|
||||||||
சிவஞான சித்தியார் பகுதி -4 |
||||||||
சுபக்கம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
நால்வாய்ஐங் கரத்தன்ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்
தருமொருவா ரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன்
றோவென்னச் செய்யும் தேவே.
1
பாயிரம்
அறுவகை சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு)
அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம். 2
என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே
தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும்
மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல்
சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம். 3
பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம். 4
மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும்
குறைவிலா அளவி னானுங் கூறொனா தாதி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை
நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே. 5
அருளினால் ஆக மத்தே அறியலாம் அளவி னாலும்
தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை யுள்ளே
மருளெலா நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா
இருளெலா மிரிக்க லாகும் அடியரோ டிருக்க லாமே. 6
அளவை
அளவை காண்டல் கருதல்உரை அபாவம் பொருளொப் பாறென்பர்,
அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான்(கு),
அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவையெல்லாம்,
அளவை காண்டல் கருதல்உரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே. 7
மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விகற்ப முன்னா
ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
பேசுறு மேதுக் கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
காசறு முறையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும். 8
கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே,
கொண்டல் திரிவாம் பெயர்ச்சாத்தி குணமே கன்மம் பொருளெனஐந்,
துண்ட விகற்ப உணர்வினுக்குப் பொருளி னுண்மை மாத்திரத்தின்,
விண்ட வில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே. 9
காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென,
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்,
மாண்ட உரைதந்த் ரமந்த்ரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்,
பூண்ட அளவைக் கெதிர் புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே. 10
அன்னிய சாதி யுமதன் சாதியும் அகன்று நிற்றல்
தன்னியல் பன்னி யத்தைத் தவிர்ந்துதன் சாதிக் கொத்தல்
துன்னிய பொதுஇ யற்கை சொனனஇவ் விரண்டி னுள்ளே
மன்னிய பொருள்கள் யாவும் அடங்கிடு மான முற்றால். 11
உயிரினோ டுணர்வு வாயில் ஔ¤யுரு வாதி பற்றிச்
செயிரொடு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி
அயர்விலிந் திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து யிர்க்கண்
மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே. 12
அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக் கராக மாத்
தரும்தன்வே தனையாங் காட்சி சமாதியான் மலங்கள் வாட்டிப்
பொருந்திய தேச கால இயல்பகல் பொருள்க ளெல்லாம்
இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே. 13
பக்க மூன்றின் மூன்றேது வுடைய பொருளைப் பார்த்துணரத்,
தக்க ஞானந் தன்பொருட்டாம் பிறர்தம் பொருட்டாம் அனுமானம்,
தொக்க இவற்றாற் பிறர்தௌ¤யச் சொல்லலாகும் அச்சொல்லும்,
மிக்க வந்நு வயத்தினொடு வெதிரே கக்சொல் லெனஇரண்டாம். 14
மூன்று பக்கம் பக்கம்நிகர் பக்கம் நிகரில் பக்கமெனத்,
தோன்றும் பக்கந் துணிபொருளுக் கிடமாம் உவமை நிகர் பக்கம்,
ஆன்ற பொருள்சென் றடையாத விடமா நிகரில் பக்கமுதல்,
ஏன்ற இரண்டும் பொருளுண்மைக் கிடமாம் ஒன்று பொருளின்றாம். 15
ஏது மூன்றாம் இயல்புகா ரியத்தோ டநுப லத்தியிவை,
ஓதி னியல்பு மாமரத்தைக் காட்டல் உறுகா ரியம் புகைதன்,
ஆதி யாய அனல்காட்ட லாகும் அநுப லத்தியது,
சீத மின்மை பனியின்மை காட்டல் போலுஞ் செப்பிடிலே. 16
புகையால் அனலுண் டடுக்களைபோ லென்னப் புகறல் அந்நுவயம்,
