இம்முறை பெருங்குடமுழுக்குக் காட்டுவது போல கொட்டிற்று வானம் புலம் பெயர்ந்து வந்த பறவைகள் நிரம்பி வழிந்த நீர்த்துறையெங்கும் முங்கிக் குளித்தன; முத்தெடுத்துதறின கூரலகால் பிறகெடுத்துக் கோப்பன போல்வன.
எடுத்தூதிய வெண்சங்கென எழுகின்ற கொக்குகள் அசை நடை நாரைகள், கன்னங்கரேலென நீர்க்காகங்கள் என வண்ணம் பலப்பல- இயற்கையெடுத்த விழாக் கோலம் போல.
இனிய பறவைகாள் உங்களைப் போலவே வண்ணம் பலவுடைய மக்களின் விழாக் கோல வாழ்விருந்த கிராமம்தான் இதுவும். எதற்கோ வியூகம் வகுத்தவர்க்கஞ்சியவர் வேரற விட்டுப் போய் நாளாயிற்று.
நவராத்திரியின் கும்பச்சரிவோடு போனவர்கள்தான் மீளக் கொலுவேறவில்லை கொலுவிருந்த வாழ்வு குலைந்து போய்க் கிடக்கிறது. கூடி வாழ்தல் என்பது அழகிய கொலுநேர்த்தியல்லவா? எத்தனை நவராத்திரிகள் வந்தேகின. கும்பப் பொலிவும், கூட்டுக்களியும், விழாக் கோலமும்தான் இல்லையாயிற்று.
மார்கழி எம்பாவை வந்தாள் மழைக்கண் திறந்து பொழிந்தவாறே. வந்தவளை பட்டுக் குடையெடுத்து வரவேற்று "ஏலோரெம்பாவாய்"என ஊர்கோலமாய்ப் போகவும் ஆளணியற்ற தவக்குறைவு எமக்காச்சு. பாவம் எம் பாவை போயினாள் பண்ணிழந்த தெருவழியே.
மாரி வந்ததென்ன? ஏரழகின்றிக் கிடந்தன வயல்கள் தை மகள் வந்தாள். கைநிரம்ப வெறுமையுடன் கந்தலுடை பூண்டிருந்தது கிராமம். பொங்கல், படையலென பூரிப்பின் ஓரவிழும் உண்டிலள் போனாள் ஒளியிழந்த முகத்தினளாய்.
"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" வெண்தாடிப் புலவனது பாட்டோசை "கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே" என் செயலாம் கூழை நினைத்தானே வாயூறத்தான் செய்கிறது. ஊதிக் குடிக்க உதடும் குவிகிறது. ஒடியலுக்கும் ஏது குறை? போனவரியத்தானும் கிடந்துளுத்துக் கொட்டுது. கூடிக்கலந்துண்ணச் சாதிசனம்? இந்த ஆடிப் பிறப்பிற்கும் விடுதலை ஆனந்தம் இல்லையாச்சு.
விழாக்காலத் தேதி விவரங்களே மறந்து போய்க் கிடக்கும் கிராமமிதில் ஓசை, ஒலியெலாமாகி நிறைந்த பறவைகாள் உங்கள் உயிர்த்துடிப்புகள் இனியவை.
வயல்வெளி நடப்புகள், சிறகடிப்புகள், வெளிநிரம்பிடும் சங்கீதம், யாவுமே இனியவை என்பேன் எனினும் சிறு துயரம் நீராம்பலெனத் தலைநீட்டும்.
மாரிகழிய மறுபடியும் வருகின்ற கோடை வறள்வில் இக் குதூகலங்கள் சிறகை மடக்கி விடைபெறுதல் கூடும் அல்லவோ, நினைகையில் சிறுதுயர் எழும் எனினும் உமை நோகேன் அற்ற குளத்து அறுநீர்ப்பறவையென கேலியாடும் எண்ணம் சிறிதுமிலை. நானறிவேன் தாயக மீள்வில் இருக்கும் தனிச்சுகம்.
பெரு வெளியில் தலைநீட்டும் உயர்மரக் கொம்பரில்தானே உங்கள் கூடுகள் உள்ளன. அறிவேன் குஞ்சு பொரித்தலும், குதலைகட்கு உவந்து ஊட்டலும், காத்தலும், இங்காகலாம் சிறகு முளைத்தவற்றை கூட்டிச்செல்வதாய குதூகல நிகழ்வெலாம் தாயக வெளிநோக்கியல்லவோ நானறிவேன்
நீரறிவீரோ என் நெஞ்சிலும் கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு கூடிழந்து போனவரின் நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு நீரறிய மாட்டீர்.
நீரறிதல் கூடுமெனில் கோடைவழிப் போக்கில் குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ? சற்றெமக்கு இரங்குங்கள் நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்.
"கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக்" கதியிற் கலங்கிய புலவரென கைவிடப்பட்ட முதியவர் கிழித்துப் போட்ட ஒடியல் கிழங்கென வாடிச் சுருங்கி மனம் மெலிந்து கடைசி ஒரு சொல்லாடலில் விடைபெறக் காத்திருப்பதை சொல்லுங்கள்.
மாண்டோரும் மற்றும் தென்புலத்தோரும் தாழ்வாரத் தவமியற்றிக் காத்திருந்தும் திவசச் சோறுமின்றி, பரிந்துவக்கும் படையலுமின்றி வெற்றுப் பாத்திரராய் மீளுவதைச் சொல்லுங்கள்
காலப்புற்றெழுந்து படர்ந்தாலும் உட்கனலவியாத் தவ முனிவரென ஒளியேற்றக் காத்திருக்கின்றன வீடுகள் ஒவ்வொன்றுமென உரக்கவே அழுத்துங்கள்.
வேறென்ன விளம்ப இருக்கிறது நீங்கள் மீளுகையில் விட்டு விட்டுச் செல்லுகின்ற ஆனந்த வித்துகள் முளை கொள்ளும் நாள்வரையும் நாங்கள் இருப்போமா நன்னிலத்தின் காவலராம் எங்களுடைச் சந்ததிக்கேனும் இதன் வேரடியில் வாழ்வு சிலிர்க்கட்டும்.
|