LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தன்னம்பிக்கை (Self Confidence )

தன்னம்பிக்கை-பகுதி 2

தன்னம்பிக்கை-பகுதி 3  

-சூர்யா சரவணன் 


    இலக்கு எது?


  ஒருவர் முன்னேற வேண்டும் என்று நினைப்பது பொதுவான விருப்பம். எதை நோக்கி முன்னேற வேண்டும் எனத் தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளாமல் ஒருவர் மாணவன்முன்னேற முடியாது. குடும்ப வருவாயை உயர்த்த வேண்டும் என்பது குறிக்கோளானால், வருவாய்க்கான ஆதார வாயில்களைக் கண்டறிந்து கொள்ளவேண்டும். உலகின் மிகப்பெரிய மலைச்சிகரம் எவரெஸ்ட். அதைத் தொடுவதென்றால் உயிருக்கு அஞ்சாதவர்களும் சிகரம் தொடமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களும்தான் முயற்சியில் ஈடுபட முடியும். மலையேறும் போது கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். மரணத்துக்கு சவால் விடும் முயற்சி. மரணத்தோடு ஆடும் கண்ணாமூச்சி அது. கண் தெரிந்தவர்களுக்கே இந்த நிலை. ஆனால் கண் பார்வையற்ற ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்த நிகழச்சியை தெரிந்து கொள்ளும் போது அவர் சென்றடைய வேண்டிய இலக்கை சரியாக நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறார், முன்னேறி இருக்கிறார் என்று தெரிகிறது.


  திட்டமிடு 


  ஓர் இலக்கை அடைய வேண்டுமானால் திட்டம் தீட்டுவது அவசியம். விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர் என்ன படிக்க வேண்டும், எப்படியெல்லாம் விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். லட்சியத்தை அடையும் வரையில் எத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டும். லட்சியத்தின் முதல் கட்டம், அதன் தொடர்ச்சி, இறுதிக் கட்டம் எது என்பதையெல்லாம் ஓரளவு முன்கூட்டியே திட்டமிட்டு அதை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.


  சதுரங்க ஆட்டத்தில் வல்லவனாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துச் சென்னையில் சோவியத் கலாசாரமையத்தில் சிறு வயதில் பயிற்சி பெற்று இந்திய அளவிலும் உலக அளவிலும் கேரி காஸ்பரோவ் போன்ற உலக சதுரங்க சாதனையாளர்களை முறியடிக்கும் அளவுக்கு படிப்படியாக வளர்ச்சி பெற்றுவிட்ட விசுவநாதன் ஆனந்த் தனது இலக்கை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அத்துடன் இலக்கை அடைய மிகத் தெளிவான பயிற்சியும் திட்டமிடலும் அவரிடம் காணப்படுகிறது.

 கடின உழைப்புக்கு ஈடில்லை


  இலக்கை நிர்ணயித்து கொண்டால் போதுமா? அதனை செயல்படுத்த கூடுதல் உழைப்பு தேவைபடுகிறது. “என் சகோதரர்களே தூங்குவதற்கு இது நேரம் இல்லை! நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்போம். எதிர்கால இந்தியா உருவாகி வளருவது நம் உழைப்பையே சார்ந்திருக்கிறது” எனும் விவேகானந்தர் கூறும் நம்பிக்கை, வீடும் நாடும் வளர உதவும் நல்சிந்தனையாகும். பல தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சி அடைய கடின உழைப்பு காரணமாக அமைகிறது.

  சாதாரண நிலையில் இருந்த ஒருவர் தனது உழைப்பின் மூலம் மிகவும் செல்வமும், செல்வாக்கும் பெற்ற வரலாறுகள் உண்டு.

  உதாரணமாக ஹோண்டா (மோட்டார் சைக்கிள்)வின் கடும் உழைப்பில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு உலக புகழ் பெற்றிருப்பதை எண்ணிப் பார்க்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் கார்களை உற்பத்தி செய்த ராய்ஸ் மிகக் கடுமையான உழைப்பாளி. கடும் உழைப்பு அவரை உயர்த்தியது. தமிழகத்தில் டி.வி.சுந்தரம் கடும் முயற்சியால் டி.வி.எஸ். ஒரு பெரும் நிறுவனமாக உருவெடுத்தது.

  தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரது கடும் உழைப்பு, அந்த இதழைத் தமிழகத்தில் அதிகம் விற்பனை ஆகும் இதழாக ஆக்கியுள்ளது. சாதாரண பாமரர்களும் பெரும்அளவில் படிக்கக் கூடிய அளவில் ஆதித்தனார் எளிமையான தமிழ்நடையைக் கொண்டு வந்தார்.


துணிந்து நில் 


  “அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே

   உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

   அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

என்று வீரமுழக்கமிட்டார் மகாகவி பாரதி.


  அச்சமும் தயக்கமும் முன்னேற்றத்தைத் தடுக்கும்.  துணிச்சலான முயற்சி மேற்கொள்ளும் போது அது முன்னேற்றத்தை உந்தித் தள்ளுகிறது.

  சிலர் வாழ்க்கையில் மேற்கொள்ளும் துணிச்சலான முயற்சி அவர்களை உலகப்புகழ் பெறச் செய்தது.  “எத்தனை பெரிய வானம், இத்தரை கொய்யா பிஞ்சு, அதில் நீ ஒரு கொய்யா பிஞ்சு” என்று பாரதிதாசன் பாடுவாரே ஞாபகம் வருகிறதா?  விழி கொள்ளா வானம்.  உலகம் தோன்றிய காலம் தொட்டு வானத்தை அண்ணாந்து பார்த்த மனிதன் விண்கலம் ஏறி பூமியை வலம் வந்தான் என்றால் அந்த முயற்சியில் அடங்கி இருப்பது அறிவாற்றல் மட்டுமல்ல துணிச்சலும் தான்.  விண்வெளி வீரர் யூரிககாரின் முதன் முதலாக 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி விண்ணில் வலம் வந்ததன் முலம் உலகப் புகழ் பெற்றார்.  கசக்கிஸ்தானை சேர்ந்த பைக்கானூர் விண்வெளித்தளத்திலிருந்து வோஸ்டாக்1 எனும் 4.7 டன் எடையுள்ள விண்கலம் புறப்பட்டு விண்வெளியை அடைந்து பூமியை சுற்றி வந்தது.  பின்னர் ககாரின் பத்திரமாக தரை இறங்கினார்.

  இச்சம்பவம் நடந்த ஐந்தாவது வாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அப்போல்லோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.  யூரி ககாரினுக்கு அடுத்தபடியாக பூமியை ராக்கெட்டில் வலம் வந்த முதலாவது அமெரிக்க வீரர் ஜான் கிளன்.

  “வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா” என்று பாடினார் கவியசர் கண்ணதாசன். அந்த முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டது.



  எட்வர்ட் ஹெச் வொய்ட் என்ற அமெரிக்க வீரர் ஜெமினி&4 (1963 ஜீன் 3) விண்கலத்தில் இருந்து வெளிவந்து விண்வெளியில் 31 நிமிடங்கள் மிதந்தார்.  அவருக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ் லியோனவ் என்பவர் விண்வெளியில் நடந்த முதலாவது மனிதர் என்ற பெருமையை அடைந்தார்.

 

  சந்திரனைத் தொட்ட தின்று மனித சக்தி 

  சரித்திரத்தை மீளியது மனித சக்தி 

  இந்திரன்தான் விண்ணாட்டின் அரசன் என்ற 

  இலக்கணத்தைத் திருத்தியது மனித சக்தி 


  என்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் எழுதினார்.  அவர் மறைந்து ஒன்பது  ஆண்டுகளுக்கு பிறகு அப்போலோ&8 என்ற விண்கலம் சந்திரனை 10 முறை வலம் வந்து பூமிக்குத் திரும்பியது.  கலோனல் பிராங்போர்மென், கேப்டன் ஜேம்ஸ், மேஜர் வில்லியம் ஆண்டர்ஸ் ஆகியோர் சந்திரனை வலம் வந்த முதலாவது மனிதர்கள்.

  அடுத்த ஆண்டு 1969 ஜீலை 16 அன்று அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார்.  ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறிய காலடிதான்.  ஆனால் மனிதகுலத்துக்கு மிகப் பெரிய பாய்ச்சல் வேக முன்னேற்றம்.  என்றவாறே காலடி எடுத்து வைத்தார் ஆம்ஸட்ராங்.  அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரின் நிலவில் அடிஎடுத்து வைத்தார்.

  ஒருவர் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல கடின உழைப்பை செலுத்துவதோடு சில துணிச்சலான முயற்களையும் மேற்கொள்ள வேண்டும். முன்னேற்ற பாதையில் சில முட்டுக் கட்டைகள்  தென்பட்டால் அச்சமின்றி அவற்றை அப்புறப்படுத்த தயாராக வேண்டும்.


ஆரோக்கியம் அவசியம் 

  முன்னேற்றம் காண விரும்பு ஒருவர் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.  நல் எண்ணங்கள் மலரும் சோலையாக மனத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.  எண்ணம் எப்படியோ அப்படியே மனிதன் எனறு காந்தியடிகள் கூறுவார்.  ஆரோக்கியமான உடலும் உள்ளமும் ஒருவர் முன்னேற்றபாதையில் உற்சாகமாக செல்ல அவசியமாகிறது.


  புறத்தூய்மை நீரான் அமையும் 

 அகத்தூய்மை   வாய்மையால் காணப் படும்.                

                                                                  (குறள் 298)


  உடலும் உடையும் நீரில் கழுவ தூய்மையடையும்.  ஆனால் உள்ளத்தில் தூய்மை என்பது வாய்மையால் (தீமையற்ற சொல்லைச் சொல்லுவதால்) உண்டாகும் என்கிறார்   வள்ளுவர்.நல்ல செயல்கள், நல்ல சிந்தனைகள் விளையும் மனமென்னும் நன்செய் வயல் சத்தும் சாரமும் இழந்து காணப்படக் கூடாதல்லவா?  அவ்வாறே வாழ்க்கையில் முன்னேறிச்  செல்லும் ஒருவர் தன் உடலில் அக்கறை காட்டாது இருந்து விடக்கூடாது.  ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான உள்ளம் அமைய வேண்டும்.


