செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
தேவநேயப் பாவாணர் உரை:
செவிஉணவின் கேள்வி உடையார் -செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர்-நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர்.
செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையர் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினையுடையார் துன்பமின்றியின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.
கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு
ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர்
எண்ணப்படுவர்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
Translation
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
Explanation
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.