LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

இரண்டாம் திருமுறை - முதல் பகுதி


2.01 திருப்பூந்தராய்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    1     செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
    புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
    துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
    பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.     2.1.1
    2     எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
    பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
    சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
    பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.     2.1.2
    3     சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
    பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
    துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
    மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.     2.1.3
    4    சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
    பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
    சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
    காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.     2.1.4
    5    பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
    புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
    துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
    வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.     2.1.5
    6    மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
    போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
    சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
    காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.     2.1.6
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.     2.1.7
    7     வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
    தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
    துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
    அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.     2.1.8
    8     வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
    புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
    சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
    கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.     2.1.9
    9    வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
    புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
    தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
    குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.     2.1.10
    10    மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
    புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
    பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
    அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.     2.1.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.2 திருவலஞ்சுழி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    11    விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
    வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
    தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
    பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.     2.2.1
    12    பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
    வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
    மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
    ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.     2.2.2
    13    கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
    வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
    சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
    விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.     2.2.3
    14     கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
    மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
    சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
    நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.     2.2.4
    15     கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
    வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
    முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
    சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.     2.2.5
    16     பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
    வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
    தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
    ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.     2.2.6
    17     கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
    வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
    அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
    பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.     2.2.7
    18    தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
    வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
    கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
    ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.     2.2.8
    19    தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
    வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
    ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
    சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.     2.2.9
    20     உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
    வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
    பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
    சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.     2.2.10
    21    வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
    வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
    நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
    பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.     2.2.11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.3 திருத்தெளிச்சேரி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    22    பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
    தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
    மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
    பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.     2.3.1
    23     விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
    திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
    வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
    களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.     2.3.2
    24     வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
    செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
    கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
    டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.     2.3.3
    25     காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந்
    தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
    ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
    வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.     2.3.4
    26     பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
    செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
    மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
    நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.     2.3.5
    27     தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
    றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
    குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
    கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.     2.3.6
    28     கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
    சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
    மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்
    தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.     2.3.7
    29     கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
    சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
    வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
    பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.     2.3.8
    30     காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
    சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
    மால டித்தல மாமல ரான்முடி தேடியே
    ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.     2.3.9
    31     மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
    செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்
    வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
    தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.     2.3.10
    32     திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
    மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
    தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
    தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.     2.3.11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பார்வதீசுவரர், தேவியார் - சத்தியம்மாளம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.4 திருவான்மியூர்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    33    கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
    திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
    உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
    வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.     2.4.1
    34     சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
    சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
    சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
    அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.     2.4.2
    35     கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
    தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
    தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
    ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.     2.4.3
    36     மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
    செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
    துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
    வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.     2.4.4
    37     மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
    திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
    துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
    விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.     2.4.5
    38     போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
    தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
    சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
    மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.     2.4.6
    39     வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
    தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
    தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
    பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.     2.4.7
    40     தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
    திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
    தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
    பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.     2.4.8
    41     பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
    திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
    சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
    எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.     2.4.9
    42     மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
    செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
    மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
    கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.     2.4.10
    43     மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
    ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
    ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.     2.4.11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.5 திருவனேகதங்காபதம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    44    நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
    சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
    ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
    பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.     2.5.1
    45     சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
    ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
    நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
    கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.     2.5.2
    46     செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
    அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
    கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
    நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே.     2.5.3
    47     தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
    சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
    அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
    எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.     2.5.4
    48     பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
    உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
    அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
    இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே.     2.5.5
    49     தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
    ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
    வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
    ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.     2.5.6
    50     வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
    குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
    ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
    மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.     2.5.7
    51     ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
    வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
    ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
    வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.     2.5.8
    52     கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
    எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
    அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
    நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.     2.5.9
    53     மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
    ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
    ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
    காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.     2.5.10
    54     தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
    நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
    அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
    சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே.     2.5.11
    இத்தலம் வடதேசத்திலுள்ளது.
    சுவாமிபெயர் - அருள்மன்னர், தேவியார் - மனோன்மணியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.6 திருவையாறு
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    55    கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
    ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
    பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
    ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.     01
    56     தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
    பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
    துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்
    அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.     02
    57     கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
    மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
    ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே
    ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.     03
    58     பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
    எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
    வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
    அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.     04
    59     வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
    வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
    தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
    ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.     05
    60     எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
    மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
    பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
    அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.     06
    61     ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
    சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
    வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
    ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.     07
    62     குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
    விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.
    பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
    அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.     08
    63     உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
    வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்
    கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
    அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.     09
    64     மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
    காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
    கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
    ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.     10
    65     கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
    மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
    மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே
    ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.     11
    66     பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்
    கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
    ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
    மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.     12

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.7 திருவாஞ்சியம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    67    வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
    பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
    தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
    என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.     01
    68    கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
    மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
    மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
    ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.     02
    69    மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
    நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
    தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
    பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.     03
    70     சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
    சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
    சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
    ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.     04
    71    கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
    தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
    செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
    தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.     05
    72    அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
    இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
    பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
    மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.     06
    73     விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
    கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
    பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
    தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.     07
    74    மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
    வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
    வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
    பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.     08
    75    செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
    கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
    நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
    தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.     09
    76    பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
    மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
    வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
    தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.     10
    77    தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
    தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
    நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
    ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.8 திருச்சிக்கல்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    78    வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
    தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
    வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
    ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.     01
    79    மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
    திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
    விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
    அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.     02
    80    நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
    சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
    வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
    பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.     03
    81     கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
    செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
    வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
    சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.     04
    82     மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
    தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
    வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
    தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.     05
    83    வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
    தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
    விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
    கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.     06
    84     முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்
    துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
    செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
    உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.     07
    85    தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
    பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
    செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
    உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.     08
    86    மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
    கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
    சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
    பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.     09
    87    பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
    கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
    சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
    பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.     10
    88     கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
    செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
    சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
    வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.9 திருமழபாடி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    89    களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
    உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
    வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
    டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.     01
    90    காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
    ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
    பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
    வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.     02
    91    உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்
    பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
    முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
    வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.     03
    92    பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
    வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்
    வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
    உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.     04
    93     தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
    பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
    வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
    கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.     05
    94     தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
    பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
    வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
    புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.     06
    95    சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
    எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்
    மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
    சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.     07
    96    இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
    உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
    விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
    வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.     08
    97    ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
    காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
    சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்
    மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.     09
    98     கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
    நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி
    பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
    மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.     10
    99    மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
    கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
    ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே.     11
    இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.10 திருமங்கலக்குடி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    100    சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
    வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
    நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்
    பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.     01
    101     பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
    மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
    இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
    அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.     02
    102    கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
    மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
    அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
    விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.     03
    103     பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
    மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்
    குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
    முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.     04
    104     ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
    மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
    ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே
    ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.     05
    105     தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
    வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்
    கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
    ஊன மானவை போயறும் உய்யும் வகையதே.     06
    106    வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
    வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி
    ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
    கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.     07
    107    பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
    வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்
    புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
    மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.     08
    108    ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்
    மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
    ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
    கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.     09
    109     மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
    பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்
    செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை
    ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.     10
    110    மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
    எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
    சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
    முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.11 சீகாழி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    111    நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
    வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
    சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
    இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.     01
    112    நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
    பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
    அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
    எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.     02
    113     அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
    பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
    விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
    இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.     03
    114    புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
    சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
    அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
    பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.     04
    115     நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
    விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
    கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
    பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.     05
    116    செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
    வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
    ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
    மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.     06
    117     துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
    இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
    அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
    நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.     07
    118     குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
    வென்றானை மென்மல ரானொடு மால்தேட
    நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
    நன்றானை நம்பெரு மானை நணுகுமே.     08
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.     09
    119    சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
    மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
    பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
    கோவாய கொள்கையி னாணடி கூறுமே.     10
    120    கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
    ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
    தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
    மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.12 திருவேகம்பம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    121    மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
    பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
    இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
    துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.     01
    122    நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
    உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
    கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
    நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.     02
    123    பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
    சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
    ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
    சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.     03
    124     குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
    மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
    மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
    சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.     04
    125     சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
    கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
    புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே.     05
    126     மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
    கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
    வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
    தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.     06
    127    விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
    கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
    நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
    தண்ணலா ராடுகின் றவலங் காரமே.     07
    128     தூயானைத் தூயவா யம்மறை யோதிய
    வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
    தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
    மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.     08
    129     நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
    பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
    ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
    மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.     09
    130     போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
    வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
    ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
    நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.     10
    131    அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
    கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
    சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
    பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.13 திருக்கோழம்பம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    132    நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
    ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
    கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
    ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.     01
