கோடிய கோலினன் செருமுகம் போல கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுக பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல் புட்குலம் பொய்கை வாய்தாழ்க் கொள்ள வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி (5)
இருள்மகள் கொண்ட குறுநகை போல முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ தணந்தோர் உளத்தில் காமத் தீப்புக மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர்விட அன்றில்புற் சேக்கைபுக்கு அலகுபெடை அணைய (10)
அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க முதுகனி மூலம் முனிக்கணம் மறுப்ப கலவையும் பூவும் தோள்முடி கமழ விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப (15)
நீரர மகளிர் செவ்வாய் காட்டிப் பசுந்தாட் சேக்கோள் ஆம்பல் மலர தோளும் இசையும் கூறிடும் கலையும் அருள்திரு எழுத்தும் பொருள்திரு மறையும் விரும்பிய குணமும் அருந்திரு உருவும் (20)
முதல்என் கிளவியும் விதமுடன் நிரையே எட்டும் ஏழும் கொற்றன ஆறும் ஐந்தும் நான்கும் அணிதரு மூன்றும் துஞ்சலில் இரண்டும் சொல்அரும் ஒன்றும் ஆருயிர் வாழ அருள்வர நிறுத்திய (25)
பேரருட் கூடல் பெரும்பதி நிறைந்த முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார் தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவும் துறவால் அறனால் பெறலில் மாந்தர் விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும் (30)
செக்கர்த் தீயொடு புக்கநல் மாலை! என்னுயிர் வளைந்த தோற்றம் போல நாற்படை வேந்தன் பாசறை யோர்க்கும் உளையோ? மனத்திறன் ஓதுகவே. (34)
|