|
|||||
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை! |
|||||
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் தனித்தனி அலகுகளாக பாடங்கள் கற்றுத் தரப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதாக கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி கற்பதற்கான பாடங்களை திரைவடிவில் செயல்முறை விளக்கத்துடன் காண்பித்து, எளிய முறையில் கற்றுத்தரப்படுகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிக்கும் வசதி, அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்துள்ள மாநகராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளை டிஜிட்டல் வகுப்பறைகளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் கட்டமைப்பு, தகவல் தொலைத்தொடர்பு, சாலைப் பாதுகாப்பு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. பாடங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் திரைவடிவில் செயல்முறை விளக்கமாக கற்பிக்கப்படும். மேலும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப லேப்டாப்கள் வழங்கப்பட்டு அதன் மூலமாகவும் கல்வி கற்க வசதிகள் செய்யப்படும். கணினிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வகுப்பறைகளில் தனித்தனி மேஜை, இருக்கை, நவீன திரை, குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும். பள்ளியின் இயற்கைச்சூழலை பாதுகாக்க நிழல்தரும் மரங்கள் வளர்க்கப்படும். மாநகராட்சி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். |
|||||
by Mani Bharathi on 01 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|