ஏன் இந்த விரயம்?


   முன்னேற்றம் காணும் முயற்சியில் வெற்றி பெறும்போது  பொருளும் வரலாம், புகழும் வரலாம்.  இந்த இரண்டையுமே இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.  பொருளை பாதுகாக்க சிக்கனமும் சேமிப்பும் தேவை.  தந்தை பெரியார் மிகவும் சிக்கனக்காரர் வாழ்நாளெல்லாம் தமக்கு கிடைத்த செல்வத்தை தனது சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்துக்குத் தந்தார்.  சீர்திருத்த பணி தடைபட கூடாது என்பதற்காக அவர் சேர்த்த பொருளையும் விரயமாக்கவில்லை.  பெற்ற புகழையும் பேணிப் பாதுகாக்க நல் வழிகளில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.


மனஉறுதி 

  மன உறுதி இல்லாதவர் எடுத்த காரியத்தை முடிக்காமல் திணறுவர்.  பாதி கிணறு தாண்டுவதால் பலனில்லை.  எண்ணித் துணிந்த செயலை விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்து திறம்பட முடிக்கும் மன உறுதி அவசியம்.

  வெள்ளையனை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையனுக்கு நிகராக கப்பல் விட்ட சிதம்பரனார் போன்றார் கொண்ட மன உறுதி வேண்டும்.

  சிறையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை செக்கிழுத்தார், சித்ரவதைகளை அனுபவித்தார், மன உறுதி குலைந்ததா-? இல்லையே?

  திருப்பூர் குமரன் தாயின் மணிக்கொடியை ஏந்திப் பிடித்து நடத்திய போராட்டத்தில் உயிர் போனாலும் போகட்டும் என்று கொடியை கீழே விடாமல் பற்றிக் கிடந்து உயிரைத் தியாகம் செய்தாரே! அவரது மன உறுதி உங்களுக்கும் வேண்டும்.

  சென்னை மாகாணம் எனற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று கோரி 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கொண்டிருந்த மன உறுதி சாதரணமானதா?


சோம்பலை விடு 

  முன்னேற்றம் என்னும் கனி பறிக்கத் தீர்மானித்து விட்டால் சோம்பலுக்கு இடம்

கொடுத்து விடக்கூடாது. அதுவே முன்னற்றத்க்கு முட்டுக்கட்டை போடும். காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளால் ஒரு நாளும் முன்னேற முடியாது.


   “தூங்காதே தம்பி தூங்காதே 

   சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

 

                                    என்றார் பட்டுக்கொட்டை கல்யாணசுந்தரம்

இலம் என் அசைஇ இருப்பாரைக் காணின் 

நிலம் என்னும் நல்லாள் நகும்

 

 எனும் குறள் மொழியை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 ஒன்றும்மில்லை என்று உள்ளம் ஒடுங்கி சோம்பி இருப்பவவை நிலமகளே கேலி செய்வாளாம்!


மலர்ந்த முகம் வேண்டும்

  எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்றம் காண விரும்பி செயல்படும் ஒருவர்

“அழுமூ-ஞ்சியாக” அல்லது எப்போது பார்த்தாலும் முகத்தில் கடுமை காட்டுபவராக இருந்தால் அந்தத் தோற்றமே அவரது முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்து விடும். சுமூகமாக பலரோடு பழக முடியாது. அவர்தம் முன்னேற்றத்துக்கு தேவைபடும் ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்ளமுடியாமல் போய்விடும்.


------*------

    4. குறிக்கோளும் தன்னம்பிக்கையும்


    “கண்போன போக்கிலே கால் போகலாமா?

     கால்போன போக்கிலே மனம் போகலாமா?

     மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?”


என்று திரைப்படப் பாடலாசிரியர் வாலி கேள்வி எழுப்பினார். எங்கே செல்கிறோம் என்பது தெரியாமலே போய் கொண்டிருக்கக் கூடாது அப்படிச் சென்றால் பயணம் முடியாது. நமது பயணம் எதுவாயினும் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும். அப்படிப்பட்ட பயணத்திற்கு இலக்கை நிர்ணயித்துக்கொள்வது மிக மிக முக்கியம்.  கடல் பயணத்தின்போது கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம், அருகில் துறைமுகம் இருப்பதை எடுத்துக் கூறும்.  துருவ நட்சத்திரம் எப்போதும் வடதிசையில் தென்படுவதால், அந்தக் கால மாலுமிகள் திசையறிந்து கொண்டார்கள்.  பின்னர் திசை காட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அது வழிகாட்டியது.  எந்த திசை நோக்கிச் சென்றால் இலக்கை அடையலாம் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

  இதைச் செய்ய வேண்டும், அதை செய்யவேண்டும் என்று பலரும் ஆசைப்படலாம்.  ஆசைகள் குறிக்கோள்களாக முடியாது.  நமது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் யாவும் இலக்குகளாக மாறாதவரையில் அவை வெறும் ஆர்வமாகவே இருந்துவிடும்.  இத்தகைய ஆர்வங்கள் பலவீனமானவை. அவற்றை பலமாக்கினால்தான் அவை நிறைவேறும்.  எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமானால் வழிமுறைகள் முக்கியமானவை; அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.  உறுதியும், ஒழுங்குமுறையும், காலவரையறையும் தேவை.  இவை இருந்தால் விருப்பத்தை குறிக்கோளாக மாற்றிக்கொள்ளலாம்.

  காலவரையறையும் செயல்திட்டமும் கொண்ட கனவுகளை குறிக்கோள்கள் என்று கூறலாம்.  குறிக்கோள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனாலும் குறிக்கோள் சாதாரணமான விருப்பம் அல்ல, அது தீவிரமான உணர்ச்சி.  அந்த தீவிர உணர்ச்சியே கனவுகளை நனவாக்குகிறது.

  கனவு நனவாக என்ன செய்யலாம்?

  திட்டவட்டமான, தெளிவான குறிக்கோள் இருக்கவேண்டும்.  நடைமுறைக்கு சாத்தியமான குறிக்கோளாய் இருக்க வேண்டும்.  குறிக்கோளை அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.  குறிப்பிட்ட காலவரையறைக்குள் திட்டத்தை நிறைவேற்ற முன்முயற்சி எடுக்க வேண்டும்.

  ஆனால் பெரும்பாலர் தங்கள் வாழ்க்கைக் குறிக்கோள்களை நிர்ணையித்தும் கொள்வதில்லை.  உதாரணத்துக்கு ஒரு சில காரணங்களைக் கூறலாம்.


1. அவநம்பிக்கைப் போக்கு :  இப்போக்கு கொண்டவர்கள் குறிக்கோள் ஈடேற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று பார்ப்பதற்குப் பதிலாய் படுகுழிகளையே எண்ணி பார்க்கிறார்கள்.


2. தோல்வி பயம் :  எடுத்த காரியத்தில் தோல்வி வந்துவிடுமோ என்ற பயம் சிலருக்கு இருக்கும்.  அதனால் அவர்கள் தங்கள் குறிக்கோளை நிர்ணயிக்காமல் செயல்படுவார்கள்.


3. உயரிய நோக்கம் :  ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பேராவல் இல்லாததாலும் நம்முடைய சமுதாயத்தில் நிலவும் மதிப்பீட்டு முறையின் விளைவாலும் நமது சிந்தனை நம்மை முன்னேறவிடாமல் தடுத்துவிடுகிறது.  ‘பெரிதினும் பெரிது கேள்’ என்றார் பாரதியார். இந்த உயரிய நோக்கம் பலருக்கு இல்லாமற் போவதால் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கு மிகமிக சாதாரணமாகவோ, இலக்கு தேவையில்லாமலோ போய்விடுகிறது.  வெந்ததை தின்று விதி வந்தால் சாகலாம் என்றிருப்பவர்களுக்கு உயரிய நோக்கம், குறிக்கோள் நிர்ணயம் தேவை இல்லாத விஷயமாகி விடுகிறது.


4. நிராகரிப்பு பயம் :  திட்டமிட்டபடி ஒரு செயலை செய்து முடிக்கவில்லையானால் மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ எனற பயம் கொண்டிருப்பவர்களும் குறிக்கோளை நிர்ணயம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள்.


5. காலங்கடத்துதல் :  சிலர் எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்யாமல் தள்ளிப்போடுவார்கள்.  குறிக்கோள் நிர்ணயம் செய்வதைக் கூட இன்னொரு நாள் குறிக்கோள் நிர்ணயித்துக் கொள்ளலாம் எனறு காலம் தாழ்த்துவார்கள்.  உயரிய நோக்கம் எதுவும் இவர்களிடம் இருப்பதில்லை உயரிய நோக்கமின்மையும் காலந்தாழ்த்துதலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.


6. தாழ்வான சுயமதிப்பு :  ஒருவர் மனதுக்கு உத்வேகம் ஊட்டக் கூடிய சக்தி இல்லாமலும், உள்ளுணர்வு இல்லாமலும் இருப்பவர்களும் குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளமாட்டார்கள்.


7. குறிக்கோளின் முக்கியத்துவம் உணராமை :  குறிக்கோள் நமக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என்பதை உணராதவர்கள் குறிக்கோளை நிர்ணயிப்பதில்லை.  பிறர் அவர்களுக்கு சொல்லித்தருவதுமில்லை.  இவர்களும் தாங்களாக குறிக்கோளின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்வதும் இல்லை. எனவே இவர்களாலும் குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ள முடிவதில்லை.


8. குறிக்கோள் நிர்ணயிக்கும் அறிவாற்றல் இன்மை :  குறிக்கோளை எவ்வாறு முடிவு செய்வது என்ற விவரம் அவர்களுக்கு தெரியாது.  அவர்களுக்கு படிப்படியாக குறிக்கோளை நிர்ணயிக்கும் நுட்பத்தைக் சொல்லித் தர வேண்டியது அவசியம்.  சொல்லித் தந்தால் குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வார்கள்.

