திருமலை திருப்பதி ஏழுமலையானை ஒரு லட்சம் பக்தர்கள் சனிக்கிழமையன்று தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளை ஆந்திரத்தில் "திருமலை சனிவாராலு' என்று அழைக்கின்றனர். அதனால் அந்த நாட்களில் ஏழுமலையான் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் மலைக்கு வருவது வழக்கம்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி பக்தர்கள் வெளியில் உள்ள வரிசையில் காத்திருந்தனர். தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் தேவைப்பட்டது.
சனிக்கிழமை முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 219 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். 42 ஆயிரத்து 462 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.2.46 கோடி வசூலானது தெரிய வந்தது.
தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம் செய்ததோடு, குடிநீர், பால், காபி, தேநீர் ஆகியவற்றையும் வழங்கியது.
|