தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைந்து, சினிமாவுக்கு வந்தவர்களுள் சந்தானமும், சிவகார்த்திகேயனும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அவர்கள் இருவருமே இதுவரை ஒரு படத்தில்கூட இணைந்து நடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தவிர மற்ற ஹீரோக்களுடன் சந்தானமும், சந்தானம் தவிர மற்ற காமெடியன்களும் சிவகார்த்திகேயனும் நடித்து வருகின்றனர்.
இதற்கு ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பினாலும், இருவரும் சொல்லி வைத்தாற்போல், எனக்கும், அவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை, அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை எனக் கூறிவந்தனர்.
இந்நிலையில் சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரையும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் சுந்தர்.சி.
சமீபகாலமாக தன் படங்களில் அதாவது கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள போன்ற படங்களில் சந்தானத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து வருகிறார் சுந்தர்.சி.
ஆம்பள படத்திற்குப் பிறகு தன் அடுத்தப் படம் குறித்து தற்போது இரண்டு வித சிந்தனைகளிலிருக்கிறாராம் சுந்தர்.சி. ஒன்று... அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது. இன்னொன்று.. 1996 ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான உள்ளத்தை அள்ளித்தா படத்தை ரீமேக் செய்வது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயனிடம் சுந்தர்.சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு கால்ஷீட் வாங்கி வைத்திருக்கிறார். இதனால் உள்ளத்தை அள்ளித்தாவில் கார்த்திக் நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயனையும், கவுண்டமணி கேரக்டரில் சந்தானத்தையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. ஒருவேளை இந்த ப்ராஜக்ட் திட்டமிட்டபடி வொர்க் அவுட்டாவில்லை என்றால், அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயனையும், சந்தானத்தையும் சேர்த்து வைத்து இயக்கலாமா என ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்தும் தன் சகாக்களோடு ஆலோசித்தும் வருகிறாராம் சுந்தர்.சி.
|