  இவ்வாறாக பல காணங்களினால் பலரும் தங்கள் குறிக்கோளை முடிவு செய்யாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  ரயில் டிக்கெட் பதிவு செய்கிறீர்கள், டிக்கெட் வாங்கிப் பார்த்தால்,  ரயில் புறப்படும் இடம், சென்றடையும் இடம், புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், எந்த வகுப்புக்குரிய டிக்கெட், போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கும்.  நமது குறிக்கோளிலும் தெளிவு இருக்க வேண்டும்.  யாரையாவது அழைத்து உங்கள் குறிக்கோள் என்னவென்று கேட்டுப் பாருங்கள்.  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பார்கள்.  நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பார்கள்.  மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பார்கள்.  அவை யாவும் விருப்பங்களே, குறிக்கோள்கள் அல்ல.


தெளிவான குறிக்கோள்

  மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் அவசியம் என்று உணர்ந்து கொண்டால் அந்தக் குறிக்கோள் எது என்று தெளிவு பிறந்து விடும்.

  விளையாட்டுத் துறையில் வீரராக வேண்டும் என்பது அவள் அல்லது அவனது குறிக்கோள் என்று வைத்துக் கொள்வோம். இது தெளிவற்ற குறிக்கோள் ஆகும்.

  அவனோ அவளோ எந்த விளையாட்டில் வெற்றியாளராய்த்  திகழ வேண்டும் என்று ஒரு குறிக்கோள் நிர்ணயித்து கொண்டால் அது தெளிவான குறிக்கோள் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒரு கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, டென்னிஸ் வீரராக,  ஹாக்கி வீரராக, பளு தூக்கும் வீரராக அல்லது துப்பாக்கி சுடும் போட்டியில், நீச்சலில் வெற்றி வீரனாக வரவேண்டும் என நிர்ணயித்து கொள்வது தெளிவான குறிக்கோளாகும்.

  தெளிவான குறிக்கோள் நிர்ணயித்தால் தான் அதை அடைவதற்கான திட்டம் பற்றி யோசிக்க முடியும். தெளிவு இல்லாவிட்டால், தரை இறங்கும் இடம் தெரியாமல்  பனிமூட்டத்துக்குள் சிக்கித் தடுமாறும் விமானம் போல நமது நிலை ஆகிவிடும்.  பொது வாழ்க்கையில் ஈடுபட்டுச் சமுதாய மக்களுக்கு பாடுபடவேண்டும் என்பது பொதுவான குறிக்கோளாய் இருக்கும். அதே சமயம் எந்தத் துறையில் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோள் நிர்ணயித்து தெளிவு பெற வேண்டும். அரசியல் வாழ்க்கையா?  அல்லது அரசியல் சாராத பொது நலச் சேவையா?  என்ற தெளிவு இருக்கவேண்டும்.  அரசியல்துறை என்றால் எந்தக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் எத்தகைய இலட்சியம் ஈடேற உதவலாம் என்று தெளிவு பிறக்கும். வேறு பொது நலச் சேவை என்றால் எத்தகைய பொது நலச் சேவை என்ற தெளிவு வேண்டும்.


  இயற்கை விவசாயம்

  பேரிடர் வேளாண்மை

  பெண்களின் முன்னேற்றம்

  முதியோர் நல வாழ்வு

  குழந்தை வளர்ப்பு

  வளரிளம் பருவம்

என எண்ணற்ற துறைகளில் ஒன்றை குறிக்கோளாய் தேர்ந்தெடுத்து பணியாற்றலாம் உங்கள் இயல்புக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துத் கொள்ளலாம்.


திட்ட வட்டமான குறிக்கோள்

  குறிக்கோள் இதுதான் எனத் தெளிவாக நிர்ணயித்த பின்னர் ஊசலாட்டம் கூடாது.  அதாவது நீச்சல் வீரராக வேண்டும் எனற குறிக்கோளை நிர்ணயித்தவருக்கு ஓட்டப்பந்தயக் கனவு அடிக்கடி வந்தால் அவரது குறிக்கோள் தடுமாற்றத்தில் சிக்கும். குறிக்கோளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க கூடாது.  அப்படி மாற்றிக் கொண்டே இருந்தால் அது திட்டவட்டமான குறிக்கோளாய் இருக்க முடியாது.  பளுதூக்கும் வீரராக வேண்டும் என்ற கனவைச் சுமந்தவர் செஸ் விளையாட்டில் சாம்பியன் ஆக வேண்டும் என திடுப்பென்று குறிக்கோளை மாற்றிவிடக்கூடாது.

  மனிதமனம் அலைபாயக் கூடியது. கிளைக்கு கிளை தாவும் குரங்கின் மனோபாவம் திட்டவட்டமான குறிக்கோளுக்குத் தடையாகிவிடும்.  குறிக்கோள் எதுவென்று தெளிவு ஏற்படுவதற்கு முன்னர் மனம் அலைபாயலாம். அலசி ஆராய்ந்து இது தான் குறிக்கோள் என நிச்சயித்த பின்னர் இதிலிருந்து மாறி வேறு ஒரு குறிக்கோளை நிச்சயித்து கொள்ள மனதை அலை பாய விடக்கூடாது.  அப்படி மனம் அலை பாய்கிறது என்றால் குறிக்கோள் இன்னும் திட்டவட்டமானதாகவில்லை என்று புரிந்து கொள்ளலாம். கிரிக்கெட்தான் என்று தெளிவான குறிக்கோள் நிச்சயித்துவிட்டால், இந்தக் குறிக்கோளை திடப்படுத்தி கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் தனது திறமை குறித்து மதிப்பிட்டு தனக்கு வேறு ஒரு விளையாட்டில் அதிக திறன் இருப்பதாக மிகையான மதிப்பீடு கெண்டாலும் கிரிக்கெட் இலட்சியம் தோல்வியில் முடியும்.

  குறிக்கோளைத்தெளிவாக்கும் போதே அந்தக் குறிக்கோளை திட்டவட்டமானதாக திடமானதாக உறுதிப் படுத்த வேண்டும்.  இது குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனத்தில் கொள்ளத்தக்க இரண்டாவது அம்சம்.


நடைமுறைக்கு சாத்தியமா :

  குறிக்கோளை தெளிவு படுத்தியவர் அதனை திட்டவட்டமாக முடிவு செய்தவர் தான் நிர்ணயித்த குறிக்கோள் நடைமுறையில் நிறைவேற சாத்தியமிருக்கிறதா? என்று ஆராய வேண்டும்.  நடைமுறை சாத்தியம் இல்லாத குறிக்கோளை அடைய முடியாது.  ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல’ என்ற ஒரு பழமொழி உண்டு. ஊனமுற்றோர் பலர் வாழ்வில் சாதனையாளர்களாக திகழ்கிறார்கள் என்பது வேறு விஷயம். இரண்டு கால்கள் இருந்தும் சிலரால் தடுமாறாமல் நடந்து செல்ல முடியவில்லை. ஆனால் இரண்டு கால்கள் இல்லாதவர் கைகளால் நடந்து செல்கிறார்-. விழியிருந்தும் கல்தட்டி தடுக்கி விழுபவருண்டு; பார்வையற்றோர் நிதானமாக நடப்பதும் உண்டு. கால் விரல்களால் தூரிகை எடுத்து அல்லது பற்களில் தூரிகைப் பிடித்து சித்திரம் வரையும் ஊனமுற்றோர் உண்டு.  எனினும் இங்கே நாம் குறிப்பிடவேண்டியது, உடல்தகுதி அல்லது அறிவாற்றல் திறன் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாமல் தன்னால் செய்ய முடியாத செயலைச்செய்ய வேண்டும் என்று கருதிக் குறிக்கோள் நிர்ணயிக்கும் போது அதை நிறைவேற்றுவதில் உடல் ரீதியான, அறிவுத்திறன் ரீதியான தடைகள் பல ஏற்ப்படுவதைத் தடுக்க முடியாது.

  உடல் பலவீன நோஞ்சான் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் எனற கனவு சாத்தியமா என்பது பற்றிய தெளிவு அவருக்கு இல்லாவிட்டால் அந்த விருப்பம் கனவாகவே இருந்து விடும்.

  எனவே ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கும் போதே அதனை அடைவதற்கு நடைமுறையில் என்னென்ன சாத்தியம்  இருக்கின்றன என்றும் எவை தடையாக இருக்கின்றன தடைகளைத் தாண்டி குறிக்கோளை அடைய வாய்ப்பு இருக்கிறதா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

  நடக்கவே சோம்பல் படும் ஒருவனுக்கு ஓட்டப் பந்தயக் கனவு நிறைவேறாது, அதே சமயம் நடைமுறையில் வரும் தடைகளைத் தாண்டிய ஒருவர், தான் நிர்ணயித்த குறிக்கோளை அடைந்ததும் உண்டு. அந்த வெற்றிக்கு வேறு பல காரணிங்களும் உண்டு. உதவி செய்தால் அது சாத்தியமாகிறது, எல்லாவற்றிலும் விதி விலக்கு இருப்பது போல சாத்தியமற்ற கனவை ஒரு குறிக்கோளை சாத்தியமாக்கியவர்களும் இருப்பார்கள். அவர்கள் விதிவிலக்குகளே. எல்லோரும் அதே முறையில் குறிக்கோளை அடைய முடியாது. எனவே திட்டவட்டமான, தெளிவான குறிக்கோளை உடைய ஒருவர் தனது குறிக்கோள் ஈடேற நடைமுறை வாய்ப்புகளையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் ஆகவே தெளிவான திட்டவட்டமான நடைமுறை சாத்தியமான குறிக்கோனை நிர்ணயித்த பின்னர்தான் அதனை அடைவற்கான வழிமுறைகளைத் தீட்டவேண்டும். குறிக்கோள் ஈடேற என்ன செய்ய வேண்டும்? குறிக்கோள் ஈடேற தூண்டுகோல் தேவை? குறிக்கோள் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்க வேண்டும்; செயல் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்; துணிச்சலாக செயல் பட வேண்டும் இடையறாது முயற்சி செய்ய வேண்டும்; மற்றவர்களின் ஆதரவு இருக்கவேண்டும்; நடைமுறையில் ஏற்படும் தோல்விகளிலிருந்து படிப்பினைப் பெற்று முன்னேற வேண்டும்; சோர்வுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது; தளராத ஊக்கம் வேண்டும்; தெளிந்தும் தெரிந்தும் காலமறிந்தும் செயல்பட வேண்டும்; குறிக்கோளை அடைய இனிய சுபாவம் கொண்டவராகவும் உடல் ஆரோக்கியம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்; அத்துடன் இந்தக் குறிக்கோளை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருக்கவேண்டும்; இன்னும் சற்று விரிவாக காணலாம்& குறிக்கோள் ஒர் ஆரம்பப்பள்ளி அந்த புள்ளியை வைத்துதான் ஒரு வட்டத்தை வரைய வேண்டும். 


