|
|||||
தமிழ் - தாய்மொழியா? வாய்மொழியா? -3 |
|||||
![]()
ஒட்டாத உறவுகள்
சமீபத்தில் நண்பர் ஒருவர் அவர் அம்மாவை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தார். பேரன் பேத்தியை பார்க்கும் ஆவலோடு வந்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பேரன் பேத்திக்கு தமிழ் தெரியாது , அந்த அம்மாவிற்கு ஆங்கிலம் தெரியாது. கடைசியில் அந்த பாட்டியுடன் குழந்தைகள் கடைசி வரை ஒட்டவே இல்லை. எனவே அந்த பாட்டி இரண்டு மாதத்தில் வெறுத்துப்போய் இந்தியா சென்றுவிட்டார்கள். அந்த குழந்தைகளுக்கு பாட்டி, தத்தா என்ற உறவு இருந்தும் இல்லாமல் வழிபோக்கர்கள் போல் ஆகிவிடுகிறது. கல்வி, வேலை, மதிப்பெண், வெளிநாட்டு சூழல் என்பதை தாண்டி இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளிடம் வீட்டில் தமிழில் உரையாடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய உறவுகளை மேம்படுத்தமுடியும். நாம் கேட்ட பாட்டி கதைகளை, கோடை விடுமுறையில் நாம் நம் உறவுகளிடம் அனுபவித்த அந்த இன்பத்தை நம் குழந்தைகளுக்கு ஏற்ப்படுத்தி தரவேண்டாமா என்பதை இன்றைய இளம் பெற்றோர்கள் சிந்திக்கவேண்டும்.
இலக்கிய அனுபவம்
இன்று நம் குழந்தைகள் படிக்கும் கணக்கு, அறிவியல், கணிப்பொறி என்பது அவர்களின் IQ வை வேண்டுமானால் வளர்க்கலாம். ஆனால், வாழ்வியலை, தன்னம்பிக்கையை, சிந்தனையை,ஆன்ம பலத்தை, இன்பம், துன்பம், நெருக்கடிகள் என அனைத்தையும் சமாளிக்கும் திறனை நம் இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும் தான் தரமுடியும். காரணம், நம் நூல்களின் வாயிலாக வெற்றி, தோல்வி என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெறமுடிகிறது. அதுமட்டுமல்லாது, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி போன்றவை ஒவ்வொருவரின் பேச்சுத்திறன்,சிந்தனைத்திறன்,எதிரில் யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தன் கருத்தை பதிவுசெய்வது போன்ற திறமைகளை வளர்க்கிறது. கல்வி என்பது மாணவர்களை, அவர்களின் உள்ள உணர்வுகளை தட்டி எழுப்பி, அவர்களுக்குள் உள்ள தனித்திறனை உணர்த்துவதாக இருக்க வேண்டும். முதலில் கல்வியானது கற்றலை முதன்மைப்படுத்தியதா? ஊடகத்தை (பயிற்றுமொழி) முதன்மைப்படுதியதா? அறிதலை முதன்மைப்படுத்தியதா? வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தியதா? என்பதை சிந்திக்க வேண்டும்.
தாய்மொழி என்பது பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உணர்வுகளோடு ஒட்டிய சிந்தனை மொழியாகும். இன்றைய வெளிநாட்டு வாழ்க்கை சூழலில், தமிழகத்தில் இருந்தாலும் பன்னாட்டு வேலைவாய்ப்பு சூழலில் பணியாற்றும் பெற்றோர்கள், ஆங்கிலத்தில் பேசுவதை, தமிழில் பேசாதிருப்பதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. பெற்றோர்கள் தாய்மொழியில் கதைகளை சொல்லி, நமக்குத் தெரிந்த விஷயங்களை குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டு , அன்பை, பணிவை, ஒழுக்கத்தை சொல்லித்தரும்பொழுது அந்த குழந்தை 50 சதவிகிதம் வாழ்வியல் அறிவு, 50 சதவிகிதம் கல்வி அறிவு என ஒரு முழுமையான சமூக சிந்தனையாளனாக , நல்ல குடிமகனாக , சாதனையாளராக உருவாக்க முடியும். எனவே ஒரு சுவாரசியம் மிக்க, ரசனை மிக்க தமிழ் சமுதாயத்தை உருவாக்க பெற்றோர்களால்தான் முடியும், அது நம் ஒவ்வொருவர் கையிலும்தான் உள்ளது என்பதை அறியவும்.
இன்றைய சூழலில் ஒரு தமிழராக நாம் என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொருவரும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசவும் அவர்களை தமிழ் கலாச்சாரத்தை, நம் வரலாறுகளை அறிந்துகொள்ளவும் ஊக்கப்படுத்தவேண்டும்.
தமிழர்களை சந்திக்கும்பொழுது "வணக்கம்" சொல்லி சகஜமாக பழகுதல். முடிந்தவரையில் ஆங்கிலத்தை தவிர்ப்பதை கொள்கையாகக் கொள்ளுதல். அமெரிக்காவிலும் மற்ற வெளிநாடுகளிலும் உள்ளவர்களும், வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ள மருத்துவர்கள், சாதனையாளர்கள் தமிழில் பேசுவதால் மட்டுமே, ஆங்கிலம் பேசுவதுதான் உயர்ந்தது , படித்தவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்ற கருத்தை மாற்ற முடியும் .
தமிழ் முறைப்படி திருமணங்களை நடத்துதல் அவற்றை ஊக்கப்படுத்துதல் .
நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை வைத்தல்
வீட்டில் குழந்தைகளுக்கு Uncle,Aunty,Mummy,Daddy போன்றவைகளுக்கு பதிலாக, மாமா, அத்தை, அம்மா, அப்பா எனப் பழக்குதல். தமிழ் தெரியாதவர்களுடன் மட்டும் ஆங்கிலம் பேசச் சொல்லிக்கொடுக்கலாம்.
வெளிநாடுகளுக்கு செல்லும்பொழுது, அருகில் உள்ள தமிழ் அமைப்புகளுடன், சங்கங்களுடன் இணைதல்.
வெளிநாடுகளில் வசிக்கும்பொழுது, உங்கள் பகுதிக்கு புதிதாக வரும் தமிழர்களை நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப உபசரித்தல். தமிழர்கள் ஒருவர் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதன் மூ லமே நம் தமிழ் சமுதாயம் ஒரு நெருங்கிய தொடர்புகளை, மகிழ்வான சூழ்நிலையை உடையதாக உருவாக்கமுடியும். இதில் நமக்கு பொருள் செலவு என்பது ஒன்றும் இல்லை.
எல்லோரிடமும் எல்லோரும் நட்பு பாராட்ட முடியாவிட்டாலும், முடிந்தவரை தமிழர்களை பகைத்துக்கொள்ளாமல்,சிறு சிறு குழுக்களாக பிரிந்து போகாமல் நட்பை பேணுதல். ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்தல்.
வேலை , தொழில் என பல்வேறு வகைகளில் தமிழர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் முன்னேற்றத்திற்கு நம்மால் இயன்றவற்றை செய்தல். ஒரு மார்வாடி சமூகம் இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் காரணம் அவர்கள் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைப்புமுறையாகும்.
தமிழ் விழாக்களில் வேஷ்ட்டி கட்டி, அனைவரிடமும் தமிழில் பேசுவது என்பது ஒரு புறம் சார்ந்த விஷயம், ஆனால் அகத்தளவில் நாம் சந்திக்கும் தமிழர்களிடம் ஒருவருக்கொருவர் என்ன விதமான பழக்கத்தை,விருந்தோம்பலை கொண்டிருக்கிறோம் என்பதே ஒரு கலாச்சாரமாக, நம் அடுத்த தலைமுறைக்கு போய்சேரும்.
தமிழ் சங்கங்களும், மற்ற அனைத்து தமிழ் அமைப்புகளும் தீபாவளி விழா, பொங்கல் விழா, தமிழர் திருநாள் விழா என்பதோடு செயல்பாடுகளை நிறுத்திவிடாமல், தமிழ் பள்ளிகளை உருவாக்குதல், தமிழ் மருத்துவர்கள், தமிழ் தொழில்முனைவோர்கள், தமிழ் சட்ட நிபுணர்கள் , தமிழ் சாதனையாளர்கள், தமிழ் கல்வியாளர்கள் என அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துதல், கவுரவித்தல் , அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குதல்.
தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் அவர்களுக்குக்கென்று ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கி ஒரு சேவை அமைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்கி, அவை நிரந்தரமாக, இணையதளத்தில் மட்டுமின்றி (Virtual), சொந்த கட்டிடத்தில் இயங்கும் வண்ணம் திட்டமிடுதல். இங்கு தமிழ் நூலகத்தை ஏற்படுத்தி அடுத்த தலைமுறையினர் தமிழ் வாசிக்கும் வசதியை ஏற்பதுத்திக்கொடுத்தல். பெற்றோர்கள், ஆன்றோர்கள் தமிழகத்தில் இருந்து இங்கு வரும்பொழுது, தமிழ் மக்கள் ஒன்று கூடும் இடமாக, பழகும் இடமாக, தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் இடமாக மாற்றுதல்.
இதன்முலம், தாய் தமிழகத்தைப்போலவே ஒரு வாழ்வியல் சுழலை அயல் நாடுகளிலும் உருவாக்கி, ஒரு இணக்கமான கலாச்சார சுழலை ஏற்படுத்துதல்.
கடிதங்களில் வாழ்ந்த நம் தமிழை நம் அடுத்த சந்ததிக்கு இ-மெயிலில் பயன்படுத்த பழக்குதல். தமிழர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலை தமிழில் எழுதுதல்.
விருப்பமுள்ளவர்கள் கையெழுத்தை தமிழில் போடலாம்
தமிழ் தகவல்கள் சார்ந்த நிறைய இணையதளங்களை, Blog போன்றவற்றை உருவாக்குதல், ஊக்குவித்தல்
இன்று மொழியளவில் அயல் நாடுகளில் உள்ள மொழிப்பற்றுகூட, தாய் தமிழகத்தில் இல்லை எனும் அளவிற்கு மேற்கத்திய கலாச்சார மோகம் பரவி வருகிறது. அவர்கள் அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ளவர்கள், மதிக்கக்கூடியவர்கள், வழிகாட்டியாக இருப்பவர்கள் தமிழை முதன்மைப்படுத்தி, மற்ற மொழிகளை இரண்டாம் நிலையில் நடைமுறையில் கொள்ளும்பொழுது, அதுவே தமிழகத்தில் உள்ள இளைஞர்களை , பெற்றோர்களை யோசிக்கவைக்கும்.
தமிழால் இணைவோம் ! தமிழர்களாய் உயர்வோம் !
ச. பார்த்தசாரதி
ஒட்டாத உறவுகள்
|
|||||
by Swathi on 13 Mar 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|