நியூயார்க் : உலகின் நம்பர் 1 சைக்கிள் பந்தயமான டூர் டி பிரான்சில் தொடர்ந்து 7 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று சாதனை படைத்த அமெரிக்க வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங், ஊக்கமருந்து சர்ச்சையால் தான் பெற்ற அத்தனை பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகையையும் இழக்கவிருக்கிறார். டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்திய ஆர்ம்ஸ்ட்ராங், ஊக்கமருந்து உபயோகித்துள்ளதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்புக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த வழக்கில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க தயாராக இல்லை என்று ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து, அவருக்கு ஆயுள் தடை விதிக்கப்படுவதுடன் சைக்கிள் பந்தயங்களில் அவர் வென்ற பட்டங்கள், பதக்கங்கள் பறிக்கப்படுகின்றன.
|