தூண்டுகோலும் ஊக்கமும் 

  குறிக்கோள் மனதில் பதிந்திருந்தாலும் அதை நிறைவேற்றும் ஆர்வம் கூடலாம். ஆர்வம் குன்றும் போது ஊக்கப்படுத்தி செயலில் ஈடுபட வைக்கும் ஊக்குநர்கள் தேவை. ஊக்கம் மிக முக்கியமான பண்பு.


  “பரியது கூர்ங்கோட்ட தாயினும் & யானை

  வெரூஉம் புலிதாக் குறின்

                                                            (குறள் 599)

  ‘பெரிய உருவம் படைத்த யானை கூட புலி தாக்கினால் அஞ்சி நடுங்கும். காரணம் புலியிடம் ஊக்கம் அதிகம்’ என்பது குறளின் கருத்து. குறிக்கோளை முடிவு செய்தால் மட்டும் போதாது. ஊக்கம் இருந்தால்தான் எந்தச் செயலையும் நிறைவேற்ற முடியும்.

குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கான திட்டத்தை திரும்ப திரும்ப நினைத்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அந்தக் குறிக்கோளை நோக்கி

அந்த சிந்தனை உந்தித் தள்ளும். நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளை நிறைவேற்ற மனவலிமை தரும் திட்டம் கை கூடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால் செயல்படும் வேகமும் அதிகரிக்கும்.


  செயல்படத் தொடங்கி விட்டால் முன் முயற்சி எடுக்கும் திறன் வளரும். கற்பனை வளம் அதிகரிக்கும். உற்சாகம் பெருகும். சுயஒழுங்கு வளரும். முயற்சியில் கவனம் குவியும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தைச் சரியாகத் திட்டமிட வைக்கும்.

  நோக்கமும் செயலும் ஆக்கபூர்வமான திசையில் செல்லும்போது தன்னம்பிக்கையும் வளரும்.

  குறிக்கோளை நிறைவேற்றத் திட்டமிட்டு விட்டால் குறிக்கோளை நிறைவேற்றுவது தொடர்பான பதற்றம் தணிந்துவிடும். முன்னேறிச் செல்லும் வழி குறித்த தெளிவு இருக்கும்.

 படிப்படியாக அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த முடியும். கவனம் செலுத்தும் போது குறைகள் தென்படும். குறைகளை சரிசெய்து கொண்டே செல்லலாம். செயலுக்கு வராத திட்டம் வீணாகி பயனற்று போய் விடும். திட்டத்தை நன்கு செயலுக்கு கொண்டு வரும் போதுதான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.

  ஒரு மாணவன் அல்லது மாணவி எந்த துறையில் முன்னேற வேண்டும் என்று குறிக்கோளை நிர்ணயித்து கொண்டாரோ அதுத் தொடர்பான அறிவாற்றலையும் பிற விஷயங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறிக்கோளை அடைந்த பின்னரே அடுத்தக் கட்ட குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டும்.


பன்முகத்திறமை 

  பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. படித்து முடிப்பது பணியில் சேருவது உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவது எனக் குறிக்கோளை எட்டும் ஒருவர். தனது அறிவாற்றல் திறனுக்கேற்ப பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம். அப்படி திறமைகளை வளர்க்கவும் இலக்கு நிர்ணயித்து திட்டமிட்டு செயல்படவேண்டும்.


மனோபாவம் 

  எண்ணம் எப்படியோ அப்படியே மனிதன் ஆவான் என்றார் காந்தியடிகள். எண்ணம் முக்கியமானது. மனிதன் நல்ல எண்ணங்கள் மலரும் சோலையாகத் திகழவேண்டும். நல்லமனநிலை குறிக்கோளை நோக்கி முன்னேற உதவும்.

  ஒருவரது குறிக்கோள் செல்வந்தராவது என்றால் அதற்காகத் திட்டமிட்டு செயல்பட்டால் அந்த குறிக்கோள் ஈடேறும். குறுக்கு வழியில் குபேரனாக செயல்படும்போது அது குறிக்கோளைக் குழியில் தள்ளிவிடும்.

  குறிக்கோளை நிறைவேற்றும் திட்டம், செயல்பாடு, ஏற்ற மனநிலை இருந்தால் மட்டும் போதாது உடலும் நலமாக இருக்க வேண்டும். இக்கருத்து தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு மட்டும் பயன்படக் கூடிய கருத்து என்று நினைத்து விடக் கூடாது. இது மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பயன்படும்.

  ஒரு தொழிலில் ஈடுபடும் முன்னர் தகுதியான நண்பர்களுடன் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். முதலுக்கே மோசம் வரும் நிலையில் லாபத்தை மட்டும் எதிர்பார்த்திருக்க கூடாது. தெளிவில்லாவிட்டால் அதனை தொடங்கக் கூடாது. ஒரு செயலை எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

  செய்யத் தகாத செயலைச் செய்தாலும் கேடு, செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு. நன்றாக யோசித்து பார்த்த பின்னரே ஒரு செயலைத் தொடங்க வேண்டும். செயலைத் தொடங்கி விட்டு யோசிக்கலாம் என நினைக்க கூடாது. “சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்” என்று சொல்வார்கள். உள்ளத்தில் ஏற்படும் சிந்தனைகளுக்கு பிறப்பிடம் இந்த உடல். அது பாதியில் பழுதுபட்டு நின்றுவிட்டால் குறிக்கோளை அடைவது எப்படி?


துணிச்சல் அவசியம்

  ஒரு குறிக்கோளை அடையத் துணிச்சலும் தேவை. அஞ்சி அஞ்சி சாகும் கோழையால்

எந்த ஒரு குறிக்கோளையும் அடைய முடியாது. துணிவில்லாதவருக்கு அறிவும் துணைக்கு வராது.


குறிக்கோளும் வள்ளுவர் சிந்தனைகளும்

  ஆராய்ந்து செயல்படும்போது நம்மால் குறிக்கோளை அடைய முடியும். ஒரு செயலை செய்வதற்கு முன் அதனால் கிட்டும் வருவாய் லாபம் ஆகியவற்றெல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். உலகம் இகழாத நற்செயல்களையே மேற்கொள்ளவேண்டும் என்றெல்லாம் குறள் மூலம் அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.


 பலமும் பலவீனமும் அறிதல்

  செயல்படும் போது ஒருவர் தன் வலிமையையும் அறிந்து செயல்பட வேண்டும். தனது நிலை பலவீனமாக இருக்கும் போது அவனது செயல் வெற்றிக்கு வழி வகுக்காது.

  குறிக்கோளை நிர்ணயிப்பவர் நம்மால் நிறைவேற்ற முடிந்த குறிக்கோளை மனதிற் கொண்டு செயல்பட வேண்டும். எது முடியுமோ அதைச் செய்வததுதான் எண்ணம் ஈடேற உதவும். ஆழம் தெரியாது ஆற்றில் இறங்குவது போல தன் வலியறியாமல் செயலில் ஈடுபடுவதும் தன்னைப் பற்றி மிகையாக நினைத்துச் செயல்படுவதும் அழிவுக்கே வழிவகுக்கும் என்று திட்டவட்டமாக கூறுகிறார் திருவள்ளுவர்.


காலம் உயிர் போன்றது

  உயிரனையது காலம், போனால் போனதுதான் திரும்ப வராது. எனவே காலத்தை அறிந்து செயல்படும்போது குறிக்கோள் ஈடேறும். எடுத்த செயல் வெற்றி பெறும். அப்படி காலம் கருதிச் செய்தால் ஞாலத்தையும் வெற்றி கொள்ளலாம் என்ற வள்ளுவச் சிந்தனையில் தன்னம்பிக்கை உள்ளது.

  வள்ளுவச் சிந்தனைகள் செயல் வீரனுக்கு அறுசுவை விருந்து என்றால் அது மிகையாகாது.


சிந்தனை நயம் 

  நமது சிந்தனைகள் உயர்வாக இருக்க வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது வள்ளவர் காட்டும் வழி.

  நமது சிந்தனை ஆக்கப்பூர்வமானதாய் இருக்க வேண்டும். அதை நேர்மறைச் சிந்தனை என்கிறோம். மற்றொன்று எதிர்மறை சிந்தனை ஆகும். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை உடையவர்கள் நேர்மறைச் சிந்தனையாளர்கள்.

  “இது நடக்காது”, “விடியாது”, “என்னால் முடியாது” என நினைப்பவர்கள் எதிர்மறையாக சிந்திப்பவர்கள் ஆகும். ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட விஞ்ஞானிகள் சமூகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள். தங்கள் சமுதாயத்துககு மிகப் பெரும் தொண்டாற்றியுள்ளனர். காந்தியடிகள், நேரு போன்றோர் இந்திய விடுதலை போராட்டத்தின் வெற்றி நாயகர்கள்.

  எகிப்து நாட்டின் மாபெரும் தேசியத் தலைவராக் திகழ்ந்தவர் நாசர்.  மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, சூ. என்லாய், ஹோசிமின், விடல் காஸ்ட்ரோ, சே. குவேரோ எனப் பலரும் வரலாற்றில் அழியாத தடம் பதித்த சிந்தனையாளர்கள். தந்தை பெரியாரும் சிங்கார வேலரும் நமது சமுதாயத்தின் அசல் சிதனைகளுக்கு சொந்தக்காரர்கள். இன்னும் 500 ஆண்டுகளுக்கு பிறகும் நமது நாட்டின் அசல் சிந்தனையாளர்களின் வரிசையில் இவர்கள் இருவரது பெயரும் இடம் பெறும் என வெளி நாட்டு அறிஞர்கள் புகழ்ந்துரைத்துள்ளனர்.