    133    மையான கண்டனை மான்மறி யேந்திய
    கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
    செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய
    மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.     02
    134     ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
    வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
    காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
    நாதனை யேத்துமின் நும்வினை நையவே.     03
    135     சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
    விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
    குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
    உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.     04
    136    காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
    தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய
    சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
    ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.     05
    137    பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
    விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்
    கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
    கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.     06
    138    சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
    வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
    கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய
    நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.     07
    139     விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
    குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
    செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
    பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.     08
    140    நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
    படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்
    கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
    கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.     09
    141    புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
    பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
    கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
    அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.     10
    142     தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
    நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
    விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
    பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.14 திருவெண்ணியூர்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    143    சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
    உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
    விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
    உடையானை யல்லதுள் காதென துள்ளமே.     01
    144    சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
    ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
    வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
    நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.     02
    145    கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
    முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
    நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
    இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.     03
    146    மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
    காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
    ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
    ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.     04
    147    நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
    தாரானைத் தையலோர் பாகமு டையானைச்
    சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
    ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.     05
    148    முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
    தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய
    வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.     06
    149    காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
    பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்
    மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.     07
    150    மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
    செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி
    இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
    பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.     08
    151    மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
    கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா
    விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
    அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.     09
    152     குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
    மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
    விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
    தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.     10
    153    மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
    திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
    உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
    பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.15 திருக்காறாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    154    நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
    தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
    சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.     01
    155     மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
    விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
    நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
    பதியானே யென்பவர் பாவமி லாதாரே.     02
    156    விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
    மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
    கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
    எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.     03
    157    தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
    ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
    சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
    மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.     04
    158    கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
    மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
    சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
    நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.     05
    159     ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
    வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
    போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
    நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.     06
    160    சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
    ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
    காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
    ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.     07
    161    கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
    எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
    கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
    அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.     08
    162     பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
    மறையானே மாலொடு நான்முகன் காணாத
    இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
    உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.     09
    163    செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
    படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
    கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
    குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.     10
    164    ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
    ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
    பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
    வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.16 திருமணஞ்சேரி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    165    அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
    குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
    மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
    பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.     01
    166    விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
    நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
    மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.     02
    167    எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
    இப்பாலா யெனையும் ஆள வுரியானை
    வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
    மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.     03
    168    விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
    உடையானை ஊழிதோ றூழி உளதாய
    படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
    அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.     04
    169    எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
    வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
    மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
    செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.     05
    170    மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
    பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
    வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
    இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.     06
    171    எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
    கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
    மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
    பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.     07
    172     எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
    கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
    மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
    பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.     08
    173     சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
    கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
    வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
    எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.     09
    174    சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
    சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
    வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
    பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.     10
    175     கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
    தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
    மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
    பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.17 திருவேணுபுரம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    176    நிலவும் புனலும் நிறைவா ளரவும்
    இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
    உலவும் வயலுக் கொளியார் முத்தம்
    விலகுங் கடலார் வேணு புரமே.     01
    177     அரவார் கரவன் அமையார் திரள்தோள்
    குரவார் குழலா ளொருகூ றனிடங்
    கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
    விரவா கவல்லார் வேணு புரமே.     02
    178    ஆகம் மழகா யவள்தான் வெருவ
    நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
    போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
    மேகந் தவழும் வேணு புரமே.
        03
    179    காசக் கடலில் விடமுண் டகண்டத்
    தீசர்க் கிடமா வதுஇன் னறவ
    வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
    வீசத் துயிலும் வேணு புரமே.     04
    180    அரையார் கலைசேர் அனமென் னடையை
    உரையா வுகந்தா னுறையும் இடமாம்
    நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
    விரையார் பொழில்சூழ் வேணு புரமே.     05
    181    ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
    தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
    நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
    மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    182     ஏவும் படைவேந் தன்இரா வணனை
    ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
    தாவும் மறிமா னொடுதண் மதியம்
    மேவும் பொழில்சூழ் வேணு புரமே.     08
    183    கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
    அண்ணல் இருவர் அறியா இறையூர்
    வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
    விண்ணிற் றிகழும் வேணு புரமே.     09
    184    போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
    ஆகம் மறியா அடியார் இறையூர்
    மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
    மீகம் மறிவார் வேணு புரமே.     10
    185    கலமார் கடல்போல் வளமார் தருநற்
    புலமார் தருவே ணுபுரத் திறையை
    நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
    குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    186    சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.     01
    187    சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.     02
    188    அறையார் கழலும் மழல்வா யரவும்
    பிறையார் சடையும் முடையாய் பெரிய
    மறையார் மருகல் மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.     03
    189    ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
    மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.     04
    190    துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்ட முடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.     05
    191    பலரும் பரவப் படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
    புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ அடியா ளிவளே.     06
    192    வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
    மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
    தொழுவா ளிவளைத் துயராக் கினையே.     07
    193    இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை அலராக் கினையே.     08
    194     எரியார் சடையும் மடியும் மிருவர்
    தெரியா ததோர்தீத் திரளா யவனே
    மரியார் பிரியா மருகற் பெருமான்
    அரியாள் இவளை அயர்வாக் கினையே.     09
    195    அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய் மருகற் பெருமான்
    நெறியார் குழலி நிறைநீக் கினையே.     10
    196    வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.19 திருநெல்லிக்கா (197-207)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    197    அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
    மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
    திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
    நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     01
    198     பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
    மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
    விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
    நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     02
    199    நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்
    கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
    புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
    நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     03
    200    தலைதா னதுஏந் தியதம் மடிகள்
    கலைதான் திரிகா டிடம்நா டிடமா
    மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
    நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     04
    201    தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
    உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
    சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
    நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     05
    202    வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
    மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
    குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
    நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     06
    203    பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
    இறைதான் இறவாக் கயிலை மலையான்
    மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
    நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     07
    204    மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
    மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
    குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
    நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     08
    205    தழல்தா மரையான் வையந்தா யவனுங்
    கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
    அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
    நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     09
    206    கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
    எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
    மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
    நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.     10
    207    புகரே துமிலா தபுத்தே ளுலகின்
    நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
    நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
    பகர்வா ரவர்பா வமிலா தவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.20 திருஅழுந்தூர் (208-218)
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    208     தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
    தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
    அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
    வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.     01
    209     கடலே றியநஞ் சமுதுண் டவனே
    உடலே உயிரே உணர்வே யெழிலே
    அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
    விடலே தொழமா மடம்மே வினையே.     02
    210    கழிகா டலனே கனலா டலினாய்
    பழிபா டிலனே யவையே பயிலும்
    அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
    வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.     03
    211     வானே மலையே யெனமன் னுயிரே
