|
|||||
இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம் |
|||||
வருங்கால வைப்பு நிதியான பி. எஃப். கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறையின் சார்பில், ‘பான் 2.0’ என்ற பெயரில் நிரந்தரக் கணக்கு எண்ணுக்கான மின்னணு வசதிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதுபோலவே, ‘பி.எப்., 3.0’ என்ற பெயரில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாத ஊதியத்தில் தற்போது தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சரிசமமாக 12 சதவீதத்தை பி.எப்., கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கான உச்ச வரம்பை மட்டும் நீக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பாதுகாப்பான மற்றும் அதேநேரம் நிதிச் சந்தையில் நியாயமான வட்டி கிடைக்கக்கூடிய பி.எப்., தொகையை, தொழிலாளர் விரும்பினால் கூடுதலாகவும் சேமிக்க இது வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், தொழிலாளர் 12 சதவீதத்துக்குக் கூடுதலான தொகையை பி.எப்., கணக்கில் சேமித்தாலும், நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் செலுத்த வேண்டிய விதிமுறையில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், பி.எப்., கணக்குக்கு, ‘டெபிட் கார்டு’ போல அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப்., பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற விண்ணப்பித்து, ஒப்புதல் கிடைத்ததும், ஏ.டி.எம்-ல் தொகையைத் தேவைக்கேற்பச் சந்தாதாரர் எடுத்துக்கொள்ள இது வழிவகை செய்யும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப். கணக்குகள் இருப்பதாகத் தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது.
|
|||||
by hemavathi on 12 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|