  பெரும்பான்மை மக்களுக்கு எதிரான சிந்தனையோட்டம் கொண்டவர்களையும் வரலாற்றில் காணமுடிகிறது. பல சர்வாதிகாரிகளை நாம் உதாரணமாக நினைத்துக் கொள்ளலாம்.

                             *   *   *   *   *



   5.தன்னம்பிக்கையாளர்களின்

  வெற்றியும் சாதனைகளும்


  வாழ்க்கையில் வெற்றி பெற எண்ணும் எவரும் மிருந்த தன்னம்பிக்கையுடன் தங்கள் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்ற வாழ்க்கைச் சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ளும் போது அவை நமக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தோற்றுவிக்கும்.

  வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவர்களிடம் காணப்பட்ட விடாமுயற்சிதான்! ஏனெனில் வெற்றியைத் தேடிச் செல்லும்போது இடையூறுகள் ஏற்படுவது இயல்பு. அவற்றை முறியடிக்க திரும்ப திரும்ப முயற்சி மேற்கொண்டாக வேண்டும்.

  யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல, வள்ளுவனைப் போல இளங்கோவைப் போல் பூமிதனில் கண்டதில்லை என்று பாரதியார் வியந்து பாராட்டுவார். அந்த மாபெரும் புலவர்களின் முயற்சியில கம்ப ராமாயணமும், திருக்குறளும் சிலப்பதிகாரமும் நமக்கு கிடைத்தன.

  புலவர்களின் முயற்சியில் நமக்கு நல்ல இலக்கியங்கள் கிடைத்தன. விஞ்ஞானிகளின் முயற்சியில் அரிய கண்டுபிடிப்புகள் நமக்குக் கிடைத்தன.


 சன்லைட் உரிமையாளர்:


  சன் லைட் சோப் உலகப் புகழ் பெற்றது. இதனைத் தயாரித்துப் புகழும் செல்வமும் சேர்த்துக் கொண்ட வில்லியம் லீவர் என்பவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடுமையாக பாடுபட்டு மாபெரும் வெற்றியாளரானார்.


கோடீஸ்வரர் வீட்டு வேலைக்காரர்


  ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்னி மேரி என்பவர் திருமதி. ஜாக்குலின் கென்னடியிடம் வேலைப் பார்த்தார். தன் எஜமானி அம்மாவின் உணவுப் பழக்க வழக்கங்களை பத்திரிகையாளர்களிடம் ஆன்னி கூறிவிட்டதால், கோபம் கொண்ட ஜாக்குலின் அவரை வேலையை விட்டே நிறுத்தி விட்டாராம். ஆன்னிக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வற்றிப் போய்விட்டது. வாழ்க்கையே இருண்டு விட்டதாக எண்ணினார். மாடியிலிருந்து குதித்து செத்து விடவும் எண்ணம் கொண்டார். ஆனால், வேலையை விட்டு வெளியேறியதும் நிலைமை தலைகீழாயிற்று. தொலைக்காட்சி, வானொலி போன்றவை 80 ஆயிரம் டாலருக்கு ஆன்னியை ஒப்பந்தம் செய்து கொண்டன.

  பெரும் கோடீஸ்வர எஜமானர்கள் அவரைத் தங்கள் வீட்டு வேலைக்காரியாக்கப் போட்டி போட்டனர். சில வாரங்களிலே அவர் கோடீஸ்வரியாகிவிட்டார்.


ரோல்ராய்ஸ்

  அந்தக் காலத்தில் புகழ் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். அதன் உரிமையாளர் ராய்ஸ் எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் எந்த அளவுக்கு காரியத்தில் கண்ணும் கருத்துமாய் விடா முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெற்றோர் என்பது சுவையான விஷயமாகும்.    ரோல்ஸ் ராய்ஸ் கார்களை உருவாக்கிய ராய்ஸ்க்கு அப்போது வயது என்ன தெரியுமா?

நாற்பத்தி ஒன்று! சின்னஞ்சிறு வயதிலிருந்தே எதையும் ஒழுங்குடன், திருத்தமாகச் செய்து

முடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார், தோல்வி வந்து விட்டால் மனம் கலங்காமல் கடும் உழைப்பைத்தந்து அதை வெற்றியாக்குவார், எந்திரப் பொறிகளுடன் தன் வாழ்க்கையை பிரிக்க முடியாதாபடி இணைத்துக் கொண்டார் ராய்ஸ்,

 அவருக்கு சொந்தமாக ராய்ஸ் கம்பெனி இருந்தது. அதில் கிரேன்கள் தயாரிக்கப்பட்டன,

அவற்றின் விலை அதிகமாய் இருந்தன. அவை விற்பனை ஆகவில்லை. நிறுவனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து வேறு துறையில்  என்ன செய்யலாம் என்றுயோசித்தார்.  41 வது வயதில் முதலாது சிற்றுந்து (சிறியகார்) தயாரித்து ஓட்டிக் காட்டினார்.

  ராய்ஸ்க்கு உதவியாக கார்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டியவர் பணக்காரர் சார்லஸ் ரோல்ஸ், இந்த இருவர் பெயரையும் இணைத்து ‘’ ரோல்ஸ் ராய்ஸ்’’ என்று காருக்கு பெயரிடப்பட்டது.  பலூன் மூலம் ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக கடந்த வந்த பெருமைக்குரியவராய் இருந்தவர் ரோல்ஸ்.  ஏற்கனவே பல வகையான கார்களை வாங்கி விற்று  வந்தார்.  அவர் ராய்ஸ் தயாரித்த காரின் சிறப்பை உணர்ந்து நீங்கள் தயாரித்த கார்களை நான் விற்கிறேன் என்றார் “ரோல்ஸ் ராய்ஸ்’’ என பெயரிடக் கேட்டுக் கொண்டார். 

  1907 ஆம் ஆண்டு ரோல்ஸ் அக்காரை 48 நாட்கள் இரவு பகலும் இலண்டனுக்கும், கிளாஸ் கோவுக்கும் இடையில் உள்ள குண்டும் குழியுமான பாதைகளில் ஓட்டிக் காட்டினார்.  அதன் பிறகு அந்தக் காரின் மீது எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது, உலகப் பெரும் பணக்காரர்கள் இல்லத்தில் கௌரவச் சின்னமாய் இடம் பெறலாயிற்று.  1910 ஆம் ஆண்டு வானூர்தியில் பறக்கும் போட்டியில் எற்பட்ட விபத்தில் சார்லஸ் ரோல்ஸ் இறந்தார்.

  1912 ஆம் ஆண்டு ராய்ஸ்க்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்ட பிறகு அவர் படுக்கையை விட்டு எழ முடியாத நிலைமை ஏற்பட்டது படுத்துக் கொண்டே ஜெயித்தவர்  ராய்ஸ். உடல் அசைய முடியாவிட்டால் என்ன? உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊற்று வற்றாது  பொங்கி வழியும் போது செயல்பாடு தடைபடுவதில்லை. காரின் நுட்பங்களை மாறுதல் செய்கிற பணிகளையும் இடையறாது செய்தார். அக்காலத்தில் ஹென்றிபோர்டு ஒரு நாளைக்கு 1500 கார்களை உற்பத்தி செய்தார். 

ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அதிக விலையுள்ளவையாய் இருந்தன. ஆண்டுக்கு

  1000&2000 கார்களே விற்பனை செய்யப்பட்டன.  மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கக்கூடிய கார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தன ரோல் ராய்ஸ்கார்கள்


  “மிகச் சிறிய செயலாயினும் நன்கு செயல்பட்டால் அதுவே சிறந்து விளங்கும்!” எனத் தனது வீட்டின் வாயிலில் எழுதி வைத்தார் ராய்ஸ். ராய்ஸிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை விடாமுயற்சி, செயல் முனைப்பு, உடற்குறையை கருதாது உற்சாகத்துடன் செயலில் ஈடுபட்ட குணம் சுறுசுறுப்பு, கடும் உழைப்பு, செய்வதை திருத்தமாக செய்ய வேண்டும் என்ற நல்நோக்கம் ஆகியன யாவும் அவரது வெற்றிக்கு கரம் கொடுத்தன.


மார்கோனி 

 

  இத்தாலியில் பிறந்த மார்கோனி. தமது 12 வயதிலிருந்தே விஞ்ஞானத்தை நேசித்தார். தமது 20 வயதில் கம்பியில்லாதந்தி முறையைக் கண்டுபிடித்தார். அந்த வெற்றியை இத்தாலி ராணியிடம் தெரிவித்த போது அலட்சியமாக இருந்துவிட்டார்.


 மனம் தளராமல் பின்னர் அமெரிக்க நாட்டின் நியூ பண்ட்லாந்து தீலில் ஒரு மலை மீ அத்தகைய நிலையத்தை அமைத்தார். பல இடையூறுகள் வந்தன, சமாளித்தார். இறுதியில் 1901 ஆம் ஆண்டு 12ம் நாள் இங்கிலாந்திலிருந்து அனுப்பபடும் செய்திகளை கேட்க காத்திருந்தார். குரல் கேட்டது.


  வெற்றிக் களிப்பில் மிதந்தார் மார்க்கோனி. அதிர்ச்சி அடைந்த ஆங்கிலேய அமெரிக்கத் தந்திக்கம்பி குழுவினர் தந்தியில்லா கம்பி முறையை பயன்படுத்த தடைவிதித்தனர். சோர்ந்து விடாத மார்கோனி 2 நாட்களுக்கு பிறகு பத்திரிகைகளில் தமது கண்டுபிடிப்பைப் பற்றிய செய்தி வெளியிட்டார்.

  கனடா நாட்டின் நிதி அமைச்சர் பெரும் பண உதவி தந்து, கனடாவில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள அழைத்தார். இங்கிலாந்துக்கு திரும்பும் முன்னர் நியூயார்க் நகரில் மாபெரும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனை சந்தித்தார். மார்கோனியை தமது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தாராம். சாப்பிட வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் இருவரும் தமது கண்டுபிடிப்புகள் பற்றி பேசிக் கொண்டு இருந்து விட்டார்களாம்.

