வேல், சிங்கம், சிங்கம் - 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் ஹரியும், சூர்யாவும் சிங்கம் - 3 படத்தின் மூலம் தற்போது மீண்டும் இணைய இருக்கிறார்கள்.
ஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது தமிழ் சினிமாவில் இதுதான் முதல் முறை. அதே போல் மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் முதல் தடவை தான்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற ராதாரவி, நாசர் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார்கள்.
இதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தை விட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
தப்பு பண்ணுகிறவர்களை கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ் என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் சூர்யா அறிமுகமாவாராம். இதற்கு முன்பு ஹரி இயக்கத்தில் வெளியான சாமி, சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களைப் போல இந்த படமும் பரவலாக பேசப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹரி. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கோவா மற்றும் பிரான்ஸ் தலைநகரான பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
|