கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து வால்உளை எருக்கில் வளர்உழை பாடி கூவிளங் கண்ணியில் குலக்கிளை முரற்றி வெண்கூ தளத்தில் விளரிநின் றிசைத்து வண்டும் தேனும் ஞிமிறும் கரும்பும் (5)
உமிழ்நறவு அருந்தி உறங்குசெஞ் சடையோன் மதுமலர் பறித்துக் திருவடி நிறைத்த நான்மறைப் பாலனை நலிந்துயிர் கவரும் காலற் காய்ந்த காலினன் கூடல் திருமறுகு அணைந்து வருபுனல் வையை (10)
வரைபுரண் டென்னத் திரைநிரை துறையகத்து அணைந்தெடுத் தேந்திய அரும்புமுகிழ் முலையோள் மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை ஆட்டியும் அணைத்தும் கூட்டியும் குலவியும் ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் (15)
முழக்கியும் தபுத்தியும் முலைஒளி நோக்கியும் விளிமொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும் நிறுத்தியும் நிரைத்தும் நெறித்தும் செறித்தும் எழுதியும் தப்பியும் இயைத்தும் பிணித்தும் (20)
கட்டியும் கலத்தியும் கமழ்த்தியும் மறைத்தும் செய்தன எல்லாம் செய்யலர் போலஎன் நெட்டிலை பொலிந்தபொன் நிறைதிரு உறையுளில் பாசடைக் குவளைச் சுழல்மணக் காட்டினைக் கருவரிச் செங்கண் வசாலினம் கலக்க (25)
வேரிமலர் முண்டகத்து அடவிதிக்கு எறிய வெள்ளுடற் கருங்கண் கயல்நிரை உகைப்ப மரகதப் பன்னகத்து ஆம்பல்அம் குப்பையைச் சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப படிந்து சேடெறியும் செங்கண் கவரியும் (30)
மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பும் மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும் மிடைந்து வயல்இரிந்து முதுகுசரிந் துடைந்து சிறியோன் செருஎன முறியப் போகி உழவக் கணத்தைக் குலைக்குடில் புகுத்தும் (35)
பெருநீர் ஊரர் நிறைநீர் விடுத்துச் செறிந்த தென்எனக் கேண்மின் மறிந்துழை விழித்த மறிநோக் கினரே! (38)
|