கல்கியின் கைவண்ணத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் பேரரசன் ராஜராஜ சோழன். இவனுடைய வீரம் செறிந்த காதல் கலந்த இளமைக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் "பொன்னியின் செல்வன்". இந்த தேனினும் இனிய இந்நாவல் மூலம் இளந்தமிழர்கள் -தமிழச்சிகளின் இதய சிம்மாசனத்தில் குணக்குன்றாம் ராஜராஜனை நிரந்தரமாக அமர வைத்தவர் நூலாசிரியர் பேராசிரியர் கல்கி.
மகத்தான இப்படைப்பை "காமிக்ஸ் "புத்தக (தமிழ், ஆங்கில மொழிகளில்)வடிவில் கொண்டுவர சரவணராஜாவின் நிலா காமிக்ஸ் முடிவு செய்தது. திட்டமிட்டபடி, அண்மையில் சென்னையில் நடைபெற்ற ராஜராஜன் பிறந்த தினவிழாவின்போது முதல் தமிழ் காமிக்ஸ் புத்தகம்(2அத்தியாயங்கள் கொண்டது) வெளியிடப்பட்டது.அடுத்தடுத்த புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.பிறமொழிமக்களும் சுவைக்கும் வகையில்,இந்நாவலின் முதல் ஆங்கில காமிக்ஸ் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் 27.11.17, அன்று மாலை நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர் அவ்வை ந.அருள், முதல் புத்தகத்தை வெளியிட்டார். முனைவர் இறையரசன், சின்சினாட்டி மாகாண தமிழ் சங்கத் தலைவர் சுபத்ரா சுரேஷ், கல்லூரிக் கல்வி முன்னாள் இணைஇயக்குனர் மதிவாணன், மொழிபெயர்ப்புத் துறை முன்னாள் துணை இயக்குனர் ஜி. பாலகிருஷ்ணன், கவிஞர் ஆனைவாரி ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிலா காமிக்ஸ் சரவணராஜா நன்றியுரை நவின்றார்.
ஆங்கில "காமிக்ஸ்" க்கு மொழிபெயர்ப்பு செய்தவர் பத்தாம் வகுப்பு மாணவி நிலா என்பது குறிப்பிடத்தக்கது. சரவணராஜாவின் மகளான இவரை விழாவுக்கு வந்திருந்த அறிஞர்கள் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர்.
|