298 பொன்செய்த செஞ்சடைப் பெருமான் றிருக்கையாற் பொங்காழி யெழுசெங்கதிர்ப் - புத்தேட னகையிழந் தாங்கக் கதிர்க்குரிய புண்டரிக மனையாட்டியுங், கொன்செய்த நகையிழந் துறுகணீர்சிந்தியுட் கொள்ளும் பயத்தழுந்தக் - கோலம் பொலிந்தொளிகொள் செங்கையம் பங்கயங் குப்புற நிமிர்த்துநிலமீ, மன்செய்த கொங்கையந் திருமகளை யவளுரிய மருமகளை யருளுமென்றாண் - மரையொன் றெடுத்தொன்று கோட்டியிருள் வீட்டியொளிர் வள்ளைக் குதம்பையாடத், தென்செய்த தமிழ்மணக் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே - சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (1)
299 உருவம் பழுத்ததுகி ரொத்தசடை மதியமு துகுக்கவகி விடமுகுக்க - வுறுபுனல் பனித்திவலை வீசக் கரத்தினழ லொளிரும் புலிங்கம்வீசப், பருவம் பழுத்தநீற் றொளிநிலவு தோன்றவொலி பாய்கழற் பரிதிதோன்றப் - பாததாமரையொன் றெடுத்தூன்றி யொன்றுமறை பாடவிரு முனிவர்பரசக், கருவம் பழுத்தமுகில் குளிறுத லெனப்பெருங் கருமால்கை முழவதிர்க்கக் - கணநாதர் களிகொண்டு நின்றாட மன்றாடு கண்ணுதலை யாட்டுமமுதே, திருவம் பழுத்தசெங் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே - சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (2)
300 கானாறு சூழியக் கொண்டையின் மணிப்பணி கவின்கொள நிறுத்தியதனிற் - கட்டிவிடு நித்திலச் சுட்டிவா ணுதலிற் கஞன்றிள நிலாவெறிப்ப, வானாறு வள்ளையிற் றுள்ளொலி மணித்தோடு மழவிளங் கதிரெறிப்ப - மணிமூரலெழநடந் திமயமா தேவிதிரு மடியேறி முத்தளித்துப், பானாறு குமுதப் பசுந்தேற லூட்டியவள் பைம்பொற் றனங்கைவருடிப் - பாய்சுரப் பெழுசுவைப் பாலுண்டு விளையாடு பைங்கிள்ளை வானுரிஞ்சுந், தேனாறு பூம்பொழிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே - சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (3)
301 வல்லே றுகைப்பவ ரரக்கெறி கொடிச்சடை வதிந்தபய னுற்றேமெனா - மந்தா கினிப்பெயர்க் கங்கையுந் திங்களும் மனமகிழ்ந் துவகை தூங்கக், கல்லேறு கொண்டதிரு மேனியர் களிப்பெனுங் கடன்மூழ்க நின்னருட்கட் - கருங்குவளை செங்குவளை பூப்பநுழை நுண்ணிடை கழிந்தொசிதல் கண்டன்னைநின், வில்லேறு புருவங் குனித்திடே னின்னிலென வேண்டியோ லிடல்கடுப்ப - விரிபரி புரங்குளிற வக்கொழுநர் முடிமீது மென்றாள் செலுத்தன்னம்வண், செல்லேறு மணிமதிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே - சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (4)
302 மொய்த்தகுடி லத்துவெண் டும்பையும் பாசறுகு முருகுவிரிபொற் கொன்றையு - முளைமதியும் வேய்ந்தவையொ டொப்பவெண் டலையுமுடை மூடென்பும் வார்நரம்பும், பைத்தபட வரவுந் தரித்தவரொ டொப்பநன் பாடலொடியான்சொலும்புன் - பாட்டுநனி கேட்டுமறை சூட்டுமிரு தாட்டுணை பதித்தென் றலைக்கணருளு, நெய்த்தகரு நீலக் கதுப்பம்மை காழிமழ நிகரறுந் தமிழாரண - நெடியாது நொடிதரப் படியிலா ஞானமரு ணித்திலக் கொங்கை மங்கை, செய்த்தவள வளைகண்முரல் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே - சிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (5)
வேறு.
