திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மாசு அற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற எங்குடி மரபோ டொத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர். சலம்பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மையொடு பொருந்தாத செயல்களைச் செய்யார். பூட்கை பூணுங்கொள்கை. இம்முன்று குறளாலும் குடிப்பிறந்தார் வறுமையுற்றபோதும் தங்குடிப் பண்பிற் குன்றாரென்பது கூறப்பட்டது.