LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

திருக் கோயில்களின் ஆற்றல் -முனைவர். மு. வள்ளியம்மை

முனைவர். மு. வள்ளியம்மை, தமிழ்ப் பேராசிரியர் (ஒய்வு)       

                ”கனியினும் கட்டி பட்ட க ரும்பினும்

                   பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும்

                   தனிமு டுகவித் தாளூம் அரசினும்

                   இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே”

                                                                                                 (அப்பர்)

கடவுள்,இறைவன் முதலிய சொற்களின்  உள்ளார்ந்த பொருட்களை விளக்கி,திருக் கோயில்களின் ஆற்றல்களையும் பல்வேறு கோணங்களில் விரித்துரைக்கிறது இக்கட்டுரை.

 

எல்லாம் கடந்தவன் கடவுள்

கடவுள் என்ற சொல்லாட்சி கடந்தும் நிறைந்தும் அமைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.கட+உள்=கவுள்.கட என்ற சொல் கடந்தது என்பதையும்,உள் என்ற சொல் உள்ளத்தே உள்ளது என்பதையும் உணர்த்தும். மனிதன் படுகின்ற இன்ப துன்பங்களை எல்லாம் கடந்தவன் கடவுள் என்பதை ‘கட’ என்ற பகுதிச் சொல் நமக்கு உணர்த்துகிறது.இதனை,

             “துன்பமொடு இன்பம தெல்லாம் கடந்தவர்

              காதலில் வாழும் கற்குடி மாமலை யாரே”

என்ற திருக் கற்குடிப் பதிகத்தில் ஞானசம்பந்தர் அருளிச் செய்கின்றார்.கடந்து நின்றமையால் யாருக்கு என்ன பயன்  என்று கேட்பார்க்கு விடையாக நம் உள்ளத்துள்ளே இருக்கிறார் கடவுள் என்பதை ‘உள்’ என்ற விகுதி விளக்குகிறது.

உள்ளத்தில் உளன் :

               அறியாமையாலும் அழுக்கினாலும் சராசரி மனிதன் இறைவனை அறியாமல் இருக்கிறான். இறைவன் நம்முள் மறைந்திருக்கிறான்.இதனாலேயே ஞான சம்பந்தர் இறைவனைக் கள்வன் என்று குறிக்கிறார்.

           “உள்குவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதி”

என்று அப்பரும் இக்கருத்தை வெளியிடுகிறார்.

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிலில் வீற்றிருப்பான் இறைவன் . எல்லாருடைய உள்ளத்திலும் வீற்றிருந்து அருளுகிறான் இறைவன் என்றாலும் எண்ணத் தூய்மையுடையார் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் செயல்கள் வழி விளக்கமாகக் காணலாம்.

           “தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே

               தேடிக் கண்டு கொண்டேன் “

என்பதும்

            “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் “

 என்பதும் அப்பர் சுவாமிகள் அருள் வாக்கு.

             மேலும் கடவுளைத் தமிழ்ச்சான்றோர்’இயவுள்’ என்றும்

போற்றியுள்ளனர். இயவை என்றால் வழி. வழியாகவும் வழி நடத்துவோனாகவும் இருப்பவன் இறைவன் என்பதை இச்சொல் நமக்கு உணர்த்துகிறது.”பெரும் பெயர் இயவுள் என்பது “ என்பது திருமுருகாற்றுப்படை.எனவே எங்கும் நிறைந்தவன் இறைவன் என்றும் ,ஒருவகையில் கடந்தும்  ஒருவகையில் உள்ளத்துள் மறைந்தும் இருப்பவன் கடவுள் என்றும் ,இயங்கியும், இயக்கியும் வருபவன் இயவுள் என்றும்  அறிந்தும் அனுபவித்தும் வந்தவர்கள் நம் முன்னோர்கள்.

எங்கும் நிறைந்தவன் இறைவன்

                 கனியில் சுவையாய் இருப்பவனும் ,கற்கண்டில் இனிப்பாய் இருப்பவனும் ,ஆட்சி புரியும் அரசில் இனிதாய்த் திகழ்பவனும் இறைவனே ஆவான்.இக்கருத்தை உணர வேண்டுமானால் மனித இனம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் .எல்லா இடத்திலும் இறைவன் இருக்கின்றான்.இதனையே தாயுமானவர்’

                ”அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

                ஆனந்த பூர்த்தியாகி”

என்று குறீப்பிடுகிறார்.

                  ஒன்று நீயல்லை ;உனையன்றி ஒரு பொருளுமில்லை”

என்று மாணிக்கவாசகரும் குறிக்கின்றார்.

