பல சிற்றரசுகளை உள்ளடக்கிய காக்கத்திய நாட்டு அரசருக்கு பெண்குழந்தை பிறந்தால் உடனே அந்நாட்டின் மீது படையெடுப்பது என்று அதன் அண்டை நாடான தேவகிரி நாட்டு அரசரும், பெண்குழந்தை பிறந்தால், காக்கத்திய அரசரைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்க அவருடைய தம்பிகளான சுமனும், ஆதித்யாவும் திட்டமிடுகின்றனர்.
காக்கத்திய நாட்டு மக்களும், குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனென்றால், அந்த குழந்தை ஆணாக இருந்தால், பக்கத்து நாட்டு பகையாளிகளிடம் இருந்து நம் மக்களை காப்பாற்றும் என நம்புகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக காக்கத்திய அரசருக்கு பெண் குழந்தைதான் பிறக்கிறது. இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிந்தால், நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று பயந்து, அரசர் பிறந்தது ஆண்தான் என்று கூறச் சொல்கிறார். அதன்படி, அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நாடு முழுவதும் அறிவிக்கின்றனர்.
அதன்படி, குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை 14 வருடங்கள் காட்டுக்கு அனுப்பி வைத்து, அங்கு ஒரு ஆணாகவே வளர்க்கிறார்கள். வாள்சண்டை, கத்தி சண்டை என ஒரு ஆணுக்கு நிகராக அனைத்து கலைகளிலும் வல்லவராக திகழ்கிறார்.
14 வருட வன வாசத்திற்கு பிறகு, தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார் அனுஷ்கா. அதன்பினனர்தான் அவருக்கே அவர் பெண் என்று தெரிகிறது. நாட்டைக்காப்பதற்காகத்தான் தன் தந்தை பொய்சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து அவரும் ஆண்வேடத்திலேயே இருக்கிறார். ஆனால், அரசரின் சகோதரர்களின் சூழ்ச்சியால், அனுஷ்கா ஒரு பெண்தான் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிந்துக் கொள்கிறார்கள். இவர்களுடன் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு, பொய் கூறிய அனுஷ்காவை நாட்டை விட்டே துரத்துகின்றனர். இதையறிந்த தேவகிரி நாட்டினர், காகித்ய அரசின் மீது படையெடுக்கின்றனர். அதே நேரத்தில், சுமனும், ஆதித்யாவும் சிற்றரசர்களுடன் இணைந்து நாட்டு மக்களை துன்புறுத்துகின்றனர். இதனால், பாதிப்படைந்த மக்கள் நாட்டை விட்டு ஒதுக்கிய அனுஷ்காவை நாடிச் செல்கின்றனர்.
இறுதியில், அனுஷ்கா நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்தும், சூழ்ச்சியாளர்களிடமிருந்தும் எப்படி நாட்டை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
அனுஷ்கா தனது சிம்மாசன நடிப்பை மீண்டும் நிருபித்துள்ளார். ருத்ரதேவன் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு தோற்றங்களிலும் சிறப்பாகவே நடித்துள்ளார். குதிரையேறுதல், யானையை அடக்குதல், வாள் சண்டை போடுதல் என ஆக்சனிலும் கலக்கி இருக்கிறார்.
அனுஷ்காவுக்கு காதலனாக வரும் ராணாடகுபதி தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஆனால், பாகுபலியில் மிரட்டலாக பார்த்துவிட்டு, இதில் அமைதியாக நிற்க வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொள்ளைக்காரன் சண்டிவீரனாக வரும் அல்லுஅர்ஜூன் தற்கால சென்னைத்தமிழை பேசி ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறார். ராஜகுருவாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பால் கைதட்டல் பெறுகிறார்.
சுமன், ஆதித்யா இருவரும் நயவஞ்சக நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
நித்யாமேனன், கேத்தரின்தெரசா, ஹம்சாநந்தினி ஆகியோரும் படத்தில் இருப்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக உள்ளன.
பெரியஅரண்மனைகள், யானைகள், குதிரைகள், மண்டபங்கள் என்று ஏகத்துக்கும் மெனக்கெட்டவர்கள், திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் கொஞ்சம் வந்திருக்கும்.
தோட்டாதரணியின் கலையமைப்புகள், அஜயன்வின்சென்டின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
அனுஷ்கா படத்தை ஒரு பக்கம் தாங்கி நின்றாலும், அவரையும் தாண்டி இளையராஜா தன்னுடைய இசையால் மேலும் தாங்கி பிடித்திருக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், ருத்ரமாதேவி... அனுஷ்காவின் நடிப்பிற்காக பார்க்கலாம்....
|