    தானே தொழுவார் தொழுதாள் மணியே
    ஆனே சிவனே அழுந்தை யவரெம்
    மானே யெனமா மடம்மன் னினையே.     04
    212    அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
    நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
    இலையார் படையும் மிவையேந் துசெல்வ
    நிலையா வதுகொள் கெனநீ நினையே.     05
    213    நறவார் தலையின் நயவா வுலகிற்
    பிறவா தவனே பிணியில் லவனே
    அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
    மறவா தெழமா மடம்மன் னினையே.     06
    214    தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
    சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
    அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
    நெடுமா நகர்கை தொழநின் றனையே.     07
    215    பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
    கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
    அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
    வெரியார் தொழமா மடம்மே வினையே.     08
    216    மணீநீள் முடியான் மலையை அரக்கன்
    தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
    அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
    மணிமா மடம்மன் னியிருந் தனையே.     09
    217    முடியார் சடையாய் முனநா ளிருவர்
    நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
    அடிமே லறியார் அழுந்தை மறையோர்
    படியாற் றொழமா மடம்பற் றினையே.     10
    218     அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
    பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
    திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
    உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.21 திருக்கழிப்பாலை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    219    புனலா டியபுன் சடையாய் அரணம்
    அனலா கவிழித் தவனே அழகார்
    கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
    உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.     01
    220    துணையா கவொர்தூ வளமா தினையும்
    இணையா கவுகந் தவனே இறைவா
    கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
    இணையார் கழலேத் தவிடர் கெடுமே.     02
    221    நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
    முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
    கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
    அடியார்க் கடையா அவலம் மவையே.     03
    222    எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
    வளிகா யமென வெளிமன் னியதூ
    ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
    களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.     04
    223    நடநண் ணியொர்நா கமசைத் தவனே
    விடநண் ணியதூ மிடறா விகிர்தா
    கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
    உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.     05
    224    பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
    மறையார் தருவாய் மையினா யுலகிற்
    கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
    இறையார் கழலேத் தவிடர் கெடுமே.     06
    225    முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
    கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
    எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
    கதிரும் வினையா யினஆ சறுமே.     07
    226     எரியார் கணையால் எயிலெய் தவனே
    விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
    கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
    உரிதா கிவணங் குவனுன் னடியே.     08
    227    நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
    கனலா னவனே கழிப்பா லையுளாய்
    உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
    கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.     09
    228    தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
    துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
    அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
    உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.     10
    229     கழியார் பதிகா வலனைப் புகலிப்
    பழியா மறைஞா னசம்பந் தனசொல்
    வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
    கெழியார் இமையோ ரொடுகே டிலரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.22 திருக்குடவாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    230    திகழுந் திருமா லொடுநான் முகனும்
    புகழும் பெருமான் அடியார் புகல
    மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
    நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.     01
    231     ஓடுந் நதியும் மதியோ டுரகம்
    சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
    கூடுங் குழகன் குடவா யில்தனில்
    நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.     02
    232    கலையான் மறையான் கனலேந் துகையான்
    மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
    கொலையார் சிலையான் குடவா யில்தனில்
    நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.     03
    233    சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
    நலமென் முலையாள் நகைசெய் யநடங்
    குலவுங் குழகன் குடவா யில்தனில்
    நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.     04
    234    என்றன் உளமே வியிருந் தபிரான்
    கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
    குன்றன் குழகன் குடவா யில்தனில்
    நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.     05
    235    அலைசேர் புனலன் னனலன் னமலன்
    தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
    கொலைசேர் படையன் குடவா யில்தனில்
    நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.     06
    236     அறையார் கழலன் னமலன் னியலிற்
    பறையாழ் முழவும் மறைபா டநடங்
    குறையா அழகன் குடவா யில்தனில்
    நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.     07
    237    வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
    வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
    வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
    வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.     08
    238    பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
    தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
    கொன்னற் படையான் குடவா யில்தனில்
    மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.     09
    239    வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
    பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
    குயிலன் குழகன் குடவா யில்தனில்
    உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.     10
    240    கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
    நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
    தடமார் புகலித் தமிழார் விரகன்
    வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.23 திருவானைக்கா
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    241    மழையார் மிடறா மழுவா ளுடையாய்
    உழையார் கரவா உமையாள் கணவா
    விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
    அழகா எனும்ஆ யிழையாள் அவளே.     01
    242    கொலையார் கரியின் னுரிமூ டியனே
    மலையார் சிலையா வளைவித் தவனே
    விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
    நிலையா அருளாய் எனும்நே ரிழையே.     02
    243     காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
    பாலோ டுநெய்யா டியபால் வணனே
    வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
    ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.     03
    244     சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
    உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
    விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
    அறமிக் கதுவென் னுமெனா யிழையே.     04
    245    செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
    அங்கட் கருணை பெரிதா யவனே
    வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
    அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.     05
    246    குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
    தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
    வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
    நின்றா யருளாய் எனும்நே ரிழையே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    247    மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
    தொலையவ் விரலூன் றியதூ மழுவா
    விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
    அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.     08
    248    திருவார் தருநா ரணன்நான் முகனும்
    மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
    விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
    அரவா எனும்ஆ யிழையா ளவளே.     09
    249    புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
    ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
    மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
    அத்தா அருளாய் எனும்ஆ யிழையே.     10
    250    வெண்நா வலமர்ந் துறைவே தியனை
    கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
    பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
    விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.24 திருநாகேச்சரம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    251    பொன்னேர் தருமே னியனே புரியும்
    மின்னேர் சடையாய் விரைகா விரியின்
    நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
    மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.     01
    252    சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
    உறவார் கணையுய்த் தவனே உயரும்
    நறவார் பொழில்நா கேச்சர நகருள்
    அறவா எனவல் வினையா சறுமே.     02
    253    கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
    வில்லான் எழில்வே வவிழித் தவனே
    நல்லார் தொழுநா கேச்சர நகரில்
    செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.     03
    254    நகுவான் மதியோ டரவும் புனலும்
    தகுவார் சடையின் முடியாய் தளவம்
    நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
    பகவா எனவல் வினைபற் றறுமே.     04
    255     கலைமான் மறியுங் கனலும் மழுவும்
    நிலையா கியகை யினனே நிகழும்
    நலமா கியநா கேச்சர நகருள்
    தலைவா எனவல் வினைதான் அறுமே.     05
    256    குரையார் கழலா டநடங் குலவி
    வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
    நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
    அரைசே எனநீங் கும்அருந் துயரே.     06
    257    முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
    கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
    நடையார் தருநா கேச்சர நகருள்
    சடையா எனவல் வினைதான் அறுமே.     07
    258    ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
    நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
    வாயா ரவழுத் தவர்நா கேச்சரத்
    தாயே எனவல் வினைதான் அறுமே.     08
    259    நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
    சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
    நடுமா வயல்நா கேச்சர நகரே
    இடமா வுறைவா யெனஇன் புறுமே.     09
    260    மலம்பா வியகை யொடுமண் டையதுண்
    கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
    நலம்பாவியநா கேச்சர நகருள்
    சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.     10
    261    கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
    தலமார் தருசெந் தமிழின் விரகன்
    நலமார் தருநா கேச்சரத் தரனைச்
    சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.25 திருப்புகலி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    262    உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
    அகலி யாவினை யல்லல் போயறும்
    இகலி யார்புர மெய்த வன்னுறை
    புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.     01
    263     பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
    கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
    புண்ணி யன்னுறை யும்பு கலியை
    நண்ணு மின்னல மான வேண்டிலே.     02
    264    வீசு மின்புரை காதன் மேதகு
    பாச வல்வினை தீர்த்த பண்பினன்
    பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
    பேசு மின்பெரி தின்ப மாகவே.     03
    265     கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
    படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
    பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
    அடிகளை யடைந் தன்பு செய்யுமே.     04
    266     பாதத் தாரொலி பல்சி லம்பினன்
    ஓதத் தார்விட முண்ட வன்படைப்
    பூதத் தான்புக லிந்ந கர்தொழ
    ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.     05
    267    மறையி னான்ஒலி மல்கு வீணையன்
    நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
    பொறையி னானுறை யும்பு கலியை
    நிறையி னாற்றொழ நேச மாகுமே.     06
    268     கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
    இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
    பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
    பரவி டப்பயில் பாவம் பாறுமே.     07
    269    அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
    விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
    பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
    இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.     08
    270    மாலும் நான்முகன் றானும் வார்கழற்
    சீல மும்முடி தேட நீண்டெரி
    போலு மேனியன் பூம்பு கலியுள்
    பால தாடிய பண்ப னல்லனே.     09
    271    நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
    ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
    நின்ற வன்னிக ழும்பு கலியைச்
    சென்று கைதொழச் செல்வ மாகுமே.     10
    272    புல்ல மேறிதன் பூம்பு கலியை
    நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
    சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
    கில்லை யாம்வினை இருநி லத்துளே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.26 திருநெல்வாயில்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    273    புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
    மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
    நடையி னால்விரற் கோவ ணந்நயந்
    துடையி னாரெம துச்சி யாரே.     01
    274    வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
    தாங்கி னார்தலை யாய தன்மையர்
    நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
    ஓங்கி னாரெம துச்சி யாரே.     2
    275    நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
    இச்சை யாலுறை வாரெம் மீசனார்
    கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
    இச்சை யாரெம துச்சி யாரே.     03
    276    மறையி னார்மழு வாளி னார்மல்கு
    பிறையி னார்பிறை யோடி லங்கிய
    நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
    இறைவ னாரெம துச்சி யாரே.     04
    277    விருத்த னாகிவெண் ணீறு பூசிய
    கருத்த னார்கன லாட்டு கந்தவர்
    நிருத்த னாரநெல் வாயில் மேவிய
    ஒருத்த னாரெம துச்சி யாரே.     05
    278     காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
    பேரி னார்பிறை யோடி லங்கிய
    நீரி னாரநெல் வாயிலார் தொழும்
    ஏரி னாரெம துச்சி யாரே.     06
    279    ஆதி யாரந்த மாயி னார்வினை
    கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
    நீதி யாரநெல் வாயி லார்மறை
    ஓதி யாரெம துச்சி யாரே.     07
    280    பற்றி னான்அரக் கன்க யிலையை
    ஒற்றி னாரொரு கால்வி ரலுற
    நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
    பெற்றி யாரெம துச்சி யாரே.     08
    281     நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
    கூடி னார்குறு காத கொள்கையர்
    நீடி னாரநெல் வாயி லார்தலை
    ஓடி னாரெம துச்சி யாரே.     09
    282    குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
    பண்ட மாகவை யாத பண்பினர்
    விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
    உண்ட கண்டரெம் உச்சி யாரே.     10
    283     நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
    சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
    பண்ப யன்கொளப் பாட வல்லவர்
    விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    284    குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
    திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
    நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
    துலவி னான்அடி யுள்க நல்குமே.     01
    285    குறைவி லார்மதி சூடி யாடவண்
    டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
    இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்
    துறைவி னான்றனை யோதி உய்ம்மினே.     02
    286    என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
    நம்பன் நான்மறை பாடு நாவினான்
    இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
    தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.     03
    287    நாச மாம்வினை நன்மை தான்வருந்
    தேச மார்புக ழாய செம்மையெம்
    ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
    கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.     04
    288     மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
    பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
    இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
    தருவி சூடிடும் அடிகள் வண்ணமே.     05
    289    வெண்ணி லாமதி சூடும் வேணியன்
    எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
    அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்
    துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே.     06
    290    கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
    பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
    அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
    உடைய வாண ருகந்த கொள்கையே.     07
    291    எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
    அடர்த்த தோர்விர லான வனையாட்
    படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்
    முடித்த லம்முற முயலும் இன்பமே.     08
    292    பூவி னானொடு மாலும் போற்றுறுந்
    தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
    பாவி யாதெழு வாரைத் தம்வினை
    கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.     09
    293    கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
    விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
    எட்ட னைநினை யாத தென்கொலோ
    சிட்ட தாயுறை யாதி சீர்களே.     10
    294     கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
    இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
    தந்த மில்லியை யேத்து ஞானசம்
    பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.     11
    இத்தலம் வடதேசத்திலுள்ளது.
