லிங்கா படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு கபாலி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கபாலி என்ற படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா என்பவர் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த படத்திற்கு பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பு நடக்கிறது என்கிறார்கள். தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப்படத்துக்கு, கடந்த ஒரு மாதம் முன்புகூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறதென்கிறார்கள்.
சிவாபிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முறைப்படி அவர் அந்தப்பெயரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி, அந்தப்பெயரை ரஜினி படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அந்த சிவக்குமாரிடம் கேட்டால், "நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், ஐநூறுரூபாய் கட்டி புதுப்பிக்க மாட்டேனா? நான் ரினியுவல் செய்யப்போகும்போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை" என்கிறார்.
ஆக ரஜினிகாந்த் படத்திற்கு இப்போது இருந்தே பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது.
|