நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக் காலால் தடுத்துக் கனன்று எதிர்கறுத்தும் நனிநிறை செல்வ நாடும் நன்பொருளும் எதிர்பெறின் கண்சிவந்து எடுத்தவை களைந்தும் தாமரை நிதியமும் வால்வளைத் தனமும் (5)
இல்லம் புகுதர இருங்கதவு அடைத்தும் அரிஅயன் அமரர் மலைவடம் பூட்டிப் பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும் மெய்யுலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் (10)
எழுகதிர் விரிக்கும் மணிகெழு திருந்திழை நின்பிரிவு உள்ளும் மனன்உளன் ஆகுக முழுதுற நிறைந்த பொருள்மனம் நிறுத்திமுன் வேடம் துறவா விதியுடைச் சாக்கியன் அருட்கரை காணா அன்பெனும் பெருங்கடல் (15)
பலநாள் பெருகி ஒருநாள் உடைந்து கரைநிலை இன்றிக் கையகன் றிடலும் எடுத்துடைக் கல்மலர் தொடுத்தவை சாத்திய பேரொளி இணையாக் கூடல் மாமணி குலமலைக் கன்னியென் றருள்குடி யிருக்கும் (20)
விதிநெறி தவறா ஒருபங்கு உடைமையும் பறவை செல்லாது நெடுமுகுடு உருவிய சேகரத்து உறங்கும் திருநதித் துறையும் நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் அருங்கரை இறந்த ஆகமக் கடலும் (25)
இளங்கோ வினர்கள் இரண்டறி பெயரும் அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப் பறந்தும் அகழ்ந்தும் படியிது என்னாது அறிவகன்று உயர்ந்த கழல்மணி முடியும் உடைமையன் பொற்கழல் பேணி அடையலர் போல மருள்மனம் திரிந்தே. (31)
|