  கனடாவிலிருந்து ஆராய்சியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெற்றியாளராக அவர் ஐரோப்பாவுக்கு திரும்பிய போது வயது 28. பின்னர், 1904 ல் இங்கிலாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு கனடாவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மறுபடியும் இங்கிலாந்துக்கு வரவழைக்கபட்ட பிறகு பல இடையூறுகளை எதிர்கொண்டு பொருள் இழப்புக்கு ஆளானர். அமெரிக்க, ஜெர்மனி நாட்டின் தொழில்நுட்ப குழுவினர் வடிவமைப்பு உரிமை தொடர்பாக இவருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். மூத்த மகன் இறந்து போனான். வங்கிகள் உதவி செய்ய மறுத்தன. கனடாவில் இருந்த அவரது கம்பியில்லாத தந்தி நிலையம் தீக்கிரையானது. அடுக்கடுக்கான துன்பங்களை எதிர் கொண்டார். தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாக்க உறுதி பூண்டார். கடுமையாக உழைத்தார்.1909 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.


டைட்டானிக் கப்பல் 

  1912 ஆம் ஆண்டு நினைவிருக்கிறதா?

  புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் உடைந்து கடலில் மூழ்கிக் கொண்டிருந்தபோது மார்க்கோனி அமைத்து தந்திருந்த கம்பியில்லா தந்தி தொடர்பு மூலமாகவே உதவி கோரும் தகவல் கொடுக்கப்பட்டுப் பலரும் காப்பாற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மார்கோனியின் புகழ் உலகெங்கும் பரவியது.

  1927 ஆம் ஆண்டு முதன் முதலாக இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மனிதக் குரல் ஒலிபரப்பப்பட்டது. இதன் காரணமாகவும் அவர் புகழ் வளர்ந்தது. வானொலியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்க்கோனி 1937ல் மரணமடைந்தார்.

  தோல்விகள் வந்தபோது துவளாமல் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் அவர் செயல்பட்டதும் தன்னம்பிக்கை கொண்ட எவரிடமும் காணப்படும் விடாமுயற்சி கடின உழைப்பு அவரிடம் இருந்தும் அவரை மாபெரும் கண்டுபிடிப்பாளாராக வெற்றியாளராக ஆக்கியது.

  வெற்றியாளர்கள் எல்லோரிடம் தளரா ஊக்கம், மனம் உறுதி, காலம் தவறாமை, தெளிந்து செயல்படுவது, ஆராய்ந்து செயல்படுவது, சோர்வின்றி விடாமுயற்சியுடன் செயல்படுவது போன்ற பண்புகள் காணப்படும். குறிக்கோளை முடிவு செய்த பிறகு அதனை அடையும் வரை “கருமமே கண்” என்று ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுவார்கள். தோல்வி வந்தாலும் அதற்குக் காரணங்களை ஆராய்ந்து, களைந்து அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு மெல்ல மெல்ல வெற்றி நோக்கியே சென்று கொண்டிருப்பார்கள். வெற்றியை நோக்கி செயல்படும் இவர்களை உந்தித் தள்ளுவது இவர்களிடம் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கையே. இந்த தன்னம்பிக்கையை வெற்றியாளர்களிடமிருந்து பிரித்து விடமுடியாது. நீங்கள் வெற்றியாளராய் திகழ தன்னம்பிக்கை மிக்கவராய் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.


                நீங்களும் சாதனை புரியலாம் 

  வெந்ததை தின்று விதி வந்தால் சாவதல்ல வாழ்க்கை. அது லட்சியங்களால் நிரம்பி இருக்க வேண்டும். அந்த லட்சியங்களை தேடி அலையும் பயணங்களில் அடுத்தடுத்து வெற்றிக்கனி பறிக்க வேண்டும். வெற்றி பெறுவதே சாதனை அல்ல. அது இன்னும் ஒருபடி மேலானது. ஒரு சாதனையை நிகழ்த்துவதற்குப் பல வெற்றியாளர்களை முறியடிக்கவும் நேரிடலாம். எனவே சாதனை புரிய கூடுதலான உழைப்பும் முயற்சியும் லட்சிய ஆவேசமும் தியாக மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இழப்பதற்கு தயாராக இல்லாதவர்கள் சாதிக்க முடியாது. இழப்பு எந்த ரூபத்திலும் வரலாம். உயிருக்கு, உடமைக்கு, பொது வாழ்க்கைக்கு அல்லது சொந்த வாழ்க்கைக்கு என  இழப்பு வரும் “எதுவரினும் தாங்கும் என் தோள்” அறத்தின் திறம் இது எனத் தாங்கும் பிடிக்கும் தன்மை வேண்டும்.

  “கோடி கொடுத்தாலும் கொண்ட கொள்கை விடேன்” என கொள்கை பிடிப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இலக்கு நோக்கிய பயணம் திசை மாறிவிடும்.

  தமிழகத்தில் விஞ்ஞான துறையில் நமது காலத்திலேயே சாதனை புரிந்தவர் ஜி.டி.நாயுடு அவருக்கு நமது சமூகம், அரசும் எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுத்தது என்பது கேள்விக் குறியே? வெளி நாட்டு விஞ்ஞானியின் பெயரை நினைவில் வைத்திருக்கும் நமது பிள்ளைகளுக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் தெரியுமா? எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகளை மிகுந்த தன்னம்பிக்கையோடு செய்து முடித்தவர் ஜி.டி.நாயுடு.

  சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அப்துல்கலாம். தமிழகத்தை சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய ஏவுகணையின் தந்தை என்று சொல்லலாம். இந்திய விண்வெளித் துறைக்கு பாடுபட்டவர் அவர்.   நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை சர்.சி.வி.ராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்க கூடியது.

  ஐம்பது ஆண்டு காலம் தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் கண்ட தந்தை பெரியார். பொது வாழ்வில் மிகச் சிறந்த சாதனை செய்தவர். சாதிகளா£ல் பிளவுபட்டு கிடக்கும் தமிழகத்தில் மேல் சாதி வன்கொடுமைக்கு எதிராக அவர் நடத்திய சமூக நீதிக்கான போராட்டம் மறக்கமுடியாதது! தாழ்த்தப்பட்ட மக்களிடம் சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டியவர் மேலும் பக்க பலமாக அவர்களுக்குத் துணை நின்று வழிகாட்டியவர் தந்தை பெரியார். இன்னும் 500 ஆண்டுகளுக்கு பிறகும் சுய சிந்தனையாளர் என்று பெரியார் சிறப்பிக்கப்படுவார். பொது வாழ்வில் அவர் புரட்சிகர சீர்திருத்த சிந்தனைகளை முன் வைத்த பின்னர் கடுமையான தாக்குதல்கள் பலவற்றையும் சந்தித்தார். அவருக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே வந்தது. அவர் மனதில் பட்டதை தைரியமாக எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தியவர். தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டை சுரப்பை  உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம்! அஞ்சாமை எனும் அரிய பண்புக்கு அவர் உதாரணம். சாதனையாளர்களிடம் இருக்க வேண்டியது சுயசிந்தனை, அஞ்சாமை, இடையறாத முயற்சி, கொள்கைப் பிடிப்பு, பொது வாழ்வில் தூய்மை ஆகிய பண்புகளைப் பெரியாரிடம் காணலாம்.


           சாதனையாளர்களிடம இருக்க வேண்டிய பண்புகள் 

  1.  தெளிவான இலட்சியம் 

  2.  மனஉறுதி 

  3.  நிலைகுலையாமை 

  4.  நல்ல குணநலன்களுடன் இருப்பது 

  5.  காலத்தின் அருமை தெரிதல் 

  6.  தன்னிடம் உள்ள ஆற்றலை புரிந்து கொள்ளுதல் 

  7.  உதவி மனப்பான்மை கொண்டிருத்தல் 

  8.  நம்பகத்தன்மை கொண்டவராக இருத்தல் 

  9.  தளராத ஊக்கம் கொண்டராய் இருத்தல் 

  10. ஆராய்ந்து செயல்படும் தன்மை பெற்றிருத்தல் 

  11. விரைந்து செயல்படல் 

  12. இடுபாடுடன் நடந்து கொள்வது.

  13. பலவீனத்தை ஏற்று கொண்டு அதை போக்க முயல்வது.

  14. இடையறாது முயற்சி மேற் கொள்ளுதல்.

  15. சாதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை.

  16. நல்லவர்களின் வழி காட்டலும் ஆதரவும்.

  17. கவனத்துடன் கரியத்தில் ஈடுபடுதல்.

  18. தோல்வியையே வெற்றிக்கு துணையாக மாற்றிக்கொள்ளுதல்.

  19. சாதிக்க விரும்பும் துறைக்கு அவசியமான திறமைகளை வளர்த்து கொள்ளுதல்.

  20, முன்முயற்சி மேற்கொள்ளுதல்.

  21. இளம் வயதிலேயே அதற்கான பயிற்சியில் ஈடுபடுதல், நாற்பது வயதுக்குமேல்                முயற்சியில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.

  22. எண்ணம் சிறந்ததாக இருக்க வேண்டும்.


சாதனை புரிய தடைகள்

சோம்பல்:  சோம்பித்திரியேல் எனும் பழமொழி நமக்கு எச்சரிக்கை விளக்கு எனலாம்.

திறமைசாலிகளைக் கூட பயனற்றவர்களாக்கி விடும்.