                  “கரந்து எங்கும் பரந்துளன்”

என்பது நம்மாழ்வார் பாசுரம். உண்ணும் சோற்றில் உணவாகவும் பருகும் நீரில்  சுவையமுதமாகவும்,தின்னும்

வெற்றிலையில்  ஜீரண சக்தியாகவும்,இவை எல்லாமாகவும் திகழ்பவன் அவன் என்பதை ,

            உண்ணும்சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்

            கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

            மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்கவன் ஊர்வினவித்

            திண்ணம் என் இளமான் புகுமூர்திருக் கோளூரே”

என்ற ஏழாவது திருவாய் மொழியின் முதல் பாசுரத்தில் நம்மாழ்வார் குறிப்பிடுகின்றார்.

       இவற்றையெல்லாம் உள்ளடக்கியேநம்மால் வணங்கப் பெறும் பரம்பொருளை நம் முன்னோர் “இறைவன்” என்று குறித்தனர். இறை என்ற சொல் செறிவு,நிறைவு,எனப் பொருள் படும். அப்படி எங்கும் நிறைந்திருக்கின்ற பொருள் சராசரி மனிதனுக்குப் புலப்படாது; தன்னை வென்றவனுக்கே புலப்படும்.

உயிரைவளர்ப்பனவே திருக் கோயில்கள்

             வான மண்டலத்தில் மின்சாரம் பரவி நிற்கிறது.அந்த மின் ஆற்றலை மனித வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள மின்சார நிலையங்கள் தேவைப் படுகின்றன . பூமிக்கு அடியில் நீர் நிரம்பிப் பரவிக் கிடக்கின்றது.அந்த நீரைப் பயன்படுத்தி நம் அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டுமானால் கிணறு,குழாய்க் கிணறுகள்,வடிமுனைக் குழாய்க் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் கொண்டு வருகிறோம்.

               அடுத்து உயிர்ச் சத்துள்ள பால் தேவை என்றால் அதற்குப் பசுவை வளர்த்துஅதன் மடியிலிருந்து பால் பெறுகிறோம் .பசுவின் உடல் முழுவதும் பால் சத்து இருப்பினும் மடி வழியாகத்தான் பெற முடிகிறது. இவற்றுக்கெல்லாம் நம் முயற்சியும்,உழைப்பும்,பொருட் செலவும் ,காலமும் எவ்வளவு தேவை என்பதை அறிவோம். இதே போலத்தான் கடவுளை,அறிந்து அனுபவிக்க வேண்டுமென்றால்முயற்சி,உழைப்பு, பொருட் செலவு ,காலம் என்பன மிகத் தேவை. நினைத்தவுடன் பக்தி வருவதில்லை.;

           நீர், பால், மின்சாரம் இவற்றால் எல்லாம் நாம் பெறுவது உடல் வளர்ச்சியே;உடல் வளர்ச்சி உயிரை வளர்ப்பதற்காகவே என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.வீடு எதற்காக்க் கட்டுகிறோம் என்றால் நாம் வாழ்வதற்காக என்று புரிந்து கொள்கிறோம். வீட்டுக்காக மனிதன் இல்லை,மனிதனுக்காக வீடு.இவ்வாறு பல உதாரணங்கள் தரலாம். உடல்,உயிர் வளர்ச்சிக்காகவே என்பதைத் திருமூலர்,

                    “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

                     திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

                     உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

                     உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்று விளக்குகிறார்.

உடலுக்காக உயிர் இல்லை ;உயிருக்காகவே உடல் என்பதை ஏனோ புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து வருகின்றோம் .உயிரை வளர்க்க எழுந்தவையே திருக் கோயில்கள்.

திருக்கோயில்களின் ஆற்றல்:

ஆன்மீக ஆற்றலை உயிர்களிடத்தே வளர்த்து இறையுணர்வை –ஆன்ம அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அமைந்தவையே கோயில்கள்.மின் ஆற்றலைப் பெறவும் பெருக்கவும் மின் நிலையங்கள் அமைந்துள்ளன; நீரினைப் பெற குழாய்,கிணறு முதலியன உதவுகின்றன.ஆன்மீக ஆற்றலைப் பெறத் திருக் கோயில்கள் அமைந்துள்ளன.திருக்கோயில்கள் மனிதனிட்த்தே தெய்வ சக்தியைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ வழி வகுக்கின்றன.

