தில்லையில் அமைந்துள்ளது போலவே, இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருகிறார். எனவே, இத்தலம் "தென் சிதம்பரம்' எனப்படுகிறது. இவரை வணங்கிட கலைகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. இப்பகுதியை "குமணன் நகர்' எனவும், "குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி "கொழுமம்' எனப்படுகிறது.
தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் அழைக்கப்படும் இவரது பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புடன், பெரிய கோயில் எனப்படும் இத்தலம் அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் தனிச்சன்னதியிலும், அவளுக்கு முன்பகுதியில் ஜேஷ்டாதேவி, பிரகாரத்தில் சுந்தரவிநாயகர், மேற்கு நோக்கியபடி சனீஸ்வரன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். |