆதலால், அவரை மறந்தாற்றுதலே நன்றென்பதாம்.
கலைஞர் உரை:
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
Translation
To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say.
Explanation
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.