கக்கன் அவர்களது மகள் திருமதி . கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள்
த ன்னலம் அற்ற தன்னிகரில்லாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களை , நானும் என் சகோதர்களும் ‘பெரியப்பா’ என்றுதான் அழைப்போம் . நாங்கள் அப்படி அழைக்கும் போதெல்லாம் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு அவர் பூரிப்போடு சிரிப்பார் . அவருடன் மகளைப் போல் நான் பழகி வந்தேன் .
இந்த மகளுக்காக , முதலமைச்சராகிய அவர் ஒரு நாள் , சென்னை - கோட்டையிலிருந்து வரும்போது வழியில் காரை நிறுத்தி , என்னை ஏற்றிச் சென்ற நிகழ்ச்சி இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது .
என் தந்தையாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருடைய வாழ்க்கைப் பாதையின் சில நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தொகுத்து எழுதும்பொழுது , ‘ பெரியப்பா’ காமராஜர் அவர்கள் என்மீது பொழிந்த பாசத்தின் வெளிப்பாடான அந்த நிகழ்ச்சியையும் தொட்டுக்காட்டத் தோன்றுகிறது .
சென்னை - லேடி வெல்லிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நான் 7 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்த சமயம் . மாலையில் பள்ளி முடிந்தபின் , பேருந்துக்காகக் கடற்கரைச் சாலை ஓரமாக மழைத் தூறலில் நின்றுகொண்டு இருந்தேன் . அப்போது முதலமைச்சராக இருந்த திரு . காமரஜர் அவர்கள் தம் வீட்டுக்குச் செல்ல காரில் வந்துகொண்டு இருந்தார் . வேகமாக ஓடிய அந்தக் கார் பின்புறமாகத் திரும்பி வந்தது .
பெரியப்பா அவர்கள் , “ கஸ்தூரி ! காரில் ஏறு !” என்று சிறிது அதட்டுகின்ற குரலில் கூப்பிட்டார் . நானும் உடனே காரில் ஏறிவிட்டேன் .
“நான் பெரியப்பா போகிறேன் . நீயோ மழையில் நனைந்துகொண்டு பள்ளிக்கு முன்னால் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறாய் . ஏன் இந்தக் காரைப் பார்த்ததும் நிறுத்தவில்லை” என்று அவர் கேட்டார் .
“நீங்கள் ‘சீஃப் மினிஸ்டர்’ ( முதலமைச்சர் ) நான் எப்படி உங்கள் காரை நிறுத்த முடியும்“ என்று பதிலுக்கு அவரிடம் கேட்டேன் .
அவரோ சிரித்துக்கொண்டே , “ சரி … சரி … நீயும் விவரம் தெரிஞ்ச பெண்ணாத்தான் இருக்கே !” என்று , எங்கள் வீடு வரும்வரை பேசிக்கொண்டே வந்தார் . எங்கள் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி என்னை இறக்கிவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் மனத்தில் பதிந்துள்ளன .
“நான் கூப்பிட்டேன் என்று உடனே நீ காரில் ஏறிவிட்டாய் . இது சரிதான் . ஆனால் வேறு யாரும் கூப்பிட்டால் ஏறக்கூடாது !” என்று , ஒரு தந்தைக்கே உரிய வாஞ்சையுடன் அவர் கூறினார் . இதை என் தந்தையார் திரு . பூ . கக்கன் அவர்களிடம் நான் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் .
“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
ஈங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் !”
என்னும் விடுதலைக் கவிஞர் பாரதியாரின் பாட்டு என் நினைவுக்கு வந்தது .
பெருந்தலைவர் திரு . காமராஜர் அவர்கள் என்னுடைய தந்தையைப் பொதுவாழ்வில் எல்லா நிலைகளிலும் முன்னிலைப்படுத்தி , அமைச்சராகவும் அறிமுகப்படுத்தியவர் . எனவே , அந்த மாமனிதர் ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இக்கட்டுரையைக் காணிக்கையாகப் படைக்கிறேன் .
“எல்லோரையும் எளிதில் நம்பி விடாதே !
நீ கேட்டது என்பதற்காக எதையும் நம்பாதே !”
– புத்தர்
|