தாழ்வுமனப்பாங்கு: பிறரை விட அறிவில் ஆற்றலில் செயலில் தாழ்ந்தவராக கருதிக் கொள்ளும் தாழ்வுமனப்பான்மை சாதனை புரிவோரின் எதிரியாகும். அவ்வாறே திறமைகள் அறிவாற்றல் மற்றும் செயல் வேகம் குறித்த மிகையான மனப்பான்மை இருந்தாலும்  சாதனை நோக்கத்துக்கு கேடாக முடியும்,


பயம்: சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பவரிடம் பயம் தலை தூக்ககூடாது மலையேறுவதில் சாதனை புரிய ஆசை வந்த ஒருவருக்கு தவறி விழுந்துவிட்டால், பனிப்பறை சறுக்கில் வழுக்கி விழுந்து விட்டால் உயிர் போய்விடும் என்ற அச்சம் வருமானால் அவர் ஒரு நாளும் மலையேற்றத்தில் சாதனை புரிய முடியாது.  அதேசமயத்தில் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது தவறல்ல.  அது அவசியமானதும்கூட.


ஏழ்மை: சாதனை பிரிய ஏழ்மைகூடதடையாகும். விஞ்ஞான ஆய்வு மேற்கொள்ள மாணவனுக்கு அல்லது படித்து முடித்த இளைஞனுக்கு பொருளாதர வசதிகள் தேவை. வறுமையை மீறி சாதிப்பவர்கள் வெகு குறைவே இன்றைய சமுதாயத்தில் வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கே மென் மேலும் கூடுதலான சலுகைகளும் அரசு ஆதரவு கிடைக்கும் நிலையில் திறமைசாலி மாணவர்கள், இளைஞர்கள் சாதனைகள் புரிய வறுமை மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.


குடும்ப சூழல்: சாதனை புரியும் நோக்கம் கொண்ட பிள்ளைகளின் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக மாறிவிடுவர். குடும்ப சூழல் சாதனை நோக்கத்திற்கு எதிராக அமையுமானால் அதை சரி செய்யும் முயற்சியிலேயே காலம் விரயமாகும் அல்லது சாதனை நோக்கத்தை கைவிட்டு வீட்டுக் குடும்பச் சூழலின் கைதியாகி விடுகிற அவலம் நேர்ந்துவிடும்.

  ஒருவர் அந்நிய மொழிக்காரராய் இருப்பதும் வேற்று மதத்தை அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகளை சார்ந்தவராய் இருப்பதும் கூட ஒருவரின் சாதனை முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டுவிடும். அதற்கான வாய்ப்புகள் வரும் வழியை அடைத்து விடும்.


   சாதனை செய்ய விருப்பமா?

  1. கருமமே கண்ணாயிரு 

  2. எண்ணித் துணிக கருமம் 

  3. இடையறாது முயற்சி செய் 

  4. மூத்தோர் வழிகாட்டலைப் பெறு 

  5. முடியும் என்னும் நம்பிக்கை கொள் 

  6. இலட்சியத் தாகம் நிரம்ப பெறு 

  7. கடின உழைப்பில் ஈடுபடு 

  8. கல்வி பயிலுவதில் தீவிரம் காட்டு 

  9. மனத்தை உறுதி செய் 

  10.சூழ்நிலையை பயன்படுத்து 

  11. தன்னம்பிக்கையோடிரு 

  12. எண்ணங்களை கட்டுக்குள் வைத்திரு 

  13. சாதாரண காரியமே ஆயினும் சிறப்புடன் செய் 

  14. தைரியம் போற்று 

  15. தோல்வி மீது நட 

  16. தனிச்சிறப்பாக செயல்படு 

  17. கவனம் சிதறாதே!

 

 

   6.சாதனையாளர்களின்  வாழ்க்கையும்

          படிப்பினைகளையும் 

  சாதனை மனோபாவத்துடன் இருப்பவர்கள் சாதனை புரிகிறார்கள். ஒரு செயலில் ஈடுபடத் திட்டமிடுவது, வெற்றி அடைவது என்பது முதல்கட்டம் என்றால் தொடர் வெற்றிகள் ஒருவரை சாதனையாளர் ஆக்குவது அடுத்தகட்டம்-.

  வெற்றியாளர்கள் பலர் இருக்கலாம். ஆனால் சாதனையாளர்கள் சில பேர்கள் தான். பல வெற்றியாளர்களை தாண்டி சாதனையில் ஈடுபட வேண்டியுள்ளது.

  இமயமலையில் உள்ள பல சிகரங்களை ஏறி வெற்றி கொள்ள பலர் முயன்று வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயத்தில் அவர்கள் பெயரெல்லாம் எவர் நினைவுக்கும் வராவிட்டாலும் எவெரஸ்ட் சிகரம் தொட்ட டென்சிங்ஐ நாம் மறக்க முடியாதல்லவா! சாதனையாளர்கள் மாபெரும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். பல இழப்புகளை சந்திக்கிறார்கள். தியாகங்கள் புரியத் தயாராயிருக்கிறார்கள். தன்னம்பிக்கை ஊற்றாய் காட்சியளிக்கிறார்கள.  அஞ்சாமையும் சாதனை நோக்கும் அவர்களிடம் நீக்கமற நிறைந்திருக்கிறது.  கலைத்துறையில், விஞ்ஞானத்துறையில் இலக்கியத்துறையில், இதர பல துறைகளில் அவர்கள் சாதனை புரிந்ததைப் கண்டு பல நு£ற்றாண்டுகள் கடந்த பின்னரும் நினைக்கத்தக்கதாய் இருக்கிறது. என்றால் அந்தச் சாதனையின் பலம் எத்தகையது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  காலத்தை வென்று நிற்கும் சாதனைகளும் உண்டு. விளையாட்டு மற்றும் இதர துறைகளில் முறியடிக்கபட்டு புதிய சானைகள் நிகழ்த்தப்படுவது உண்டு.

  பல துறைகளில் சாதனை செய்தவர்களின் சரித்திரத்தை உற்று நோக்கினால் அதில் நாம் கற்றறிய வேண்டிய படிப்பினை நிறைந்திருக்கும்.


ஹோண்டாவின் கதை :

  ஹுரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் உலகப் பெற்றது.  அதை உருவாக்கிய ஹோண்டாவின் கதை இதுதான்: ஜப்பான் நாட்டில் ஹோமியோ என்ற சிறுநகரத்தில் சோயி சிரோ ஹோண்டா பிறந்தார்.  சிறு வயதிலேயே மோட்டார் இயந்திரங்கள் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை.  எந்திரப் பொறிகள் அவரை மயக்கின.  ஐந்து வயதில் அரிசி அரைக்கும் ஆலையில் இருந்த எந்திர பொறிகளைக் கண்டு மந்திர சக்திக்கு கட்டுபட்டுவர் போல பார்த்துக் கொண்டிருந்தாராம்.  எட்டு வயதில் முதன்முறையாக ஃபோர்டு கம்பெனியின் நான்கு சக்கர வண்டியைப் பார்த்து அதன் பின்னாலேயே ஓடினாராம்.  அந்த வண்டி சென்ற பிறகு கீழே சிந்தியிருந்த எண்ணெயை கையில் தேய்த்து முகர்ந்து பார்த்து, பார்த்த விழிபார்த்தபடி வானம் பார்த்திருக்க எந்திரப் பொறிகளின் கனவுலகில் பயணம் போனார் ஹோண்டா.  ஹோண்டாவின் அப்பா ஒரு கருமான்.  பன்னிரண்டாவது வயதில் அவர் உருவாக்கிய மிதிவண்டியில் காலாலேயே பிரேக் போட வசதி செய்திருந்தார்.  அதன்பிறகு போக்ஸ் கம்பிகளுடன் செய்யப்பட்ட சக்கரம் பொருத்திய வண்டிகளை செய்தார்.  அவற்றை விற்று சிறிது பணம் திரட்டினார்.  மூன்று வருடங்கள் மின்னியக்கம் பற்றி படித்து தெரிந்து கொண்டு ஒரு பணிமனையை அவர் ஹோமியோ என்ற சிறு நகரத்தில் உருவாக்கி கொண்டார்.




இருபத்தியொரு வயதிலிருந்து மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார் அவருடைய குறிக்கோள் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான், அதுவம் எப்படி? மனம் தளராமல் நம்பிக்கை குன்றாமல் தோல்விபயம் இன்றி என் கடன் பணி செய்வதே! என்று உழைத்தார்.  மற்ற கம்பெனிகளில் பழுது பார்க்க முடியாத வண்டிகளை எல்லாம் பழுது பார்த்ததோடு புதிய மோட்டார் எந்திரங்களையும் உருவாக்கினார்.  பிறகு விமான எந்திரப்பொறியை மோட்டர் வண்டியில் பொருத்தி பந்தயங்களில் கலந்து கொண்டு எல்லாவற்றிலும் முதல் பரிசை வென்றார்.

  1835 ஆம் ஹோண்டா இப்படியொரு போட்டியில் கலந்து கொண்டபோது வேறொரு வண்டி இவரதுவண்டி மீது மோத கை கால் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டன. மருத்துவமனையில் ஓராண்டு சிகிச்சை பெற்றார்.  பிறகு இத்தகைய போட்டியில் கலந்து கொள்வதை விட்டு விட்டார். ஆயினும் பலவிதமான எந்திர பொறிகளை உருவாக்கினார்.  முந்தைய எந்திரங்களில் காணப்பட்ட குறைகளை நோக்கி புதுமை செய்தார். பள்ளிக்கு சென்று உலோகங்களைப்பற்றி பயின்றார்.  அதன்பின்னர் அவர் உருவாக்கி அமைத்த உந்து தண்டு வளையங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.  ஹோண்டாவின் தொழிலகம் பெரிதானது அவரது தயாரிப்புகள் விற்றுத் தீர்ந்தன.

ராய்ஸ் தமது ரோல் ராய்ஸ் காரை தரமானதாகவும் அதிக விலை உள்ளதாகவும்  தயாரித்து, பணமும் புகழும் சேர்த்தார். ஆனால் ஹோண்டா குறைந்த விலையில்  தரமான இயந்திரப் பொறிகளை உருவாக்கி விற்றார்.  செல்வமும் செல்வாக்கும் பெற்றார்.  இந்த வளர்ச்சியில் இடி விழுந்தது போல இரண்டாம் உலகப்போர்  சமயத்ததில் அமெரிக்க குண்டு வீச்சு இவர் கம்பெனியை தரைமட்டமாக்கியது. நஷ்டம்! பெருநஷ்டம்! கேள்விப்பட்டதுமே மனம் நிலைகுலையும் அளவுக்கு இழப்பு! அவர் மனம் நொடித்து போனார்.  என்ன செய்வதென்று தெரியாமல் இடிந்து போனார்!

