LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1002 - குடியியல்

Next Kural >

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம். இது தீக்கதியுள் உய்க்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொருளான் எல்லாம் ஆம் என்று - செல்வமொன்று மட்டுமிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகுமென்று கருதி ; ஈயாது இவறும் மருளான் - அதைப் பிறர்க்கீயாது இறுகப் பற்றும் மயக்கத்தினால் ; மாணாப் பிறப்பு ஆம் - இழிவான பிறப்பு உண்டாம். இம்மைக்கும் மறுமைக்கு முரிய வினையின்பங்கள் யாவும் அடங்க ' எல்லாம் ' என்றார். மருளாவது செல்வம் நிலையானதென்றும் , பிறர்க்கு ஈவதாற் குறைந்துவிடுமென்றும் கருதுதலும் ; "செல்வம் சகடக்கால் போல வரும் " என்றும் (நாலடி.2) , செல்வத்துப் பயனே யீதல் (புறம். 189) "ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்" என்றும் , இம்மைச் செய்தது மறுமைக் காம் (புறம்.134) என்றும் , அறியாமையுமாம், மாணாப் பிறப்பாவன. சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் கூனுங் குறளு மூமுஞ் செவிடும் மாவும் மருளும் (புறம்.28) என்னும் எண்பேரெச்சமும் அலியுமாம்.இனி ,வீணாகப் புதையலைக் காக்கும் பேயும் பூதமும் எனினுமாம்.
கலைஞர் உரை:
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
சாலமன் பாப்பையா உரை:
பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.
Translation
Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings.
Explanation
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.
Transliteration
Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum Marulaanaam Maanaap Pirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >