|
||||||||
சமுதாய சந்நியாசி |
||||||||
ஓவியர் ரவிவர்மா அவர்களுக்கு கவர்னர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது . கவர்னர் தலைமையேற்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு கவர்னரே கைப்பட கடிதம் எழுதியிருந்தார் . அந்த அழைப்பை ஏற்க மறுத்து ரவிவர்மா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார் . “ தன்னுடைய குதிரை வண்டியோட்டி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று எழுதினார் . கவர்னர் நிகழ்ச்சியை விட அது அவ்வளவு முக்கியமா ? என்று அவரிடம்கேட்டபோது கவர்னர் நிகழ்ச்சி ஆடம்பரமானது பெருமக்கள் நிறைய பேர் கலந்து கொள்வார்கள் . எனவே நான் வரவேண்டுமென்று அவசியமில்லை . ஆனால் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நோயாளியை நான் அருகிலிருந்து கவனித்தால் தான்அவனைக் காப்பாற்ற முடியும் . எனக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும் என்றாராம் . மக்களுக்காக வாழ்பவர்களின் நெஞ்சில் இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும் . இப்படி இதோ ஒரு நிகழ்ச்சி . காந்தியடிகள் தமிழ்நாடு விஜயம் செய்த நேரத்தில் திருப்பத்தூர் அருகே அவரது கார் வந்து கொண்டிருந்தது . அந்த நேரத்தில் கொடிய வெய்யில் வியர்த்துக் கொட்டியது . பெரிய பாறைக் கற்களை சில தொழிலாளிகள் வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள் . பாறைகளைச் சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டிருந்த ஒருவன் அருகில் காந்தியடிகள் வந்தார் . இப்படி அழுக்கான வியர்வை நாற்றமுடைய ஆடை அணிந்திருக்கிறாயே குளிப்பது இல்லையா ? என்று கேட்டார் . “ சுவாமி ! இருப்பதே ஒன்றுதானே ! இதையும் துவைத்துக் காயப்போட்டால் கட்டிக் கொள்ள ஒன்றும் இருக்காதே . அதனாலேதான் நாங்கள் குளிப்பது கூட இல்லை ” என்றார் தொழிலாளி . மதுரைக்கு வந்து சேர்ந்த காந்தியடிகள் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை . மனதில் தொழிலாளிகள் நினைவு தான் இருந்தது . படுக்கையை விட்டு எழுந்த அண்ணல் தான் கட்டியிருந்த எட்டு முழ வேட்டியை மூன்றரை முழம்போட்டுக் கிழித்தார் . அதை மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு மிச்சமிருந்த துணியை மேலே போர்த்திக் கொண்டார் . ஏழை இந்தியக் குடிமகனின் இந்த ஆடைதான் இனி எனக்கும் ஆடை என உறுதி கொண்டு அதே கோலத்தில் அன்றைய கூட்டத்தில் மேடை ஏறினார் . “ காந்தியோ பரம ஏழை சந்நியாசி , கருதும் சுதந்திர ஞான விஸ்வாசி என்று இந்திய மக்கள் பெருமையோடு பாட்டுப் பாட காரணமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி தமிழ் மண்ணில் தான் நடந்தது . பின் காந்தியடிகள் திருநெல்வேலிக்குச் சென்றார் . காமராசரும் , ஞானம்பிள்ளையும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றனர் . மதுவிலக்கு , பிரம்மச்சரியம் , கதர் இயக்கம் , சத்தியாக்கிரகம் பற்றிய காந்தியடிகளின் பேச்சுக்கள் காமராசருக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின . கண் கொட்டாது காமராசர் காந்தியடிகளையே பார்த்தார் . தமிழகத்து மண்ணில் மதுரையம்பதியில் காந்தியடிகள் பூண்ட எளிய சன்னியாசிக்கோலமும் , சுதந்திர தாகம் தீர்வதற்காக மேற்கொண்டு வந்த பிரம்மச்சர்ய வாழ்வும் காமராசர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்தன . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|