வகையாம் அனலி லாவிடத்துப் புகையின் றாகும் மலரினொடு,
முகையார் நீரிற் போலென்று மொழிதல் வெதிரே கச்சொல்இவை,
தொகையால் உறுப்பைந் தொடுங் கூடச் சொல்லு வாரு முளர்துணிந்தே. 17
போது நாற்றத் தால்அறிதல் பூர்வக் காட்சி அனுமானம்
ஓது முறையா லறிவின்அள வுணர்தல் கருதல் அனுமானம்
நீதி யான்முற் கன்மபல நிகழ்வ திப்போ திச்செய்தி
ஆதி யாக வரும்பயனென் றறிதல் உரையால் அனுமானம். 18
அநாதியே அமல னாய அறிவன்நூல் ஆக மந்தான்
பின்ஆதிமா றின்றிப் பேணல் தந்திர மந்தி ரங்கள்
மனாதிகள் அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை யாகும்
தனாதிஈ றிலாதான் தன்மை யுணர்த்துல் உபதே சந்தான். 19
ஈண்டு பக்கப் போலிநான் கேதுப் போலி யொருமூன்றான்,
வேண்டும் எழுமூன் றாகும்விளங் குவமைப் போலி யீரொன்பான்,
காண்டுந் தோல்வித் தானம்இரண் டிருபத் திரண்டாம் கருதிலிவை,
யாண்டு மொழிவர் அவையெல்லாம் அளக்கில் அறுபத் தைந்தாகும். 20
பிராமணவியல்
முதற் சூத்திரம் (21-90)
ஒருவனோ டொருத்தீ ஒன்றென் றுரைத்திடும் உலகமெல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆத லாலே
தருபவன் ஒருவன் வேண்டும் தான்முதல் ஈறு மாகி
மருவிடும் அநாதி முத்த சித்துரு மன்னி நின்றே. 21
உதிப்பதும் ஈறு முண்டென் றுரைப்பதிங் கென்னை முன்னோர்
மதித்துல கநாதி யாக மன்னிய தென்ப ரென்னின்
இதற்கியான் அனுமா னாதி யெடேனிப்பூ தாதி யெல்லாம்
விதிப்படி தோற்றி மாயக் காணலாம் மேதி னிக்கே. 22
இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடின் இயல்பினுக்குச்,
செயலதின் றியல்பு செய்தி செய்தியேல் இயல்ப தின்றாம்,
இயல்பதாம் பூதந் தானே இயற்றிடுஞ் செய்தி யென்னில்,
செயல்செய்வான் ஒருவன் வேண்டுஞ் செயற்படும் அசேத னத்தால். 23
நிலம்புனல் அனல்கால் காண நிறுத்திடும் அழிக்கும் ஆக்கும்
பலந்தரு மொருவ னிங்குப் பண்ணிட வேண்டா வென்னின்
இலங்கிய தோற்ற நிற்றல் ஈறிவை இசைத லாலே
நலங்கிளர் தோற்ற நாசம் தனக்கிலா நாதன் வேண்டும். 24
சார்பினில் தோன்று மெல்லாம் தருபவன் இல்லை யென்னில்
தேரின்இல் லதற்கோ தோற்றம் உள்ளதற் கோநீ செப்பாய்
ஓரின்இல் லதுவுந் தோன்றா துள்ளதேல் உதிக்க வேண்டா
சோர்விலா திரண்டு மின்றி நிற்பது தோன்று மன்றே. 25
உள்ளது மிலது மின்றி நின்றதொன் றுளதே லுண்டாம்
இல்லதே லில்லை யாகும் தோற்றமும் இசையா தாகும்
உள்ளகா ரணத்தி லுண்டாம் காரிய முதிக்கும் மண்ணில்
இல்லதாம் பங்க டாதி எழில்தரு மியற்று வானால். 26
ஒருபொரு ளொருவ னின்றி உளதில தாகு மென்னில்
தருபொருளுண்டேலின்றாம் தன்மையின் றின்றே லுண்டாய்
வருதலின் றிலது கார்ய முதலுள தாகு மென்னில்
கருதுகா ரியமு முண்டாய்த் தோற்றமுங் கருத்தா வாலாம். 27
காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம் உலகற் காணா
நீஇத்தை உரைத்த வாறிங் கென்னெனில் நிகழத்து முண்மை
மாயத்த உலகம் பூநீர் தீவளி வான மாதி
யாயித்தா னொன்றி னொன்று தோன்றிநின் றழித லாலே. 28
ஓரிடம் அழியப் பின்னும் ஓரிடம் நிற்கும் ஒக்கப்
பாரிடம் அழிவ தின்றாம் என்றிடிற் பயில்வித் தெல்லாம்
காரிட மதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்
சீருடைத் துலகு காலஞ் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும். 29
காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில்
காலமோ அறிவின் றாகும் ஆயினுங் காரி யங்கள்
காலமே தரவே காண்டும் காரணண் விதியி னுக்குக்
காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண். 30
அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று
கழிந்திடுங் கன்மத் தென்னில் கன்மமும் அணுவுங் கூட
மொழிந்திடுஞ் சடமே யாகி மொழிதலான் முடியா செய்தி
ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலா மொடுங்கு மன்றே. 31
காரண அணுக்கள் கெட்டாற் காரிய உலகின் றென்னில்
காரண மாயை யாகக் காரியங் காண லாகும்
காரண மாயை யென்னை காண்பதிங் காணுவே யென்னில்
காரண மாயை யேகாண் காரியம் அணுவிற் கண்டால். 32
காரிய மென்ப தென்னை காரண அணுவை யென்னில்
காரியம் அவய வத்தாற் கண்டனங் கடாதி போலக்
காரிய உருவ மெல்லாம் அழிதருங் கார ணத்தால்
காரிய உறுப்பின் மாயை தருமெனக் கருதி டாயே. 33
தோற்றமும் நிலையு மீறும் மாயையின் தொழில தென்றே
சாற்றிடு முலகம் வித்துச் சாகாதி அணுக்க ளாக
ஏற்றதே லீண்டு நிற்கும் இல்லதே லியைவ தின்றாம்
