பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கோவையில் தனியார் நிதி நிறுவனத்தினர் கடன் உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
வாகன கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று எரிப்பொருளுக்கான கடன் உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலமாக பெட்ரோல், டீசலை பங்கில் பணம் கொடுத்து நிரப்பாமல் வாடிக்கையாளர்கள் கடனாக பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கில் தங்களது மொபைல் எண்ணைத் தெரிவித்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம்.
அதற்காக குறைந்தபட்ச வட்டி வசூல் செய்யப்படும். முதற்கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் இந்த வசதியை ஏற்படுத்தி இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து வசதி விரிவுப்படுத்தப்படும் என்றும் தனியார் நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
டீசலுக்கு முதற்கட்டமாக லிட்டருக்கு 85 பைசா வீதம் மானியமும் கொடுக்கப்படுவதால் டிரான்ஸ்போர்ட் வர்த்தகம் மேற்கொள்ளுபவர்கள் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். வட்டியானது மானிய தொகையிலேயே பிடித்தம் செய்யப்படுவதால் எரிபொருள் நிரப்புபவர்களுக்கு வட்டி பாதிப்பு இருக்காது என்றும் நிதி நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர்.
|