தமிழகத்தில் இருந்து வாசிங்டன் வந்திருந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி முனைவர் சைலேந்திரபாபு IPS அவர்களை வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வரவேற்று ஒரு சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை, ஜூலை 31, 2014, மாலை 6:30 - 9:30 மணி வரை ஏற்பாடு செய்திருந்தது. Clarion Inn/Asia Fusion, 8601 Baltimore Ave, College Park, MD 20740 -ல் நடந்த இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். குறிப்பாக வார நாட்களில் இம்மாதிரி நிகழ்ச்சிகளை நடத்துவது மிகவும் சிரமம். இருப்பினும் முனைவர் சைலேந்திரபாபு அவர்களை ஒரு காவல்துறை அதிகாரியாக மட்டும் பார்க்காமல், அவரின் எழுத்து, பேச்சு, அவர் வகிக்கும் பதிவிற்கு அவர் சேர்த்துவரும் சிறப்பு,சமூகப்பணியில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு, இளைஞரைகளை நல்வழிப்படுத்த அவர் செய்துவரும் செயல்கள் ஆகியவை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதற்கு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களின் ஆர்வத்தால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த நிகழ்ச்சியை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி கல்பனா மெய்யப்பன் தலைமை உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.விருந்தினரை திரு. செந்தில்முருகன் வேலுச்சாமி, பொருளாளர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார், அதனைத் தொடர்ந்து முனைவர் சைலேந்திர பாபு, I.P.S, (Additional Director General of Police of the Coastal Security Group, Tamilnadu) அவர்கள் விருந்தினர் உரை நிகழ்த்தினார், இதில் முழுக்க அவர் தமிழில் தமிழ்நாட்டு நடப்பை குறித்தும், தமிழ் இலக்கியச் சிறப்புகள் குறித்தும்,வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு என்ன மாதிரி பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதைக் குறித்தும் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மேரிலாந்து மாகாண துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் வாழ்த்திப் பேசி மேரிலாந்து மாகாண கொடியை விருந்தினருக்கு பரிசாக அளித்து மாகாண ஆளுநர் கொடுத்த வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதியை சுந்தர் குப்புசாமி, துணைத் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் விருந்தினரை பாராட்டி பேரவை மலரை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், புரவலருமான திரு. பாலகன் ஆறுமுகசாமி அவர்களும் திருமதி கல்பனா மெய்யப்பன் அவர்களும் விருந்தினருக்கு பட்டயம் வழங்கி கவுரவித்தார்கள். இந்த நிகச்சியை தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தினார்.
|