காடாங்குளம் காட்டுக்குள் அன்று எல்லாரும் பரபரப்பா வேலை செய்துகொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு மாதிரியான பயம் இருந்தது. பானை வயிற்று யானையிலிருந்து மீசைக்காரப் பூனை வரைக்கும், நெட்டைக் கழுத்து ஒட்டகச்சிவிங்கி முதல் குட்டைக் கால் முள்ளம் பன்றி வரைக்கும் எல்லோரும் அவங்கவங்க வீடுகளிலே ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.
வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, பொருட்களை அடுக்கி ஒழுங்குபடுத்துவது ஆடைகளைத் துவைத்து வைப்பது, ஒட்டடைக் குச்சியால் சிலந்திவலையை சுத்தம் பண்னுவது எனப் ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.
ஏன் தெரியுமா? காட்டு ராஜா அன்னைக்கு அவங்க வீடுகளை பரிசோதிக்க வருகிறார். அவர் வந்து பார்க்கும் போது வீடு துடைத்து வைத்த கண்ணாடி போல் பளிச்சணு இருக்கணும்.. நேர்த்தியாக இருக்க வேண்டும். வீடு ஆலங்கோலமாக இருந்தாலோ, குப்பைக் கூளங்கள் குவிஞ்சு கிடந்தாலோ பொருட்கள் மேலே தூசு படிஞ்சு அழுக்காக இருந்தாலோ... அவ்வளவுதான். காடாங்குளம் காட்டை விட்டே விரட்டி விட்டுருவாரு.
அந்த பயத்தால் எல்லாரும் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தர்ககள் ஒரே ஒருவரை தவிர அது யார் தெரியுமா? நம்ம குட்டி முயல்...
அது கொஞ்சம் கூட பயமில்லாமல் பச்சைப் புல் மைதானத்தில் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தது. பச்சை பட்டு விரிச்சதுமாதிரி இருந்த அந்த மைதானத்தில் தனியா சந்தோஷமா விளையாடிக்கொண்டிருந்தது. உருண்டது புரண்டது... பச்சைப் புல்லைக் கடிச்சுக் கடிச்சு திண்றது... சிங்கராஜா பரிசோதனைக்கு வருவதே தெரியாதது மாதிரி இருந்தது.
" இதென்ன , இந்த குட்டி முயல் காடாங்குளம் காட்டை விட்டே ஓடிடலாம்ணு முடிவு செஞ்சிருச்சா? எல்லோருக்கும் ஓரே ஆச்சரியம்.
எல்லா விலங்குகளும் கொஞ்ச நேரம் வேலையை நிறுத்திவிட்டு குட்டிமுயலுகிட்ட வந்தது "' உனக்கென்ன பைத்தியமா? இன்னைக்கு நம்ம ராஜா பரிசோதனைக்கு வருவது தெரியாதா? நாங்கள் எல்லோரும் வேர்க்க விறுவிறுக்க வேலை செய்துகொண்டிருகோம் . நீ பச்சைப்புல்லில் துள்ளித்துள்ளி விளையாடி கொண்டிருக்காயே?'' உடம்பெல்லாம் பொசு பொசுண்ணு முடியிருக்கற கரடி கேட்டது.
குட்டி முயல் விளையாட்டை நிறுத்திவிட்டு எல்லோரையும் அமைதியாகப் பார்த்தது. மெதுவாகச் சிரித்தது. அப்புறம் பேசத் தொடங்கியது.'" சிங்க ராஜா பரிசோதனைக்கு வரட்டுமே. அதற்கு நான் ஏன் பயப்படணும்?
நான்தான் என் வீட்டை எல்லா நாளும் சுத்தமா வைத்திருக்கிறேனே! நீங்க எல்லோரும் எல்லா நாளும் சும்மா இருந்துவிட்டு இப்ப வேலை செய்றீங்க. பரீட்சை வரும் போது அவசர அவசரமாகப் படிக்கறவங்களை மாதிரித்தான் நீங்க எல்லோரும். ஆனா நான் அப்படியல்ல.
அன்னன்னைக்குள்ள பாடங்களை அன்னன்னைக்கே படிக்கறவங்களை மாதிரி குட்டி முயல் சொன்னதக்கேட்டு எல்லோரும் வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டார்கள்.
காட்டு ராஜா பரிசோதனைக்கு வந்தாரு. அனைத்து வீடுகளையும் பரிசோதனை செய்தாரு. அவசர அவசரமாக வேலை செய்தால் சரியாக இருக்காது இல்லையா?
குட்டி முயலுக்குத்தான் முதல் பரிசு. பரிசு கொடுக்கும்போது காட்டுராஜா சிங்கம் என்ன சொன்னாரு தெரியுமா. இனிமே நீ தான் இந்தக் காடாங்குளம் காட்டுக்கு மந்திரி அப்படீண்ணும் சொல்லிவிட்டாரு.
அன்னன்னைக்கு செய்ய வேண்டிய வேலைகளை தள்ளி வைக்காமல் அன்னன்னைக்கே செய்தால் குட்டி முயல் மாதிரி நமக்கும் முதல் பரிசு கிடைக்கும்.
|