  இடிந்து கிடந்தது அவரது தொழிற்கூடம்தான். அழிந்து போனது பொருள், செல்வம் மட்டும் தான்.  அரிடம் நிறைந்திருந்தது, விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும், அவை போதாதா? சோதனைகளைச் சதிராடி சாதனைகளை படைக்க, வேதனைகளைத் துடைத்து வெற்றியை தொட!

  நண்பர்களிடம் கடன் வாங்கினார்.  போரில் கைவிடப்பட்ட 500 மின் உற்பத்தி எந்திரங்களை விலைக்கு வாங்கினார்.  சைக்கிளின் பின் சக்கரத்தில் பொருத்தி மோட்டார் சைக்கிள் ஆக்கினார். அதன் கைப்பிடியை 20 நிமிடம் சுழற்றினால் வண்டி புறப்பட்டு விடும்.  இது இப்போது நமக்கு வேடிக்கையாக தோன்றினாலும் அப்போது அது புதுமைதான்.  அவர் செய்த 500 வண்டிகளும் விற்றுத் தீர்ந்தன.   பிறகு தானே புதிய மின்னாற்றல் எந்திரங்களை செய்து சைக்கிள்களில் பொருத்தினார்.  அவற்றில் உயரமான புகை போக்கியும் வைத்திருந்தார்.  1949 ஆம் ஆண்டு முதலாக புதிய மாடல்களை செய்யலானார். தனது புதிய மாடல் ஒன்றுக்கு கனவு என்று பெயரிட்டு

சந்தைக்கு அனுப்பினார். கனவு எனும் அவரது மோட்டார் சைக்கிள் அவரை மறுபடியும் பெரும் பணக்காரர் ஆக்கியது. பின்னர் தான் உற்பத்தி செய்த மோட்டார் சைக்கிளுக்கும் ஹோண்டா எனும் தனது பெயரை வைத்தார்.


  1954 ஆம் ஆண்டு அவர் தமது  வண்டிகளை மோட்டார் வாகனப் போட்டிக்கு அனுப்ப விரும்பினார். ஆயினும் பிற வண்டிகளைப் பார்த்து அதை விட உயர்வான தரத்தை தந்து, அதன் பின்னரே 4 ஆண்டுகள் கழித்து தமது வண்டிகளைப் போட்டிக்கு அனுப்பினார். 1966 ஆம் ஆண்டில் எல்லா போட்டிகளிலும் ஹோண்டா வண்டிகளே பரிசு பெற்றன. உலகம் முழுவதும் நன்கறிந்த பெயர் ஹோண்டோ.


  இந்த ஹோண்டா இடையூறுகளைச் சந்தித்தார்.  சமாளித்தார்.  தோல்விமேல் மேல் தோல்லி வந்தாலும் தாங்கிக் கொண்டார். அதையே வெற்றிக்கு துணையாக்கி கொண்டார். தன்னம்பிக் கையுடன் அவர் உழைத்த உழைப்பு அவரை உயத்தியது.


              ராமனுஜம் செய்த சாதனை

  வியாபாரத் துறையில் புதுமை கண்டுபிடிப்புச் செய்து சாதனை புரிந்தார் ஹோண்டா.

  கணிதத் துறையில் சாதனை புரிந்த இராமனுஜத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது?

ஸ்ரீனிவாச இராமனுஜன் 1887 டிசம்பர் 22ல் ஈரோட்டில் பிறந்தவர்.  தந்தை ஸ்ரீனிவாசன் தாய் கோமளம்மாள்.  கும்பகாணத்தில் துணி வியாபாரியிடம் பணி புரிந்து வந்தார் அவரது தந்தை அன்னை கோமளம்மாள் வானவியலிலும் , எண் இயலிலும் ஆர்வம்  கொண்டவர். தாயின் அரவணைப்பில் இராமனுஜத்தின் ஆளுமை உருப்பெற்ற பொது இயல்பாகவே  கணிதத்தில் வல்லமை இராமனுஜனுக்கு ஏற்பட்டு விட்டது.

  16வயது வரை உயர்நிலைப்பள்ளியில் நன்கு படித்தும் படித்தும் கணிதப் புத்தகத்தையே

பார்க்காதவர் அவர்.  தாமாகவே உயர்வகுப்புக் கணிதத்தை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 1904 கும்பேகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். முதல் வருடத்திலேயே கணக்கில் தவிர மற்ற கலை பாடங்களில்  தோல்வி அடைந்தார்.  இராமனுஜத்தின் அறிவாற்றல் யாவும் கணிதத்தில் மையம் கொண்டிருந்தது.  நமது கல்வி  அமைப்பில் அவரது வளர்ச்சிக்கு எவ்வித உதவியும் கிட்டவில்லை.

  இவர் 6 வது பாரம் படிக்கும்போது ஜி.எஸ்.கான் எழுதிய கணிதப் புத்தகம் கிடைத்தது. அதில் இருந்த யூலரின் சூத்திரங்களைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமாயிற்று தான் ஓர் ஆண்டுக்கு முன்பு உருவாக்கிய அதே சூத்திரங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன என்பதை தெரிந்து கொண்டார்.  பட்டப்படிப்பு பெறாத நிலையில் அவர் சென்னை துறைமுகத்தில் 25 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். மிகவும் படாதபாடுபட்டு  அந்த வேலைக்கு வேர்ந்தார்.  அவருக்கு உதவி செய்த நல்ல நண்பர் ஒருவர் ராமனுஜத்தின் கணித ஆற்றலை உணர்ந்து ஆங்கிலேயர்கள் சிலரிடம் உதவி கோரினார்.  போர்ன் கிரக்மென், கில்பர்ட் வாக்கர். போன்றோர் உதவி செய்தனர், வாக்கர்செய்த சிபாரிசினால் சென்னைப் பல்கலைகழகம் ராமானுஜருக்கு 75 ரூபாய் உதவித் தொகை வழங்க முன் வந்தது.

  ராமானுஜத்தின் அளப்பறிய கணித ஆற்றலை தெரிந்து கொண்ட ராமசாமி அய்யர் (உடன் வேலை பார்த்தவர்) கேம்ப்பிரிட்ஜில் இருந்த ஹார்டி என்ற கணித மேதைக்கு ராமானுஜனை கடிதம் எழுதச் சொன்னார்.  தனது சூத்திரங்களை நூல்வடிவில் கொண்டு வரவேண்டுமென ராமானுஜன் கடிதத்தில் தெரிவித்திருந்தார். அவரது கணித ஆற்றலை உணர்ந்த ஹார்டி தன் நண்பரின் மூலமாக ராமானுஜத்¬தை இங்கிலாந்தின் கேம்ப்பிரிட்ஜின் பல்கலைகழகத்துக்கு வரவழைத்தார், 2 வருடதுறைமுக பணியிலிருந்து விடுபட்டு அங்கே சென்றார். சென்னை பல்கலைககழகம் ரூ.10 ஆயிரம் வரை உதவி செய்தது.

  ராமானுஜன் அல்ஜிப்ராவில் உருவாக்கிய சூத்திரங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஈடு இணையற்றவை.  எண்களைப்பற்றிய ராமானுஜத்தின் ஆய்வு அனைவராலும் பாராட்டுப்பெற்றது.  உலகப்புகழ் பெற்ற கணித மேதைகளான யூலர்  ஜேக்கோபி, லெஜந்திரே, காஸ் டிரிக்கெட் ஆகியோருடன் ஒப்பிட்டு ராமனுத்தை

பாராட்டினர். ஹார்டி ஐரோப்பாவின் கணித முறைகளை அறியாத ராமானுஜம் அவருக்கு  முன்னர் 100 ஆண்டுகளாக ஐரோப்பியரால் தீர்க்கமுடியாத கணித பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். கணிதம் தவிர சமஸ்கிருதத்திலும் தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

  1917 ல் இங்கிலாந்தில் இருந்தபோது இவருக்கு காசநோய் வந்தது. 33 வயதில் 1920 ஏப்ரல் 26 ல் இறந்து போனார். மாபொரும் கணித மேதை ராமாஜனுன். இறப்பதற்கு முன் ஹார்டிக்கு எழதிய கடிதத்தில் பூஜ்யம் என்றால் என்ன என்பது பற்றியும் மாக்தீட்டாவின் பண்புகள் பற்றியும் எழுதிருந்தார். அந்தக் கணிதமேதையின் சூத்திரங்களை இன்னும் கூட கணித மேதைகள் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

  இம் மேதையின் சாதனையை உலகம் இப்போதுதான் போற்றத் தொடங்யிருக்கிறது.

இந்தியக் கல்லூரியில் கணிதப் பாடம் நடத்தக் கூட வாய்ப்பில்லாமல் இருந்தது. அவரது

வாழ்க்கையில்துயரங்கள் தொடர்ந்து வந்தன.  தோல்விகள்   குறுகிட்டன. ஆயினும் அவரது அறிவாற்றலை கூர்மை செய்தார். உலகமே வியக்கும் அளவுக்கு கணிதத் துறையில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்தினார்.  சாதனை புரிபவர்களுக்கு நல்ல மனிதர்களின் ஆதரவும் தேவைபட்டிருப்பதை இவரது வாழக்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி எவ்வளவு வறுமைத் துயரம் வந்த போதிலும் அவரது தன்னம்பிக்கை இழந்து விடவில்லை. தனது ஆய்வுகள்  என்று கூடத் தெரியாத நிலையிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கணித சூத்திரங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார். மனத்தளர்ச்சிக்கு அவர் இடம் கொடுக்கவில்லை அவரது கடும் உழைப்புக்கு இன்று உலகம் தலை வணங்குகிறது.  பல வெற்றியாளர்களை தாண்டி சாதனையாளராகத் திகழ்ந்த ஒருவருக்கு தேவையான எல்லா குணங்களும் அவரிடம் இருந்தன. 

 

-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
29-May-2013 06:16:44 கண்மணி.ப said : Report Abuse
சூப்பர்...........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.