    சுவாமிபெயர் - நீலாசலநாதர், தேவியார் - நீலாம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.28 திருக்கருவூரானிலை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    295    தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
    சுண்ட லாருயி ராய தன்மையர்
    கண்ட னார்கரு வூரு ளானிலை
    அண்ட னாரரு ளீயும் அன்பரே.     01
    296    நீதி யார்நினைந் தாய நான்மறை
    ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
    காதி னார்கரு வூரு ளானிலை
    ஆதி யாரடி யார்தம் அன்பரே.     02
    297    விண்ணு லாமதி சூடி வேதமே
    பண்ணு ளார்பர மாய பண்பினர்
    கண்ணு ளார்கரு வூரு ளானிலை
    அண்ண லாரடி யார்க்கு நல்லரே.     03
    298    முடியர் மும்மத யானை யீருரி
    பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
    கடியு ளார்கரு வூரு ளானிலை
    அடிகள் யாவையு மாய ஈசரே.     04
    299    பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
    மங்கை யர்மணி நீல கண்டர்வான்
    கங்கை யர்கரு வூரு ளானிலை
    அங்கை யாடர வத்தெம் மண்ணலே.     05
    300    தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
    மேவர் மும்மதி லெய்த வில்லியர்
    காவ லர்கரு வூரு ளானிலை
    மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.     06
    301    பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
    பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
    கண்ணி னார்கரு வூரு ளானிலை
    நண்ணி னார்நமை யாளும் நாதரே.     07
    302    கடுத்த வாளரக் கன்க யிலையை
    எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
    அடர்த்த வன்கரு வூரு ளானிலை
    கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.     08
    303    உழுது மாநிலத் தேன மாகிமால்
    தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
    கழுதி னான்கரு வூரு ளானிலை
    முழுது மாகிய மூர்த்தி பாதமே.     09
    304    புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
    பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
    பத்தர் சேர்கரு வூரு ளானிலை
    அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.     10
    305    கந்த மார்பொழிற் காழி ஞானசம்
    பந்தன் சேர்கரு வூரு ளானிலை
    எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
    சிந்தை யிற்றுய ராய தீர்வரே.     11
    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.29 திருப்புகலி - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    306    முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
    பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
    துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
    சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.     01
    307     வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
    பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
    புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
    தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.     02
    308    பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
    நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
    பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
    தேவண விழாவளர் திருப்புகலி யாமே.     03
    309    மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
    கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
    செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
    தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.     04
    310    முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
    பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
    புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
    செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.     05
    311    வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
    அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
    கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
    தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.     06
    312    நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
    வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
    பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
    செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.     07
    313    பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
    அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
    நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
    செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.     08
    314    கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
    ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
    நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
    தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.     09
    315    கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
    குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
    பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
    செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.     10
    316    செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
    அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
    பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
    வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    317    மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
    நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
    திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்
    கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்.     01
    318    விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்
    தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
    எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
    பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்.     02
    319     விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
    திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
    பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
    புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.     03
    320    வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
    துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
    உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
    புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்.     04
    321    பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
    கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
    சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
    விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே.     05
    322    அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
    நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
    தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
    புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்.     06
    323     மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
    அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
    திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
    புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.     07
    324    இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
    உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
    வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
    புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.     08
    325     வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்
    கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
    தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
    புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.     09
    326    விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
    உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
    படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
    அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே.     10
    327    கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்
    தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
    சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
    பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    328    சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
    மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
    கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.     01
    329     வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
    கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
    விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
    கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.     02
    330    வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
    போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
    நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
    காதவ னிருப்பது கருப்பறிய லூரே.     03
    331     மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
    உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
    தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
    கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.     04
    332     ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
    நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
    விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
    கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.     05
    333     விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
    பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
    எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
    கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.     06
    334     ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
    சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
    தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
    காதின னிருப்பது கருப்பறிய லூரே.     07
    335     வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
    பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
    கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
    காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.     08
    336     பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
    கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
    நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
    கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.     09
    337     அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
    சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
    குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
    கற்றென இருப்பது கருப்பறிய லூரே.     10
    338    நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
    கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
    பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
    வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.32 திருவையாறு - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    339    திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
    உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
    விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
    மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.     01
    340    கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
    இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
    சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
    வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.     02
    341    கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
    கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
    கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
    வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.     03
    342     நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
    றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
    தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
    மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.     04
    343     வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
    கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
    நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
    மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.     05
    344     பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
    பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
    கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
    மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.     06
    345     துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
    பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
    என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
    மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.     07
    346     இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
    அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
    துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
    வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.     08
    347     பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
    பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
    கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
    வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.     09
    348     பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
    சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
    நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
    மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.     10
    349    வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
    ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
    பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
    நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.33 திருநள்ளாறு - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    350    ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
    மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
    கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
    நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.     01
    351     விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
    புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
    பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
    நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.     02
    352     விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
    துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
    வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
    நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.     03
    353     கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
    செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
    புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
    நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.     04
    354     நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
    வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
    அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
    நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.     05
    355     பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
    காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
    கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
    நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.     06
    356     நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
    பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
    வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
    ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.     07
    357     கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
    எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
    அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
    நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.     08
    358    உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
    பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
    வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
    நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.     09
    359    சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
    பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
    மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
    சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.     10
    360    ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
    நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
    மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
    பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.34 திருப்பழுவூர் - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    361     முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
    அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
    மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
    பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.     01
    362     கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
    ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
    மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
    பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.     02
    363     வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
    போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
    வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
    பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.     03
    364     எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
    கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
    மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
    பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.     04
    365     சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
    நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
    வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
    பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே.     05
    366    மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
    மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
    பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
    பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.     06
    367     மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
    சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
    அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
    பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.     07
    368     உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
    றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
    குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
    பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே.     08
    369     நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
    அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
    ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
    மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.     09
    370    மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
    முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
    மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
    பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.     10
    371    அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
    பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
    சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
    வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.35 திருக்குரங்காடுதுறை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    372     பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
    இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
    அரவச் சடையந் தணன்மேய அழகார்
    குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.     01
    373     விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
    இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
    வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
    கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.     02
    374     நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
    இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
    மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
    குறைவில் லவனூர் குரங்காடு துறையே.     03
    375     விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
    தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
    பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
    கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.     04
    376     நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
    ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
    ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
    கூறான்நகர் போல்குரங் காடு துறையே.     05
    377     நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்
    துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
    மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
    குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.     06
    378     பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
    முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
    அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
    குழகன் னகர்போல் குரங்காடு துறையே.     07
    379     வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
    நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
    கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
    குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.     08
    380    நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
    படியா கியபண் டங்கனின் றெரியாடி
    செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
    கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.     09
    381     துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
    கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
    நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
    குவையார் கரைசேர் குரங்காடு துறையே.     10
    382     நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
    கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
    சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
    வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.36 திருஇரும்பூளை - வினாவுரை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    383     சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
    வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
    ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.     01
    384     தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
    குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
    எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.     02
    385     அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
    மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
    இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.     03
    386     நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
    கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
    இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.     04
    387     சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
    நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
    எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.     05
    388     தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
    சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
    ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    காடார் கடுவே டுவனான கருத்தே.     06
        இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     07
    389     ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
    பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
    இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.     08
    390    துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
    கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
    இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.     09
    391     துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
    பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
    இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.     10
    392     எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
    சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
    செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
    பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    393     சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
    மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
    கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.     01
    394     சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
    வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
    கங்கை சடைமே லடைவித்த கருத்தே.     02
    395     குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
    மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
    அரவம் மதியோ டடைவித்த லழகே.     03
    396    படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
    மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
    உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
    கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.     04
    397    வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
    தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
    ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
    கானார் கடுவே டுவனான கருத்தே.     05
    398     பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
    மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
    உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
    தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.     06
    399     வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
    சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
    மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
    காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.     07
    400     கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
    வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
    இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
    அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.     08
    401    கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
    தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
    ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
    வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.     09
    402    வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
    ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
    ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
    ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.     10
    403    காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
    வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
    ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
    வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.38 திருச்சாய்க்காடு
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    404    நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
    சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
    மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
    தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.     01
    405    பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
    வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
    கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
    தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.     02
    406    நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
    டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
    ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
    தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.     03
    407    வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
    புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
    இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
    தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.     04
    408    ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
    கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
    மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
    தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.     05
    409    துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
    அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
    வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
    சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.     06
    410    வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
    ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
    மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
    தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.     07
    411     இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
    அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
    மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
    தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.     08
    412     மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
    வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
    சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
    காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.     09
    413     ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
    ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
    வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
    பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.     10
    414    ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
    ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
    ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
    வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.39 திருக்ஷேத்திரக்கோவை
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    415     ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
        வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
        கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
        கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
        நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
        குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
        பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
        பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.     01
    416     அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
        றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
        கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
        பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
        பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
        பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
        எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
        கடல் நீந் தலாங் காரணமே.     02
    417     அட்டா னமென் றோதியநா லிரண்டும்
        அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
        எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
        குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
        மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
        மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
        சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
        அரும்பா வங்களா யினதேய்ந் தறவே.     03
    418    அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
        பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
        சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
        திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
        பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
        விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
        உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி
        உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே     04
    419     ஆறை வடமா கறலம்பர் ஐயா
        றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
        சேறை துலைபுக லூரக லாதிவை
        காதலித் தானவன் சேர்பதியே.     05
        இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    420     மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
        மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
        இனவஞ் சொலிலா இடைமா மருதும்
        இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
        கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
        கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
        தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
        தவமாம் மலமா யினதா னருமே.     06
    421    மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்
        முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி
        காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
        கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
        கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
        கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** **     07
        இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    422     **** **** குலாவு திங்கட்
        சடையான் குளிரும் பரிதி நியமம்
        போற்றூ ரடியார் வழிபா டொழியாத்
        தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
        காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
        நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே.     08
        இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
    423     நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
        நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
        நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர்
        சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
        கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த
        கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்
        சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
        குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே.     09
    424     குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
        குருந்தங் குடிதே வன்குடி மருவும்
        அத்தங் குடிதண் டிருவண் குடியும்
        அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
        நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
        நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
        புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
        நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.     10
    425     அம்மா னையருந் தவமாகி நின்ற
        அமரர் பெருமான் பதியான வுன்னிக்
        கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
        கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
        இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
        இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
        விம்மா வெருவா விரும்பும் மடியார்
        விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே.     11
    இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
    வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
    நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
    மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
    தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.40 திருப்பிரமபுரம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    426     எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
    தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
    கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
    வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.     01
    427     தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
    காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
    ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
    காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.     02
    428    நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
    உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
    அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
    பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.     03
    429    சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
    கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
    தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
    நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.     04
    430    கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
    பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
    விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
    எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.     05
    431    எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
    கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
    கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
    சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.     06
    432    சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
    இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
    அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
    நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.     07
    433     எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
    நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
    உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
    தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.     08
    434    கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
    அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
    தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
    உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.     09
    435    உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
    முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
    பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
    சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.     10
    436    தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
    கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
    முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
    பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.41 திருச்சாய்க்காடு
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    437     மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
    கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
    விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
    தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.     01
    438     போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
    சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
    வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
    பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.     02
    439    நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
    சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
    பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
    நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.     03
    440    கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
    தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
    மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
    பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.     04
    441    கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
    பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
    தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
    ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.     05
    442     சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
    தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
    ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
    தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.     06
    443    மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
    சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
    கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
    தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.     07
    444     தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
    படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
    தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
    இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.     08
    445     வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
    ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
    தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
    தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.     09
    446    குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
    அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
    திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
    புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.     10
    447    நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
    அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
    சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
    எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.42 திருஆக்கூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    448    அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்
    தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
    புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
    தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     01
    449    நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
    காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
    கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்
    தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.     02
    450    வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்
    தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
    வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்
    தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     03
    451     கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்
    பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
    அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
    தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     04
    452    வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
    பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்
    ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்
    தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     05
    453    பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
    கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
    விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்
    தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     06
    454    வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
    வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்
    பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
    தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     07
    455    கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி
    இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
    பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந்
    தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     08
    456    நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
    தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
    இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
    தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     09
    457    நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்
    பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்
    சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
    தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     10
    458     ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
    மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
    நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
    பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.43 திருப்புள்ளிருக்குவேளூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    /table>
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.44 திருஆமாத்தூர்
        பண் - சீகாமரம்
        திருச்சிற்றம்பலம்

    459    கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
    உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
    தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
    புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.     01
    460    தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
    ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
    மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
    பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.     02
    461    வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
    ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
    யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
    பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.     03
    462    மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
    ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
    ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
    போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.     04
    463    கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
    பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
    வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
    போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.     05
    464    திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
    அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
    மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
    புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.     06
    465    அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
    பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
    பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
    புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.     07
    466    பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
    மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
    எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
    புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.     08
    467    வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
    சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
    ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
    போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.     09
    468     கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
    தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
    விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
    புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.     10
    469    செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
    பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
    கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
    மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.     11
    470     துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
    பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
    அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
    பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.     01
    471    கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
    மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
    அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
    பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.     02
    472    பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
    தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
    ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
    சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.     03
    473     கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
    பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
    ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
    காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.     04
    474    பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
    சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
    ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
    வேட நெறிநில்லா வேடமும் வேடமே.     05
    475    சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
    காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
    யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்
    தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.     06
    476     மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
    வேறாக நில்லாத வேடமே காட்டினான்
    ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
    கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.     07
    477    தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
    நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
    ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
    கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.     08
    478    புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
    உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
    அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
    வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.     09
    479    பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
    கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
    அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
    நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.     10
    480     ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
    கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
    நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
    பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.45 திருக்கைச்சினம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    481     தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
    மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
    நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
    கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.     01
    482     விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
    படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
    நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
    கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.     02
    483    பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
    சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
    ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
    காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.     03
    484    பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
    சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
    விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்
    கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.     04
    485    தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
    வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
    சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக்
    காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.     05
        * நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.
    486    மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
    அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
    திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
    கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.     06
    487    வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
    எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
    பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
    கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.     07
    488    போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
    மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
    நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
    காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.     08
    489    மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
    எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
    பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
    கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.     09
        இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     10
    490    தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
    பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
    விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.     
