நடிகர் விஜய் கத்தி படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கத்தில் புலி எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஹன்சிகா, சுருதி ஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ஶ்ரீதேவி மகாராணியாகவும், ஹன்சிகா இளவரசியாகவும் நடிக்கின்றனர். சுதீப் படைத்தளபதியாக நடிக்கிறார்.
இந்தப் படம் பேன்டசி வகைக் கதை என்பதால், இதில் விதவிதமான ஒப்பனைகள், உடைகள் தேவைப்படுகின்றன. எனவே உடையலங்கார நிபுணர்கள் மட்டும் ஐந்து பேர் இதில் பணியாற்றுகின்றனர். மணீஷ் மல்கோத்ரா, தீபாலி நூர், சைதன்யா ராவ், சிவா மற்றும் சாய் ஆகியோர் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சண்டைப் பயிற்சிக்கென நான்கு பேர் பணியாற்றுகிறார்கள். ரெட் க்ளிப், ட்ரான்ஸ்போர்டர் படங்களில் பணியாற்றிய சேங் லின், தி லாஸ்ட் மெடல்லியன் படத்தில் பணியாற்றிய ப்ரதித் சீலியம், இந்தி சிங்கம் படத்தில் பணியாற்றி சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் விஜய்க்கு ஸ்பெஷல் ஸ்டன்ட் காட்சிகள் அமைக்கின்றனர். இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு என ஒரு வாள்சண்டை இருக்கிறதாம், இதற்காக் ஹன்சிகா சமீபத்தில் வாள் பயிற்ச்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு இந்த படத்தில் தம்பிராமையா, ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி, தேனடை மதுமிதா, சத்யன் என ஒரு காமெடி பட்டாளமே நடிக்கிறதாம்.
படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கெனவே அவர், விஜய் நடித்த சச்சின், வில்லு ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது அவர், விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம்.
படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். இதில் மூன்று பாடல்கள் இசை அமைக்கப்பட்டுவிட்டதாம். அதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தியில் டப் செய்து வெளியிடலாம என்றும் யோசித்து வருகின்றனர்.
|