பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 123வது ஆண்டு தினத்தை யொட்டி, பென்னிகுக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென் தமிழகத்தின் விவசாயத்தை மேம்படுத்தவும், குடிநீர் தேவைக்காகவும் கர்னல் பென்னிகுக் முயற்சியால், 1895ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை தமிழக பகுதிக்கு திறந்து வைத்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 123வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் மணி மண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலைக்கு பெரியாறு அணை மீட்புக்குழுவினரும், விவசாயிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் முல்லை பெரியாறு நீரில் மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார் உட்பட விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
|