303 துருவரு நித்திலம் வைத்த தலைப்பணி சுற்று மிசைந்தாடச் சூழிய மொடுநுத றாழக் கட்டிய சுட்டி யசைந்தாடப் பொருவரு திருமுக முழுமதி யெழுசிறு புன்னகை நிலவாடப் பொங்கொளி தங்கு குதம்பை ததும்பப் பொருகட் கயலாடக் கருகிரு டின்று விளங்கு மிளங்கதிர் கால்பொற் குழையாடக் கான்மலர் பெயர்தோ றுங்கிண் கிணிகள் கலின்கலி னென்றாட வருள்வளர் தருதிரு வுருவமு மாடிட வாடுக செங்கீரை யழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை. (6)
304 செங்குமு தம்பொதி யூற லெனுஞ்சிறு தேறல் வழிந்தோடச் செழுமணி மேகலை தழுவிய நுழைநுண் சிற்றிடை யொசிவெய்தக் கங்குன் மழுங்க வெழுங்கிர ணம்பொலி காதணி வெயில்வீசக் காமர் முகப்பது மக்குமிழ் முத்தங் கஞலொளி நிலவீனத் துங்க மிகும்புவ னம்பல நந்திய தொந்தி ததும்பியிடத் துகளறு சிந்தை யிருந்த சிவந்த துணைத்தா ளணிமுரல வங்கலுழ் திருவுரு வத்தொளி மொய்த்தெழ வாடுக செங்கீரை யழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை. (7)
வேறு.
305 எமதுபவப்பிணி யிரியவிரிக்கும ருந்தேயன்பாள ரிதயமுளைத்துந லெழிலொடினித்தக ரும்பேவிண்டாழு மமரர்முடிப்பொலி மணியெனுமத்தர்வி ருந்தீதென்றோதா வகமகிழச்சிறு நகைவிரிபொற்பமர் கொம்பேபண்பாடுந் தமிரமிடற்றபல் பமரமுழக்குந றுந்தார்கொண்டாயுந் தகரமொழுக்கிய கருநிறமைக்குழ னங்காயிந்தூருஞ் சிமயமிமைத்தெழு மிமயவரைப்பிடி செங்கோசெங்கீரை திகழ்தருகுக்குட நகரிலிருப்பவள் செங்கோசெங்கீரை. (8)
வேறு.
306 எறிதிரை யமுதமும் வாழயி ராணித னங்கோபஞ்சீறு மிதழ்பொதி யமுதமு மோகைகு லாவநு கர்ந்தேசந்தான முறிபுனை நறுநிழல் வானவர் குழவி ருந்தேறுங்கோப முனையடு புகர்முக மாலயி ராவத முந்தாநந்தாத செறிதரு களியெனு மாழ்கடன் மூழ்கியு வந்தோர்விண்கோமான் றிருவுற வொருசிறு சேயினை மாணொடு தந்தாயெந்தாயே யறிஞர்க ளறிவுறு மாரண நாயகி செங்கோசெங்கீரை யருள்விளை திருவுறை யூரமர் நாயகி செங்கோசெங்கீரை. (9)
வேறு.
307 பொங்கு நறைப்பொழி மாமலருங்கா னுஞ்சீர்சால் பொன்செ யருக்கனு நீளொளியும்போ லம்போடு திங்கண் முடித்தபி ரானுறைவெங்கே யங்கேவாழ் செங்க னகச்சிலை மானிருகொங்காய் நங்காயேர் தங்கு வரைக்கிறை யோனருள்கன்றே நன்றாய்வார் தங்க ளுளத்தமு தூறுகரும்பே வம்பேகூ ரெங்கள் குடிக்குமொர் வாழ்முதல் செங்கோ செங்கீரை யின்சொல் பெருக்குறை யூர்மயில்செங்கோ செங்கீரை. (10)
|