|
||||||||
சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் ! |
||||||||
சாதிகளின் பெயராலே சங்கம் வைத்தோம் சாதிக்காய்த் தலைவரினைத் தேர்ந்தெ டுத்தோம் சாதிக்கும் சக்தியெல்லாம் ஊர்வ லத்தில் சாதனையாய்ப் பகையுணர்ச்சி பெருக்கு வித்தோம் வாதிக்கும் கருத்தெல்லாம் வாயா லன்றி வாள்தடிகள் சங்கிலியால் மோதிக் கொண்டோம் போதிக்கும் அன்புவிட்டு மதங்க ளென்னும் போதையாலே மதம்பிடித்தே அலையு கின்றோம் !
அறிவியலில் உலகமெல்லாம் அற்பு தங்கள் அரங்கேற்றக் கலவரங்கள் அரங்க மேற்றி அறிவிலியாய்க் குறுமனத்தில் திகழு கின்றோம் அணுப்பிளந்து அடுத்தகோளில் அவர்க ளேற வெறியாலே உடன்பிறந்தோர் உடல்பி ளந்து வீதியெல்லாம் குருதியாற்றில் ஓடம் விட்டோம் நெறியெல்லாம் மனிதத்தைச் சாய்ப்ப தென்னும் நேர்த்திகடன் கோயில்முன் செய்யு கின்றோம் !
வானத்தை நாம்வில்லாய் வளைக்க வேண்டா வாடுவோரின் குரல்கேட்க வளைந்தால் போதும் தேனெடுத்துப் பசிக்குணவாய்க் கொடுக்க வேண்டா தேறுதலாய் நம்கரங்கள் கொடுத்தால் போதும் தானத்தில் சிறந்ததெனும் நிதானத் தில்நாம் தமரென்றே அனைவரையும் அணைத்தால் போதும் மானுடந்தான் இங்குவாழும் சமத்து வத்தில் மணபதையே அமைதிவீசும் நேயத் தாலே !
- பாவலர் கருமலைத்தமிழாழன் |
||||||||
by Swathi on 24 Oct 2014 0 Comments | ||||||||
Tags: Nadigar Karumalai Thamilaalan நடிகர் கருமலைத்தமிழாழன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|