புரட்சிக்கவி - பகுதி 1
[பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவியது]
அகவல்
அரசன் அமைச்சர்பால் அறிவிக்கின்றான்; 'அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழிலக் கியங்கள் தமிழிலக்கணங்கள் அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்; ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக் கற்றாளில்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும், வாவியும், ஓடையும், விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும் தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும், காலைஅம் பரிதியும், மாலை மதியமும் கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால் என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றஒர் ஆசான் எங்குள்ளான்? தோற்றியவாறு சொல்க அமைச்சரே!' |
எண்சீர் விருத்தம்
தலைமை அமைச்சன் புகல்வான்: 'எனதுமன்னா, சகலகலை வல்லவன்; இவ்வுலகோர் போற்றும் புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்! புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன். இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்! எனினும், அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன். குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால் குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!
ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்: அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க! பானல்விழி மங்கையிடம் 'உதாரனுக்குப் பார்வையில்லை குருட'னென்று சொல்லி வைக்க! ஞானமுறும் உதாரனிடம் 'அமுதவல்லி நலிகுஷ்ட ரோகி' என எச்சரிக்க!
தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! 'ஆம் ஆம் தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை; பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்' என்றான். பேச்சுவல்ல அமைச்சர் பலர்சென் றழைத்தார். தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச் செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான். பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப் 'பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்' என்றான். |
சிந்து கண்ணி
மன்னவன் ஆணைப்படி-கன்னி மாடத்தைச் சேர்ந்ததொரு பன்னரும் பூஞ்சோலை-நடுப் பாங்கில் ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே-திரை ஆர்ந்த மறைவினிலே மின்னொளி கேட்டிருப்பாள்-கவி வேந்தன் உரைத்திடுவான்!
யாப்புமுறை உரைப்பான்-அணி யாவும் உரைத்திடுவான்; பாப்புனை தற்கான-அநு பவம்பல புகல்வான். தீர்ப்புற அன்னவளும்-ஆசு சித்திரம் நன்மதுரம் சேர்ப்புறு வித்தாரம்-எனும் தீங்கவிதை யனைத்தும்.
கற்றுவர லானாள்-அது கால பரியந்தம் சற்றும் அவன்முகத்தை-அவள் சந்திக்க வில்லை! விழி அற்றவனைப் பார்த்தால்-ஓர்¢ அபசகுன மென்றே! உற்றதோர் நோயுடையாள்-என்று உதாரனும் பார்த்ததில்லை!
இவ்விதம் நாட்கள்பலப்-பல ஏகிட ஓர் தினத்தில் வெவ்விழி வேலுடையாள்-அந்த மேடையிற் காத்திருந்தாள். அவ்வமயந் தனிலே-விண் அத்தனையும் ஒளியால் கவ்வி உயர்ந்ததுபார்-இருட் காட்டை அழித்த நிலா! |
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே, இமையாது நோக்கினான் முழு நிலாவை! இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்! சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம் தூண்டிவிட ஆ ஆ ஆ என்றான்; வாணி அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்! அத்தனையும் கேட்டிருந்தாள் அமுதவல்லி:
'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்! அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்! பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ!
உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
உன்னைஎன திருவிழியாற் காணுகின்றேன்; ஒளிபெறுகின் றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்; இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன் எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்! அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி ஆகாயம் அளவுமொரு காதல் கொண்டேன்! இன்பமெனும் பால்நுரையே! குளிர்விளக்கே! எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்ததாலே!' |
வேறு சிந்து கண்ணி
இவ்வித மாக உதாரனும்-தன தின்குரலால் வெண்ணி லாவையே திவ்விய வர்ணனை பாடவே-செவி தேக்கிய கன்னங் கருங்குயில், 'அவ்வறிஞன் கவி வல்லவன்-விழி அற்றவ னாயின்; நிலாவினை எவ்விதம் பார்த்தனன், பாடினன்?-இதில் எத்துக்கள் உண்டெ'ன ஓடியே.
சாதுரியச் சொல் உதாரனை-அவன் தாமரைக் கண்ணெடும் கண்டனள்! ஓது மலைக் குலம்போலவே-அவன் ஓங்கிய தோள்களைக் கண்டனள்! 'ஏதிது போன்றஓ ராண்எழில்-குறை இன்றித் திருந்திய சித்திரம்? சோதி நிலாவுக்கும் மாசுண்டாம்-இச் சுந்தரனோ கறை ஒன்றிலான்!'
என்று வியப்புடன் நின்றனள்;-அந்த ஏந்திழை தன்னெதிர் நின்றதைத் தன்னிக ரற்ற உதாரனும்-கண்டு தன்னை மறந்த வனாகியே என்ன வியப்பது? வானிலே-இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதுரே வந்து வாய்த்ததோ?-புவிக் கேதிது போலொரு தண்ஒளி!
மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான் வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னற் றமிழ்க்கவி வாணரின்-உளக் கற்பனையே உருப் பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?' என்று நினைத்த உதாரன்தான்-'நீ யார்?' என்ற ஓர்உரை போக்கினான்.
'அமுதவல்லி யன்றோ!' என்றாள்-'அந்த அமைச் சனும்முடி வேந்தனும் நமைப் பிரித்திடும் எண்ணத்தால்-உனை நாட்டம் இல்லாதவன் என்றனர்! சமுச யப்பட நீஇன்று-மதி தரிசன மதைப் பாடினை! கமலங் கள்எனும் கண்ணுடன்-உனைக் காணப் பெற்றதென் கண்' என்றாள். |
எண்சீர் விருத்தம்
'இன்னொன்று கேளாயோ அமுதவல்லி! என்னிடத்தில் உன்தந்தை' என் மகட்கு முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து மூண்டதெ'னச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து விளைந்ததுபோல் விளைந்தஉன தழகுமேனி இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லை' என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்
'காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ? பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ? நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ? சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத் திரையிட்டு மறைத்தார்கள்!' என்று சொன்னான். |
பஃறொடை வெண்பா
'வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும் நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்திரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!
குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?
என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் நெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!
'நன்று மடமயிலே? நான்பசியால் வாடுகின்றேன்; குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!
உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும் வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!
எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான் உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்
நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்
நீயன்றோ பெண்ணே! நினைப்பை அகற்றிவிடு! நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!
வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!
காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன் சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!
பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக்கு என்செய்வேன்?
கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?
ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?
பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக் கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?
என்றழுதான் விம்மி இளையான், கவியரசன். குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்!
ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்துஇரங்கும்!
சித்தும் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?
ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்? அத்தருணம் அந்த அமுல்லி ஈதுசொல்வாள்:
'வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,
காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும், தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே! ஆதரவு காட்டாமல் ஐய! எனைவிடுத்தால் பாதர¬க்ஷ போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,
வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம் சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?
ஆரத் தழுவி அடுத்தவினா டிக்குள்உயிர் தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!
அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?
நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால் கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!
கோல்வேந்தன் என்காதற் கொன்றவனைக் கொல்லவந்தால், சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!
சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும், போதாக் குறைக்குப் பொதுத்தொழிலாளர்சமுகம்
மெத்த இனிவென்றும், மிகுபெரும்ப லோரைஎல்லாம் கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவி களையேனும் அர்ப்பணம்செய்வோம்! இதனை
நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!
இன்னும் என்ன?' என்றாள் உதாரன் விரைந்தோடி அன்னத்தைத் தூக்கியே ஆரத்தழுவினான்.
இனப உலகில் இருவர்களும் நாள் கழித்தார் பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்
மாறுபடக் கண்டு மனம் பதறித் தோழியர்கள் வேறு ஒழியின்றி வேந்தனிடம் ஓடியே
'மன்னவனே! உன் அருமை மங்கை அமுதவல்லி தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ,
காதல்எனும் இனபக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள், மற்றிதனை மேன்மைச்
சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்' என்றார். அமைதி யுடைய அரசன் அதன்உண்மை
கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்!
வந்த உதாரன்எழில் மங்கைக்கு கைலாகு தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து
பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்
கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள் மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து
மாளிகைக்குச் சென்றான் மறுநாள் விடியலிலே வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்
சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர ஏவினான், அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.
இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்; அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.
ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.
ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.
அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான், சிங்காதனத்திலே சேர்ந்து: 'கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி கற்க உன்பால் விடுத்தேன்-அட! குற்றம் புரிந்தனையா இல்லையா இதை மட்டும் உரைத்து விடு! வெற்றி எட்டுதிக்கும் முற்றிலுமே சென்று மேவிட ஆள்பவன் நான்- அட இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை என்னென்றுதான் நினைத்தாய்?
வாள்பிடித் தேபுவி ஆளுமி ராசர்என் தாள்பிடித்தே கிடப்பார்!- அட ஆள் பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன ஆணவமோ உனக்கு? மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை வெல்லத் தகுந்தவனோ?-இல்லை! மாள்வதற்கே இன்று மாள்வதற்கே' என்று மன்னன் உரைத்திடவே.
மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில் வார்க்கும் மழைநாடா!-குற்றம் ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம் அன்றெனில் அவ்விதமே! கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள் கொள்ளை வனப்பினிலே-எனைக் காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக் கவிழ்ந்தவண்ணம்வீழ்ந்தேன்!
பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர் பால்நில வாயிரம்போல்-அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல் அடியேன் செய்த தொன்று மில்லை. பிழைபுரிந்தே னென்று தண்டனை போடுமுன் பெற்று வளர்த்த உன்றன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள இன்னல் மறப்பதுண்டோ?' |
|