திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பேதையார் கேண்மை பெரிது இனிது-பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை. "பேயொடுங் கூடிப் பிரிதலோ வரிதே". "பரீ இ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு மரீ இப் பின்னைப் பிரிவு." [நாலடி. 220] ஆதலால், பழகினவரை விட்டுப் பிரிதலென்பது பொதுவாகத் துன்பந் தருவதே, ஆயின், பேதையார்நட்பு வரவரத் தேய்ந்துவருதலாலும் யாதொரு நன்மையுஞ் செய்யாமையாலும், அவரை விட்டுப் பிரிதல் எள்ளளவுந் துன்பந் தராததாம். இதனால், அறிவுடையோர் நட்பாயின்அவர் பிரிவின்கண் பெரிதுந் துன்பம் தருமென்பது,எதிர்நிலை யளவையாற் பெறப்படும் . பேதையாரைப் புகழுவதுபோற் பழித்தலால், இது வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாம் .
கலைஞர் உரை:
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.
Translation
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.
Explanation
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.