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.46 திருநாலூர்த்திருமயானம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    491    பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
    மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
    நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
    மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.     01
    492     சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
    ஆடும் பறைசங் கொலியோ டழகாக
    நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்
    பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.     02
    493     கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
    றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
    நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
    சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.     03
    494     கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
    நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
    ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
    சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.     04
    495     கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
    பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
    நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
    இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே.     05
    496     கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
    பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
    நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
    நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.     06
    497     கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
    பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
    நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
    எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே.     07
    498     பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
    வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
    நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
    அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.     08
    499     மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
    மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
    நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
    பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.     09
    500     துன்பாய மாசார் துவராய போர்வையார்
    புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
    நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
    இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.     10
    501     ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
    நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
    சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
    கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    502    மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.     01
    503    மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
    துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.     02
    504     வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
    துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
    தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.     03
    505    ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
    கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.     04
    506    மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
    தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.     05
    507    மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
    கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    அடலானே றூரும் அடிக ளடிபரவி
    நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.     06
    508    மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
    கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
    ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.     07
    509    தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
    கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
    கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.     08
    510     நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
    உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
    கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.     09
    511    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
    இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.     10
    512    கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
    ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
    வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.     11
    இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.48 திருவெண்காடு
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    513     கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.     01
    514     பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.     02
    515    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.     03
    516     விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.     04
    517    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.     05
    518    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.     06
    519    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.     07
    520    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.     08
    521    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
    றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.     09
    522    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.     10
    523    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.49 சீகாழி
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    524    பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
        பாடி யாடிய வோசை நாடொறும்
        கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
        பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
        மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
        அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.     01
    525     மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
        மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
        கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
        வண்ட லம்பிய கொன்றை யானடி
        வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
        விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.     02
    526     நாடெ லாமொளி யெய்த நல்லவர்
        நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
        காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
        தோடு லாவிய காது ளாய்சுரி
        சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
        வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.     03
    527     மையி னார்பொழில் சூழ நீழலில்
        வாச மார்மது மல்க நாடொறுங்
        கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
        ஐய னேயர னேயென் றாதரித்
        தோதி நீதியு ளேநி னைப்பவர்
        உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.     04
    528     மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
        வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
        கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
        வலிய காலனை வீட்டி மாணிதன்
        இன்னு யிரளித் தானை வாழ்த்திட
        மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.     05
    529     மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
        வானு ளோர்களும் வந்து வைகலுங்
        கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
        நெற்றி மேலமர் கண்ணி னானைநி
        னைந்தி ருந்திசை பாடுவார் வினை
        செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.     06
    530    தான லம்புரை வேதி யரொடு
        தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
        கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
        ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
        வாகி நின்றவொ ருவனே யென்றென்
        றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.     07
    531     மைத்த வண்டெழு சோலை யாலைகள்
        சாலி சேர்வய லார வைகலுங்
        கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
        அத்த னேயர னேய ரக்கனை
        யன்ற டர்த்துகந் தாயு னகழல்
        பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.     08
    532     பரும ராமொடு தெங்கு பைங்கத
        லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
        கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
        திருவின் நாயக னாய மாலொடு
        செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
        இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.     09
    533     பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
        யாது வண்டுகி லாடை போர்த்தவர்
        கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
        தொண்டை வாயுமை யோடுங் கூடிய
        வேடனே சுட லைப்பொ டியணி
        அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.     10
    534    பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
        உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
        கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
        நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
        ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
        உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.50 திருஆமாத்தூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    535    குன்ற வார்சிலை நாண ராவரி
        வாளி கூரெரி காற்றின் மும்மதில்
        வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
        தென்ற லார்மணி மாட மாளிகை
        சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
        அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.     01
    536     பரவி வானவர் தான வர்பல
        ருங்க லங்கிட வந்த கார்விடம்
        வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
        கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
        சந்து காரகில் தந்து *பம்பைநீர்
        அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.     02
        * பம்பை என்பது ஒரு நதி.
    537    நீண்ட வார்சடை தாழ நேரிழை
        பாட நீறுமெய் பூசி மாலயன்
        மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
        பூண்ட கேழல்ம ருப்பரா விரி
        கொன்றை வாளரி யாமை பூணென
        ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.     03
    538     சேலின் நேரன கண்ணி வெண்ணகை
        மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
        தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
        பாலின் நேர்மொழி மங்கை மார்நட
        மாடி யின்னிசை பாட நீள்பதி
        ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.     04
    539     தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
        தூவி நின்கழ லேத்து வாரவர்
        உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
        வண்ட லார்கழ னிக்க லந்தும
        லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
        அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.     05
    540    ஓதி யாரண மாய நுண்பொருள்
        அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
        நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
        சோதியே சுடரே சுரும் பமர்
        கொன்றை யாய்திரு நின்றி யூருறை
        ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.     06
    541     மங்கை வாணுதன் மான்ம னத்திடை
        வாடி யூடம ணங்க மழ்சடைக்
        கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
        பங்க யமது வுண்டு வண்டிசை
        பாட மாமயி லாட விண்முழ
        வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.     07
    542    நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
        யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
        வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
        குன்றெ டுத்தநி சாசரன் திரள்
        தோளி ருபது தான் நெரிதர
        அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.     08
    543     செய்ய தாமரை மேலி ருந்தவ
        னோடு மாலடி தேட நீண்முடி
        வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
        தைய லாளொடு பிச்சைக் கிச்சைத
        யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
        டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.     09
    544     புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
        நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
        பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
        முத்தை வென்ற முறுவ லாளுமை
        பங்க னென்றிமை யோர் பரவிடும்
        அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.     10
    545     வாடல் வெண்டலை மாலை யார்த்தும
        யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
        ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
        கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
        கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
        பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.     11
    ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,
    ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.51 திருக்களர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    546    நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
        நீண்ட மாவய லீண்டு மாமதில்
        தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
        ஊரு ளாரிடு பிச்சை பேணும்
        ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
        ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.     01
    547     தோளின் மேலொளி நீறு தாங்கிய
        தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
        தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
        வேளின் நேர்விச யற்க ருள்புரி
        வித்த காவிரும் பும்ம டியாரை
        ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.     02
    548     பாட வல்லநல் மைந்த ரோடு
        பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
        சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
        நீட வல்ல நிமல னேயடி
        நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
        ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.     03
    549     அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
        ஆடவர் பயில் மாட மாளிகை
        செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
        என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை
        வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
        கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே.     04
    550    கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்
        கிண்டி மாமது வுண்டி சைசெயத்
        தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
        மங்கை தன்னொடுங் கூடிய மண
        வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
        தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.     05
    551    கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
        சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
        சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
        நீல மேவிய கண்டனே நிமிர்
        புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
        ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே.     06
    552     தம்ப லம்மறி யாதவர் மதில்
        தாங்கு மால்வரை யால ழலெழத்
        திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
        வம்ப லர்மலர் தூவி நின்னடி
        வானவர் தொழக் கூத்து கந்துபே
        ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.     07
    553     குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி
        மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
        சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
        நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
        தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
        அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.     08
    554     பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
        பாட லாடலொ டார வாழ்பதி
        தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
        உண்ணி லாவிய வொருவ னேயிரு
        வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
        அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே.     09
    555     பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
        பாட்டொ டும்பல பணிகள் பேணிய
        தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
        வாக்கின் நான்மறை யோதி னாயமண்
        தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
        ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.     10
    556     இந்து வந்தெழு மாட வீதியெ
        ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
        செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
        அந்தி யன்னதொர் மேனி யானை
        அமரர் தம்பெரு மானை ஞானசம்
        பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.52 திருக்கோட்டாறு
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    557    கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
        செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்
        குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
        இருந்த எம்பெரு மானை யுள்கி
        இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
        வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே.     01
    558     நின்று மேய்ந்து நினைந்து மாகரி
        நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
        குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
        என்றும் மன்னிய எம்பிரான் கழ
        லேத்தி வானர சாள வல்லவர்
        பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.     02
    559     விரவி நாளும் விழாவி டைப்பொலி
        தொண்டர் வந்து வியந்து பண்செயக்
        குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
        அரவ நீள்சடை யானை யுள்கிநின்
        றாத ரித்துமுன் அன்பு செய்தடி
        பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.     03
    560    அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்
        ஆட கம்பெறு மாட மாளிகைக்
        கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
        நம்பனே நடனே நலந் திகழ்
        நாதனே யென்று காதல் செய்தவர்
        தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.     04
    561     பழைய தம்மடி யார்துதி செயப்
        பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
        குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
        கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்
        கானி டைக்கண மேத்த ஆடிய
        அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.     05
    562     பஞ்சின் மெல்லடி மாத ராடவர்
        பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
        கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
        மஞ்ச னேமணி யேமணி மிடற்
        றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
        துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.     06
    563     கலவ மாமயி லாளொர் பங்கனைக்
        கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
        குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
        நிலவ மாமதி சேர்ச டையுடை
        நின்ம லாவென வுன்னு வாரவர்
        உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.     07
    564     வண்ட லார்வயற் சாலி யாலைவ
        ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
        கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
        தொண்டெ லாந்துதி செய்ய நின்ற
        தொழில னேகழ லால ரக்கனை
        மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.     08
    565     கருதி வந்தடி யார்தொ ழுதெழக்
        கண்ண னோடயன் தேட ஆனையின்
        குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
        விருதி னான்மட மாதும் நீயும்வி
        யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
        ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.     09
    566     உடையி லாதுலழ் கின்ற குண்டரும்
        ஊணருந் தவத் தாய சாக்கியர்
        கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
        படையி லார்மழு வேந்தி யாடிய
        பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
        அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே.     10
    567     கால னைக்கழ லாலு தைத்தொரு
        காம னைக்கன லாகச் சீறிமெய்
        கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
        மூல னைமுடி வொன் றிலாதவெம்
        முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
        மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.53 திருப்புறவார் - பனங்காட்டூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    568    விண்ண மர்ந்தன மும்ம தில்களை
        வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
        பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
        பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
        பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
        கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.     01
    569     நீடல் கோடல் அலரவெண் முல்லை
        நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
        பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
        துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
        ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.     02
    570    வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
        வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
        பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
        பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
        மத்த மும்புனை வாய்க ழலிணைத்
        தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.     03
    571     மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி
        மேற்ப டுகலின் மேதி வைகறை
        பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
        ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
        அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
        சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.     04
    572     செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
        சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
        பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
        கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
        கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
        அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.     05
    573    நீரி னார்வரை கோலி மால்கடல்
        நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
        பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
        காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
        கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
        சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.     06
    574     கைய ரிவையர் மெல்வி ரல்லவை
        காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
        பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
        மெய்ய ரிவையோர் பாக மாகவும்
        மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
        பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.     07
    575     தூவி யஞ்சிறை மென்ன டையன
        மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
        பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
        மேவி யந்நிலை யாய ரக்கன
        தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
        ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.     08
    576     அந்தண் மாதவி புன்னை நல்ல
        அசோக மும்மர விந்த மல்லிகை
        பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
        எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
        என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
        சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.     09
    577     நீண மார்முரு குண்டு வண்டினம்
        நீல மாமலர் கவ்வி நேரிசை
        பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
        நாண ழிந்துழல் வார்ச மணரும்
        நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
        ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.     10
    578     மையி னார்மணி போல்மி டற்றனை
        மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
        பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
        ஐய னைப்புக ழான காழியுள்
        ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
        செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.     11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.54 திருப்புகலி
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    579    உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
    கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
    பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
    திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.     01
    580    நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
    ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
    போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
    சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.     02
    581     அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
    மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
    பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
    எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.     03
    582     கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
    மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
    பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
    எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே.     04
    583     நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
    பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
    பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
    தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.     05
    584     மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
    பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
    விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
    கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.     06
    585     களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
    அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
    தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
    ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.     07
    586     பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
    டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
    புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
    வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     08
    587     சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
    கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
    புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
    நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.     09
    588     நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
    கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
    பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
    வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     10
    589    ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
    அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
    செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
    எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.55 திருத்தலைச்சங்காடு
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    590    நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்
    சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
    குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்
    தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.     01
    591    துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
    மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
    *பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
    அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.     02
        * பிணி - பிணித்தல்
    592     சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
    நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
    தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
    ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.     03
    593     வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
    ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
    கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
    மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     04
    594     சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
    நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
    ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.     05
    595     நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
    புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
    சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
    நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.     06
    596     அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
    கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
    பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
    கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.     07
    597    திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
    வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
    அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
    நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.     08
    598     பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
    போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
    தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
    சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.     09
    599     அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
    தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
    தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
    நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.     10
    600    நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
    குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
    ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
    மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.     11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.56 திருவிடைமருதூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    601    பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
    தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
    எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
    மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     01
    602    நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
    போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
    ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
    சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.     02
    603    அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்
    சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
    எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
    பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.     03
    604    பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
    வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
    எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
    செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.     04
    605    வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
    பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
    திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
    பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.     05
    606    சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
    வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
    இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
    புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.     06
    607    புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
    சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
    இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
    கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.     07
    608    சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
    தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
    இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
    நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.     08
    609    மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
    கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
    அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
    நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.     09
    610    சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
    துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
    இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
    அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.     10
    611    கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
    நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
    எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
    சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.57 திருநல்லூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    612     பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
    பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
    திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
    மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     01
    613     அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
    கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
    சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
    மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     02
    614     குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
    பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
    சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
    மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     03
    615     கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
    மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
    தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
    வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     04
    616     நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
    அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
    திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
    மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     05
    617     கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
    வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
    தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
    ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.     06
    618     ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
    மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
    தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
    வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     07
    619    காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
    மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
    தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
    மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     08
    620    போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது
    நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
    தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
    மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.     09
    621     பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
    றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
    நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
    மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.     10
    622     கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
    செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
    பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
    சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.    11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.58 திருக்குடவாயில்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    623    கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
    அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
    குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
    நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.     01
    624     அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
    செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
    குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
    படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.     02
    625     கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
    றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
    குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
    நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.     03
    626     மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
    தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
    குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
    நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.     04
    627     இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்
    பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
    குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
    விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.     05
    628     அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
    இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
    குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
    திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.     06
    629     பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
    ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
    கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
    நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.     07
    630     கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
    அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
    தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
    பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.     08
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     09
    631     தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
    ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்
    ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்
    தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.     10
    632    நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
    குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
    ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
    தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.59 சீகாழி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    633    நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
    கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
    வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
    அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.     01
    634     ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
    காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
    நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
    பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.     02
    635     வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
    கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
    முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
    அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.     03
    636     மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
    கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
    பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
    நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.     04
    637     பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
    கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
    சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
    கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.     05
    638     மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
    கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
    பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
    சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.     06
    639     புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
    கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
    பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
    முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.     07
    640    அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
    கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
    பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
    பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.     08
    641     மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
    காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
    பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
    கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.     09
    642     அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
    கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
    தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
    துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.     10
    643     ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
    காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
    தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
    வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.     11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    2.60 திருப்பாசூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    644    சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
    வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
    மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
    பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.     01
    645     பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
    றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
    ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
    பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.     02
    646     கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
    மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
    நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
    பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.     03
    647     பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்
    கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
    தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்
    பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.     04
    648     ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
    சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
    வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
    பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.     05
    649     கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
    தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
    மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
    பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.     06
    650    கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
    எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
    உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
    பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.     07
    651     தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
    கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
    பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
    பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.     08
    652     நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்
    புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
    செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
    பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.     09
    653     தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
    நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
    காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
    பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.     10
    654     ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
    தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்
    கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
    ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.     11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.