*"தாய்மொழி வழிக் கல்வியால் தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும்" தமிழறிஞர் கருத்து ,+ 2 வரைதமிழ்மொழி வழிக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தமிழாசிரியர்கள், தமிழறிஞர்கள் கோரிக்கை*
மொழி என்பது கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யும் கருவி மட்டுமல்ல.அது நம் அடையாளம். உணர்வோடும் உறுதியான பிணைப்புடையது தாய்மொழி. தமிழகத்தில் தாய்மொழி அறிவு குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் சிந்தனை வளமாக தாய்மொழியில் அவர்கள் கற்க வேண்டும் என்று தமிழறிஞர் டாக்டர். அவ்வை நடராசன் கூறியுள்ளார்.தமிழக அரசு +2 வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் பேராசிரியர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழறிஞர் அவ்வை நடராஜன்
பொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தாய்மொழி என்பது நம் அனைவரின் மனதோடும் உணர்வோடும் கலந்த ஒன்றாகும்.அந்த மொழியில் பேசுவது, எழுதுவது, எண்ணுவது எளிமையாகவும் முழுமையாகவும் அமையும் என்பதை தொடர்ந்து அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாய்மொழிவழி கல்வியால் தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும். எனவே பெற்றோர்களும் தயக்கங்களைக் கலைந்து ஆர்வத்துடன் தமிழ்வழியில் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும் .
பேராசிரியர் வி.கோமதி நாயகம்
ஒரு குழந்தை தனது பள்ளிக் கல்வியை தாய்மொழி வழியாக படித்தால் தனது திறனறிந்து ஆளுமையை வெளிக் கொணர்வது எளிதாக அமையும்.சீனா, ஜப்பான் ,கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாய்மொழி வழிக் கல்விக்கு தான் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழி மீதான மோகத்தால் குழந்தைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடுகிறோம். அதன் விளைவு தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் தற்போது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கூட பிழையின்றி தமிழ் எழுத தெரியாத நிலையே உள்ளது. இந்தச் சூழலில் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் அறிமுகம் செய்தால் முழுமையாக பலன் தராது.
எனவே சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு வரையேனும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இது தவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப் பாடங்களை முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகளாக எழுதும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.அதனுடன் தமிழ் படிப்புக்கான பாடத் திட்டத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். அதேநேரம் ஆங்கில மொழியை சரளமாக பேசவும் எழுதவும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.
தமிழக தமிழாசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் ஜெ.கங்காதரன்
பெற்றோர் தமிழ் மொழியை நமது அடையாளமாக எண்ணாமல் பள்ளியில் ஒரு பாடமாகப் பார்க்கும் கண்ணோட்டம் தான் சிக்கலுக்கு அடித்தளமிடுகிறது. பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஆங்கில வழியில் படிக்க வைக்கின்றனர். கல்விக் கட்டணம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆறாம் வகுப்பில் தான் தமிழ்வழிக் கல்விக்கு வருகின்றனர். அவ்வாறு சேரும் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் பற்றிய புரிதலும் முழுமையாக இருப்பதில்லை. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதால் மாணவர்கள் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டாலும் சிக்கல் எழாது.அவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும்பொது தடுமாற தொடங்குகின்றனர்.வேறு வழியின்றி பாடங்களை புரிந்து படிப்பதற்குப் பதிலாக மனப்பாடம் செய்து தேர்ச்சி நிலையை நோக்கி செல்ல தொடங்குகின்றனர். இந்த முழு புரிதலற்ற தன்மை மாணவர்களின் உயர்கல்வி வரை சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஒரு அரசு பள்ளியை சுற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் தனியார் பள்ளி இயங்க அனுமதி வழங்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு உயர்கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதுதவிர உயர்கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்குஇட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் .அதேபோல் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணர்வார்கள். இவ்வாறு அவர்கள் தம் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
|