சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. இம்மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய வற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.