லஞ்ச - ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பிற்காகச் செயல்பட்டு வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், விருதுநகர், மதுரை, கோவை, அரியலூர், நாகை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடை முற்றுகைப் போராட்டங்களை நேற்று வெற்றிகரமாக நடத்தியது.
இது குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகை மாவட்டம் அரங்கக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடையை மூட போராட்டம் நடத்தி, கடையை மூடி கடை முன்பு பொங்கல் வைத்தோம். "குடியிருக்கும் வீட்டருகே மதுக்கடை நடத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மதுரை உயர்நீதி மன்றக்கிளை தீர்ப்பளித்த முக்கிய வழக்கை (13312 / 07-08-2014) ஒருங்கிணைத்தோம்.
கடந்த மார்ச் 16, 2014 நீதியரசர் சந்துரு அவர்கள் நடத்திய "சட்டப்படி மதுக்கடைகளை ஒழிப்பது எப்படி என்ற பயிற்சி அரங்கத்தை நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக ஜூன் 22, 2014 அன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மது ஒழிப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை ஒருங்கிணைத்தோம். அடுத்தகட்டமாக, மதுக்கடைகள் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலை செலுத்தும் ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்துகிறோம்.
2016 மதுவிலக்கு ஆண்டு என்ற லட்சியத்தை நோக்கிய சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மது ஒழிப்புப் போராட்டங்கள் வீரியமாய் தமிழகமெங்கும் தொடர உள்ளது என சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.
|