சவுதி அரேபியாவில் வேலை இழந்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மேலும் நான்கு மாதம் அவகாசம் வழங்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சவுதி அரேபியாவில் நிதாகத் என்ற புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின் படி பத்து வெளிநாட்டு தொழிளார்களுக்கு இணையாக ஒரு உள்ளநாட்டு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். இந்த புதிய சட்டத்தினால் ஐந்து லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. புதிய சட்டத்தின் படி வேலையை தக்க வைத்து கொள்ளவும், இயலாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றோடு முடிகிறது. பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தாயகம் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக பிரதிநிதிகள், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் படி சவுதி அரசை வற்புறுத்தினர். இந்நிலையில் சவுதி மன்னர் அப்துல் அஜிஸ் உரிய ஆவணங்கள் இல்ல வெளிநாட்டினர் வெளியேற கால அவகாசத்தை மேலும் நான்கு மாதங்கள் நீடிப்பதாக உத்தரவிட்டார். இதனால் வேலையிழந்த இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
|