க க்கன்ஜியின் தகப்பனார் பெயர் பூசாரிகக்கன் . தாயார் பெயர் குப்பி . இவர்தம் முன்னோர்கள் தஞ்சை மாவட்டத்தில் , திருவாரூருக்கு அருகிலுள்ள கர்காற்குடி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் . இவர்தம் தகப்பனாருக்கும் , தாயாருக்கும் 1901- ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது . தாயார் குப்பி , தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் . திருமணமானவுடன் தாயும் , தந்தையும் தும்பைப்பட்டிக்கே குடிபெயர்ந்தனர் .
இத்தம்பதியினருக்கு நான்கு ஆண் மக்கள் . மூத்த மகன் பர்மாவில் தனது 15- ஆம் வயதில் இறந்து விட்டார் . இரண்டாவது மகன் வடிவேல் மூன்று வயதில் காலரா நோயினால் காலமானார் . மூன்றாவது மகன் தான் கக்கன்ஜி . இவர் 18.06.1909 ஆம் நாள் பிறந்தார் . நான்காவது மகன் பெரியகருப்பன் என்பவர் , தற்சமயம் தும்பைப்பட்டியிலுள்ள வீரகாளி அம்மன் கோவில் பூசாரியாகப் இருந்தார் .
தும்பைப்பட்டி வீரகாளி அம்மன் கோவில் , கள்ளர் நாட்டில் புகழ்பெற்றது . தும்பைப்பட்டிக் கள்ளர்களின் திருவிழா இன்றும் இக்கோவிலை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது . கக்கனின் தகப்பனார் , இறையுணர்வு மிக்கவராகவும் கண்ணியமானவராகவும் தனித்து விளங்கியதால் , கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள் அவரை வீரகாளியம்மன் கோவில் பூசாரியாக ஏற்றுக் கொண்டார்கள் . சாதிக்கொடுமைகளும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த அந்தக் காலத்தில் நாட்டுக்கள்ளர்கள் ஓர் அரிசன வகுப்பைச் சார்ந்தவரைப் பூசாரியாக ஏற்றுக்கொண்டு , பயபக்தியுடன் அவர் கையால் திருநீறு வாங்கிப் பூசிக்கொள்ளும் பழக்கம் அக்காலத்திலேயே இருந்து வந்தது என்றால் இதில் பாராட்டிற்கு உரியவர்கள் இருதரப்பினருமே ஆவார்கள் . குறிப்பாகக் கக்கனின் தகப்பனாரின் ஆளுமைத்திறன் , ஆன்மீக உணர்வு , கண்ணியமிக்க தூயவாழ்வு ஆகியன அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது என்பதை இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும் .
கக்கன் , ஒன்பது வயதுடைய சிறு பையனாக இருந்தபோது அவரைப் பெற்ற தாய் 1918- ஆம் ஆண்டு மரணமடைந்தார் . பின்னர் 1920- ஆம் ஆண்டு , இவர்தம் தகப்பனார் , முதல் மனைவியின் தங்கை பறம்பி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் . இவர் மூலம் மேலும் நான்கு மகன்கள் பிறந்தார்கள் . மூத்தமகன் வெள்ளைக்கக்கன் என்பவர் காதி போர்டின் இயக்குநராகப் பணியாற்றியவர் . இரண்டாவது மகன் முன்னோடி என்பவர் தென்னக ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார் . கக்கன்பற்றிய நூலை எழுதுவதற்கு மிகவும் தூண்டுகோலாய் அமைந்தவர்களில் இவரும் ஒருவர் . மூன்றாவது மகன் வடிவேல் என்பவர் , ‘ மதுரா கோட்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியவர் . தற்சமயம் சமுதாயப் பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் அரசியல் பிரமுகராகவும் விளங்கி வருகின்றார் . இந்நூல் ஆசிரியரின் நீண்ட கால நண்பரும் ஆவார் . இவரின் மகள் கீதா வரலாற்றில் எம் . பில் . பட்டம் பெறக்காத்துக் கொண்டிருக்கிறார் . தனது பெரியப்பா கக்கன்ஜியின்பால் மிக்க நாட்டம் கொண்டு அவரைப்பற்றி ஆய்வுகள் செய்துள்ளார் . மேலும் விரிவான ஆய்வை மேற்கொண்டு , அதன் மூலம் முனைவர் பட்டம் பெறும் தகுதிகளையும் இவரிடம் காண முடிகிறது . நான்காவது மகன் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறார் . கக்கன்ஜி தனது சின்னம்மா மீதும் , சகோதரர்களின் மீதும் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார் . இவர்தம் தந்தை , தனது 92- ஆம் வயதில் , 1957 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் .
|