மின் நிலையத்தில் அதிகாரிகள்,அலுவலர்கள்,தொழிலாளர்கள் ,இடைவிடாது பணியாற்றுவது போல் தருமகர்த்தாக்கள்,அர்ச்சகர்கள்,அலுவலர்கள்,திருக்கோயில் பணிகளை ஒழுங்காகச் செய்தால்,தெய்வீக, ஆன்மீக நெறி பரவி எல்லோரும் எவ்வுயிரும் இன்புற்றிருக்கப் பெருந்துணை புரிவதாகும் .

மின் நிலையம் போன்றவற்றில் சேவை தடைப்படுமானால் உடனடியாகப் பலன் தெரிந்துவிடும்.திருக் கோயில்களில் பணி தடைப் படுமானால்நாளடைவில் காலப் போக்கில்தான் தெரியும். மின் ஆற்றல் போன்றவை அறிவற்ற ஆற்றல்; ஜட சக்தி.திருக்கோயில்களில் இறை ஆற்றல் முற்றறிவுடையது. எனவே நன்மையையும் தீமையையும் நம்முடைய தரமறிந்து இறைவன் காலப் போக்கில் கொடுப்பான்.

பயன்களைப் பெறுவோம்:

திருக்கோயில்களின் ஆற்றல் கண்ணுக்குப் புலனாவதில்லை என்பதால்  அலட்சியம் செய்து விடக்கூடாது.உலகியல் பொருட்கள் நேர்முகப் பயன் தரும்.இறையியல் மறைமுகப் பயன் தருவது.

தாவரம்--- நேர்முக மறைமுகப் பயன் தருவதுண்டு.நேர்முகப் பலனைத் தருவதை அனைவரும் அறிவர்.மறைமுகப் பலனை எல்லோரும் உணர்வதில்லை. ஒருமரம் காய்,கனி, தளிர், இலை, முதலிய பயன்களைத் தருகிறது.இவைகள் காட்சிக்குத் தெரிவன. கண்ணுக்குத் தெரியாத சில பலன்களும் உண்டு. ஒரு மனிதன் அன்றாடம் சுவாசிக்கும் பிராண வாயுவுக்கு தாவரங்களல்லவா உதவுகிறது. ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயுவைத் தர 6 மரங்கள் தேவை என அறிஞர் குறிப்பிட்டுள்ளனர்.மரங்கள் அல்லனவற்றை ஏற்று நமக்கு நன்மை செய்கின்றன.அவை நாம் விடும் கரியமில வாயுவை உட்கொள்ளுகின்றன. பிராணவாயுவாகிய நல்ல காற்றை நமக்குச் சுவாசிக்கத் தருகின்றன.இது மறைமுகப் பயன்.ஆற்றங்கரையின் ஓரத்தில் இருக்கும் மரங்கள் தண்ணீர் ஆவியாகதவாறு தடுத்து உதவுகின்றன.ஒலியைக் கட்டுப்படுத்துவதும் மரம்,செடி, கொடிகளே.இப்படி மறைமுக,நேர்முகப் பலன்களை மரங்கள் தருகின்றன.  

பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்கின்ற நலன்களை,நன்மைகளைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.அதுபோல் கடவுளும் பெற்றோர்களைப் போல் நமக்கு மறைமுகப் பலன்களையே தருகிறார்.பிள்ளைகளைப் போல் நாமும் அவற்றை உணர்வதில்லை.  எனவே திருக்கோயில் வழிபாடு நம்முடைய அன்றாட வாழ்வியல் முன்னேற்றத்துக்கும்  ஆன்மீக முன்னேற்றத்திற்கும்  வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெறுதற்கும் பெருந்துணை புரிவன. கோயில்களில் ஒருவகையான அதிர்வலைகள் உண்டு,அவை நம்மை ஒருமுகப் படுத்தி இறை உணர்வைத் தூண்டும் இயல்பினவாம்.எனவேதான் எங்கும் நிறைந்த இறைவனை திருக் கோயில்களில் சென்று வழிபட வேண்டும்.

இத்தகு ஆற்றல் பெற்ற கோயில்களைப் பராமரிப்பது இன்றியமையாதது. பூசைகள் நடைபெறாத கோயில்களும் பராமரிக்க முடியாமல் சிதிலமடைந்த கோயில்களும் இன்னும் உள்ளன. அவற்றைப் பாதுகாத்தல் அவசியம்.

இறை நெறி போற்றி இன்பம் பெறுவோம்.     

by Swathi   on 24 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கிருபானந்த வாரியார் கிருபானந்த வாரியார்
பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள் பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்
திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்! திருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்!
இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு! இமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.