மாற்றநீ மறந்தா யித்தால் மாயையை மதித்தி டாயே. 34
மாயையி னுள்ள வஞ்சம் வருவது போவ தாகும்
நீயதிங் கில்லை யென்னில் நிகழ்த்திடு முயலிற் கோடு
போய்உகும் இலைக ளெல்லாம் மரங்களில் புக்குப் போதின்
ஆயிடும் அதுவு மென்னிற் காரணங் கிடக்க வாமே. 35
கருதுகா ரணமுண் டாகக் காரிய முள்ள தாகி
வருதலால் அநாதி வைய மற்றொரு கடவு ளித்தைத்
தருதலால் ஆதி யாகச் சாற்றலு மாகு மாயைக்
கொருவனா ரென்னிங் கென்னின் உள்ளவா றுரைப்பக் கேள்நீ. 36
புத்திமற் காரி யத்தால் பூதாதி புருடன் தானும்
அத்தனு கரணம் பெற்றால் அறிதலால் அவற்றை மாயை
உய்த்திடும் அதனான் மாயைக் குணர்வொன்று மில்லையென்றே
வைத்திடு மதனால் எல்லாம் வருவிப்பா னொருவன் வேண்டும். 37
காரிய கார ணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம். 38
விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம்
வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை
முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம்
தந்திடுஞ் சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே. 39
வைகரி செவியில் கேட்ப தாய்அத்த வசன மாகி
மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்
பொய்யற அடைவு டைத்தாய்ப் புந்திகா ரணம தாகி
ஐயமில் பிராண வாயு அடைந்தெழுந் தடைவு டைத்தாம். 40
உள்ளுணர் ஓசை யாகிச் செவியினில் உறுதல் செய்யா(து)
ஔ¢ளிய பிராண வாயு விருத்தியை உடைய தன்றித்
தௌ¢ளிய அக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி
மௌ¢ளவே எழுவ தாகும் மத்திமை வேற தாயே. 41
வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித்
தோற்றுதல் அடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்
சாற்றிடு மயிலி னண்டம் தரித்திடும் சலமே போன்றங்(கு)
ஆற்றவே உடைய தாகிப் பைசந்தி அமர்ந்து நிற்கும். 42
சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால்
நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டைத்தாய்ப்
போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம். 43
நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று
புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல
மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை என்பர் நல்லோர். 44
வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு
வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள்
தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும்
உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே. 45
மூவகை அணுக்க ளுக்கு மறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞான முண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே. 46
அருவினில் உருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி
உருவினில் உருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம்
பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்
ஒருவனே யெல்லா மாகி அல்லவா யுடனு மாவன். 47
அருஉரு ஈனா தாகும் விகாரமும் அவிகா ரத்தின்
வருவது மில்லை என்னின் வான்வளி யாதி பூதம்
தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
உருவமின் உருமே றெல்லாம் உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 48
மண்ணினிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே
எண்ணிய உருவ மெல்லாம் இயற்றுவன் ஈசன் தானும்
கண்ணுகா ரியங்க ளெல்லாம் காரண மதனிற் காண்பன்
பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேள்நீ. 49
சீலமோ உலகம் போலத் தெரிப்பரி ததனால் நிற்கும்
கோலமும் அறிவா ரில்லை ஆயினுங் கூறக் கேள்நீ
ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே. 50
கற்றநூற் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும்
பெற்றியும் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம்
உற்றதும் போல வெல்லா உலகமும் உதித்தொ டுங்கப்
பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனு மன்றே. 51
உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன்பா லென்னில்
செயிருறு மலத்தி னாகும் சிதைந்ததே தென்னிற் சித்த(து)
அயர்வொரிக் காரி யங்கள் அழியுங்கா ரணங்கி டக்கும்
பயில்தரு காரி யம்பின் பண்டுபோற் பண்ணு மீசன். 52
தோற்றுவித்தளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே உடைய னீசன் புகுந்தது விகார மென்னில்
சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலருங் காந்தம்
காற்றிடும் கனலை நீரும் கரந்திடும் காசி னிக்கே. 53
உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் கலகம் ஓத
வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின்
விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே. 54
இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம்
உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதா னுண்டா காதாம்
அறுதியில் அரனே யெல்லாம் அழித்தலால் அவனா லின்னும்
பெறுதுநாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே. 55
சொன்னஇத் தொழில்க ளென்ன காரணந்தோற்ற வென்னின்
முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உ யிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதுஞ் சொல்ல லாமே. 56
அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானு
பழிப்பொழ பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம். 57
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. 58
நண்ணிடும் உருவ மென்னின் நமக்குள உருவம் போலப்
பண்ணிட ஒருவன் வேண்டும் இச்சையேற் பலரும் இச்சை
கண்ணிய உருவங் கொள்ளேம் யாம்பெருங் கடவுள் தானும்
எண்ணிய யோக சித்தர் போலுரு இசைப்பன் காணே. 59
வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ளு மாபோல்
உத்தமன் கொள்வ னென்னின் அவர்களி லொருவ னாவன்
அத்தகை யவர்க ளெல்லாம் ஆக்குவ தருளா லாங்கு
வைத்தது மாயை யென்னின் வடிவெலா மாயை யாமே. 60
மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும்
மாயஆ ணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே
காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால். 61
சத்தியே வடிவென் றாலும் தான்பரி ணாம மாகும்
நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே யென்னின்
அத்துவா மார்க்கத் துள்ளான் அலனிவன் அருமை தன்னைப்
புத்திதா னுடையை போல இருந்தனை புகலக் கேள்நீ. 62
உலகினில் பதார்த்த மெல்லாம் உருவமோ னருவ மாகி
நிலவிடு மொன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல
அலகிலா அறிவன் றானும் அருவமே யென்னி லாய்ந்து
குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்திடாயே. 63
பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்
அந்தமும் ஆதி யில்லான் அளப்பில னாத லாலே
எந்தைதான் இன்ன னென்றும் இன்னதா மின்ன தாகி
வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே. 64
குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத லானும்
செறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே. 65
ஆரணம் ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு
காரணன் அருளா னாகில் கதிப்பவ ரில்லை யாகும்
நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
சீரணி குருசந் தானச் செய்தியும் சென்றி டாவே. 66
உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும்
கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம்
தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி
அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே. 67
உலகினை இறந்து நின்ற தரன்உரு வென்ப தோரார்
உலகவ னுருவில் தோன்றி ஒடுங்கிடு மென்றும் ஓரார்
உலகினுக் குயிரு மாகி உலகுமாய் நின்ற தோரார்
உலகினி லொருவ னென்பர் உருவினை யுணரா ரெல்லாம். 68
தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர்
ஆவது முணரார் ஆதி அரிஅயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரார் அவனுரு விளைவு மோரார். 69
போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர். 70
ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
நின்றலால் உலக நீங்கி நின்றனன் என்று மோரார்
அன்றிஅவ் வேட மெல்லாம் அருள்புரி தொழிலென் றோரார்
கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணமென் றோரார். 71
நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார். 72
கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு
விண்ணுசு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார். 73
படைப்பாகித் தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும்,
இடப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்,
அடைப்பானாம் அதுவும் முத்தி யளித்திடு மியோகும் பாகந்,
துடைப்பானாந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே. 74
உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே. 75
அத்துவா மூர்த்தி யாக அறைகுவ தென்னை என்னின்
நித்தனாய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலைமை யானும்
சித்துடன் அசித்திற் கெல்லாம் சேட்டித னாத லானும்
வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைக ளெல்லாம். 76
மந்திர மத்து வாவின் மிகுத்தொரு வடிவ மாகத்
தந்ததென் அரனுக் கென்னில் சகத்தினுக் குபாதா னங்கள்
விந்துமோ கினிமான் மூன்றா மிவற்றின்மே லாகி விந்துச்
சிந்தையா ரதீத மான சிவசத்தி சேர்ந்து நிற்கும். 77
சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றிய ஆத லானும்
சத்திதான் பிரேரித் துப்பின் தானதிட் டித்துக் கொண்டே
அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே
வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம். 78
மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தானும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே. 79
அயன்றன் ஐஆதி ஆக அரனுரு வென்ப தென்னை
பயந்திடுஞ் சத்தி யாதி பதிதலாற் படைப்பு மூலம்
முயன்றனர் இவரே யாயின் முன்னவ னென்னை முற்றும்
நயந்திடும் அவனி வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே. 80
சத்திதான் பலவோ வென்னில் தானொன்றே அநேக மாக
வைத்திடுங் காரி யத்தான் மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடு மொருவன் சத்தி போலரன் உடைய தாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம். 81
சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞான மாகும்
உய்த்திடு மிச்சை செய்தி இவைஞானத் துளவோ வென்னின்
எத்திற ஞான முள்ள தத்திற மிச்சை செய்தி
வைத்தலான் மறைப்பில் ஞானால் மருவிடுங் கிரியை எல்லாம். 82
ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியையென் றொருமூன் றாகி
நின்றிடுஞ் சத்தி இச்சை உயிர்க்கருள் நேச மாகும்
நன்றெலாம் ஞான சத்தி யால்நயந் தறிவன் நாதன்
அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகில மெல்லாம். 83
சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான்
ஆவனென் றிடின்அ நாதி மலம்இவற் றினைம றைக்கும்
காவல னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன்
பாவியாம் புத்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும். 84
ஞானமே யான போது சிவன்தொழில் ஞான மொக்கின்
ஈனமில் சதாசி வன்பே ரீசனாந் தொழில தேறின்
ஊனமேற் கிரியை வித்தை உருத்திரன் இலய போகம்
ஆனபே ரதிகா ரத்தோ டதிகர ணத்த னாமே. 85
வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்கள் ஐந்துஞ்
சுத்ததத் துவஞ்சி வன்தன் சுதந்திர வடிவ மாகும்
நித்தமென் றுரைப்பர் கால நீங்கிய நிலைமை யாலே
வைத்திலர் முற்பிற் பாடு வருவித்தார் கருமத் தாலே. 86
ஒருவனே இராவ ணாதி பாவக முற்றாற் போலத்
தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையும் திரியா னாகும்
வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும்
இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும். 87
பொன்மைநீ லாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின்
தன்மையாய் நிற்கு மாபோல் சத்திதன் பேத மெல்லாம்
நின்மலன் தானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன்
முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே. 88
சத்தியுஞ் சிவமு மாய தன்மைஇவ் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார். 89
சிவன்அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்தும் அல்லன்
பவமுதல் தொழில்க ளொன்றும் பண்ணிடு வானும் அல்லன்
தவமுத லியோக போகம் தரிப்பவ னல்லன் தானே
இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல்பினானே.
சுபக்கம் |
||||||||
by C.Malarvizhi on 27 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|